சிறிசேன அரசை நம்ப முடியாது.. சொல்கிறார் ருத்திரகுமாரன்
லண்டன்: ராஜபக்சேவை தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் மைத்திரிபால சிறிசேனவுக்கு தமிழ் மக்கள் தங்களது வாக்குகளைப் பயன்படுத்தினர். சிறிசேன அரசால் தமிழ் மக்களுக்கு நல்லது நடக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. சிறிசேன அரசை நம்பவும் முடியாது என்று நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் ருத்திரகுமாரன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இலங்கையின் புதிய அரசாங்கம், விடுதலைப் புலிகளின் அரசியல் தலைவர்களான பாலகுமாரன், புதுவை இரத்தினதுரை, யோகி மற்றும் திலகர் ஆகியோருக்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்த வேண்டும்.
வன்னி, முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற இறுதிப் போரின் போது இவர்கள் அனைவரும் இலங்கைப் படையினரால் கைதுசெய்யப்பட்டனர்.
முன்னாள் ஜனாதிபதி ராஜபக்சேவை தோற்கடிப்பதற்காகவே தமிழ் மக்கள் தமது வாக்குகளை பயன்படுத்தினர். இதற்காக மைத்திரிபாலவின், ஆட்சியில் தமிழ் மக்களுக்கு மாற்றம் வரும் என்று நம்பமுடியாது.
மைத்திரிபாலவும் வன்னியின் இறுதிப் போரின் போது பாதுகாப்பு அமைச்சராக இருந்தவர் என்ற அடிப்படையில் அவரால் இறுதிப் போரின் போது போர்க் குற்றங்களில் ஈடுபட்ட படையினர் தொடர்பாக விசாரணைகளை நடத்த முடியாது என்று ருத்திரகுமாரன் குறிப்பிட்டுள்ளார்.