ஈரான் அனுப்பிய சரமாரி ஏவுகணைகள்.. பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பு செய்த சேட்டைகள் என்ன? பரபர தகவல்
தெஹ்ரான்: பாகிஸ்தான் நாட்டில் உள்ள பயங்கரவாத முகாம்களில் ஈரான் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், இதற்கான காரணம் மற்றும் பின்னணியை நாம் பார்க்கலாம்.
மத்திய கிழக்கு நாடுகளில் இப்போது பதற்றமான சூழல் நிலவி வருகிறது. ஏற்கனவே அங்கே இஸ்ரேல் ஹமாஸ் மோதல், செங்கடலில் ஹவுதி அத்துமீறல்கள் எனத் தாக்குதல்கள் தொடர்கிறது.

இதற்கிடையே இதில் ஈராக்கும் இணைந்துள்ளது. நேற்றைய தினம் தான் ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள பல்வேறு இலக்குகளை மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்களை நடத்தி இருந்தது.
பாகிஸ்தானில் தாக்குதல்: தொடர்ந்து இப்போது பாகிஸ்தானிலும் ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் இருக்கும் ஜெய்ஷ் அல் அட்ல் பயங்கரவாத அமைப்பின் முகாம்களைக் குறிவைத்து ஈரான் சரமாரி ஏவுகணை தாக்குதல்களை நடத்தியுள்ளது.
மொத்தம் இரண்டு இடங்களைக் குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் அரசும் உறுதி செய்துள்ளது. பாகிஸ்தான் இந்தத் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், இந்தத் தாக்குதலில் இரண்டு குழந்தைகள் கொல்லப்பட்டதாகப் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. மேலும், இந்தத் தாக்குதலை ஏற்கவே முடியாது என்றும் இதற்குக் கடுமையான விளைவுகளைச் சந்திக்க வேண்டும் என்றும் பாகிஸ்தான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
யார் இவர்கள்: இந்தத் தாக்குதலால் பாகிஸ்தான் - ஈரான் இடையே போர் உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஈரான் திடீரென இந்த தாக்குதலை நடத்த என்ன காரணம்.. இந்த ஜெய்ஷ் அல் அட்ல் அமைப்பினர் யார் என்பது குறித்து நாம் பார்க்கலாம். ஜெய்ஷ் அல்-அட்ல் என்றால் அரபு மொழியில் நீதியின் ராணுவம் என்று அர்த்தம்..
சிரியாவில் உள்ள பஷர் அல்-அசாத்துக்கு ஈரான் ஆதரவு கொடுக்கும் நிலையில், அதை எதிர்த்து சலாவுதீன் ஃபரூக்கி என்பவர் கடந்த 2012இல் ஜெய்ஷ் அல் அட்ல் என்ற இந்த அமைப்பை நிறுவினார். இந்த ஜெய்ஷ் அல்-அட்ல் அமைப்பு சிஸ்தான்-பலுசெஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் சில பகுதிகளில் இருந்து செயல்பட்டு வருகிறது.
இந்த அமைப்பிற்கு பலுச் பழங்குடியினர் ஆதரவு அதிகமாகவே இருக்கிறது. குறிப்பாக ஷியா ஆதிக்கம் செலுத்தும் ஈரானில் சன்னி முஸ்லிம்கள் பாகுபாட்டை எதிர்கொள்ளும் நிலையில், அங்கே இந்த ஜெய்ஷ் அல் அட்ல் குழுவுக்கு ஆதரவு அதிகமாக இருக்கிறது
குண்டுவெடிப்புகள்: ஈரான் ராணுவத்தைக் குறிவைத்துப் பல குண்டுவெடிப்புகள், பல தாக்குதல்களை இந்த அமைப்பு நடத்தியுள்ளது. மேலும், ஈரானிய பாதுகாப்புப் படை வீரர்கள் பலரையும் இந்த அமைப்பு கடத்தியுள்ளது. இந்தத் தாக்குதல்களுக்கு ஜெய்ஷ் அல்-அட்ல் அமைப்பே பொறுப்பேற்றும் இருந்தது. அமெரிக்கா, இஸ்ரேல், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அமீரக நாடுகளின் ஆதரவு இந்த பயங்கரவாத அமைப்பிற்கு இருப்பதாக ஈரான் குற்றஞ்சாட்டுகிறது.
தாக்குதல்கள்: கடந்த அக்டோபர் 2013இல், ஜெய்ஷ் அல்-அட்ல் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தான் எல்லையில் இருந்த 14 ஈரான் வீரர்கள் கொல்லப்பட்டனர். சிரியாவில் ஈரான் ராணுவம் தலையிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்தத் தாக்குதலை நடத்தியதாக ஜெய்ஷ் அல் அட்ல் விளக்கம் கொடுத்து இருந்தது. அதேபோல பிப்ரவரி 2014இல், ஐந்து ஈரான் வீரர்கள் இந்த அமைப்பு கடத்தியது. இது ஈரான் பாகிஸ்தான் இடையே பதற்றத்தை அதிகரித்தது.
இதுபோல ஈரான் மீது பல்வேறு தாக்குதல்களை இந்த அமைப்பு நடத்தியுள்ளது. இதன் காரணமாகவே இப்போது எல்லை கடந்த பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களில் ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications