'சாருக்கு எப்ப கல்யாணம்'.. அடிக்கடி கிண்டல் செய்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர்.. என்னாச்சு தெரியுமா?
ஜகர்த்தா: கல்யாணம் ஆகாத 90ஸ் கிட்ஸ்கள் பலரை பார்த்து இன்றைய 2கே கிட்ஸ் அல்லது அந்த காலத்து ஆட்கள் கேட்கும் முதல் கேள்வி? எப்போது கல்யாணம் என்பது தான்? உன்னோடு படித்தவர்களுக்கு எல்லாம் திருமணம் ஆகிடுச்சு.. நீ மட்டும் ஏன் கல்யாணம் பண்ணல என்று கேட்பார்கள்.. அப்படி இந்தோனேஷியாவில் கேள்வி கேட்ட முதியவருக்கு என்ன கதி ஏற்பட்டது தெரியுமா? பாருங்கள்.
80களில் பிறந்தவர்கள் கல்யாணம் ஆகி மகிழ்ச்சியுடன் வாழ்கிறார்கள். 2000க்குபிறகு பிறந்தவர்களும் கல்யாணம் ஆகி சந்தோஷமாக வாழ்கிறார்கள். 1985 முதல் 1995 வரை பிறந்த 90ஸ் கிட்ஸ்கள் திருமணம் ஆகாமல் தவிக்கிறார்கள். திருமணத்திற்கு பெண் தேடினால், எவ்வளவு வசதி உள்ளது. கடன் உள்ளதா, சொந்தமாக வீடு உள்ளதா, கார் உள்ளதா, கல்யாணத்திற்கு பிறகு தனி வீடு பார்ப்பீர்களா, சென்னையில் செட்டில் ஆவீர்களா, பெங்களூரில் செட்டில் ஆவீர்களா, பேங்க் பேலன்ஸ் என்ன என்று கேட்பார்கள்.. நல்ல வசதியும், அழகும் உள்ள மாப்பிள்ளைகளுக்கு உடனே திருமணம் ஆகிறது.

ஆனால் மற்றவர்களுக்கு திருமணம் நிச்சயம் ஆவதில்லை.. அழகாக இல்லை என்று பணக்கார மாப்பிள்ளைகளும், பணம் இல்லை என்று ஏழை மாப்பிள்ளைகளும் நிராகரிக்கப்படுகிறார்கள். இதற்கு காரணம், கடந்த 20 வருடங்களில் நடந்த மக்கள் தொகை கட்டுப்பாடு தான். பல வீடுகளில் ஒரு குழந்தை அல்லது இரு குழந்தைகளே பிறந்த காரணத்தால் ஆண், பெண் பாலின விகிதம் மாறியிருக்கிறது.
குறிப்பிட்ட சாதிகளில் பெண்கள் ஆண்கள் திருமணம் செய்து கொள்ளும் வயது வித்தியாசம் 10 வருடம் வரை கூட இருக்கிறது. அப்படி 10 வருடம் காத்திருந்தாலும் பெண் கிடைக்காத நிலை பல சாதிகளில் இன்றும் உள்ளது. இது எதார்த்தம்.. இப்படியான சூழலில் திருமணம் எப்போது என்று அடிக்கடி கேள்வி கேட்கும் முதியவர்களை பார்த்து 90ஸ்கிட்ஸ்கள் எரிச்சல் அடைகிறார்கள். அதேபோல் சிலர், 90ஸ் கிட்ஸ்களின் வாழ்க்கையில் திருமணம் நடைபெறாத அளவிற்கு, அவர்களை பற்றி தப்பு தப்பாக பெண் வீட்டாருக்கு கூறி விடுகிறார்கள்.. அப்படிப்பட்ட முதியவர்கள் குறித்து நம்மூரில் போஸ்டரே அடித்துள்ளார்கள்.
இப்படி எல்லாம் தமிழ்நாட்டில் நடந்துள்ள நிலையில், இந்தோனேசியாவில் 45 வயது நபர் ஒருவர், ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை என அடிக்கடி கேள்வி கேட்டு டார்ச்சர் செய்த பக்கத்து வீட்டு முதியவரை கொலையே செய்திருக்கிறார். இந்தோனேஷியாவில் வசிக்கும் சிரேகருக்கு 45 வயது ஆகிறது. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.. பல இடங்களில் பெண் தேடியும் இவருக்கு இன்றுவரை அமையவில்லை.. இதனிடையே இவரது அண்டை வீட்டில் வசித்து வந்தவர்தான் 60 வயது முதியவரான அசிம் இரியாண்டோ. இவர் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஆவார்.
ஓய்வு பெற்ற அரசு ஊழியரான அசிம் தனது அண்டை வீட்டுக்காரரான சிரேக்கை பார்க்கும் போதெல்லாம், "எப்போது திருமணம் செய்துகொள்ள போகிறாய்?" என்று கிண்டலாக கேள்வி கேட்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். இதனால் ஒரு கட்டத்தில் கடும் மன உளைச்சலுக்கு ஆளான சிரேக், இவரை சும்மா விடக்கூடாது என்று முடிவு செய்ததுடன், கடந்த ஜுலை 29 ஆம் தேதி அன்று கடும் கோபத்துடன் அசிம் வீட்டின் கதவை தட்டி உள்ளார்.
ஆனால் பயந்து போன அசிம் கதவை திறக்கவில்லை. இதனால் மேலும் ஆத்திரமடைந்த சிரேக் வீட்டு கதவை அடித்து உடைத்தார்.. நேரடியாக அசிமை மரக்கட்டையால் பலமாக தாக்கியுள்ளார். அசிம் தெருவில் ஓடி தப்பிக்க முயன்றிருக்கிறார். ஆனாலும் விடாத சிரேக், அவரை பிடித்து மீண்டும் பலமாக தலையில் அடித்துள்ளார் . இதனையடுத்து, சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் தடுத்துள்ளனர்.
அதன் பின்னர ஓய்வு பெற்ற அரசு ஊழியர் அசிமை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டார். இதுபற்றி அசிமின் மனைவி போலீசாரிடத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து சிரேக் உடனடியாக கைது செய்யப்பட்டார். அவரிடம் ஏன் இப்படி செய்தார் என்று போலீசார் காரணம் கேட்டுள்ளனர்..அதற்கு சிரேக் கூறுகையில் , " கல்யாணம் எப்போது? என்று எப்போது பார்த்தாலும் கேள்வி கேட்டு கிண்டல் செய்தார். இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான நான் அவரை அடித்துக் கொன்றுவிட்டேன்" என்று தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் இந்தோனேஷியாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications