போலி பெயர், இந்திரா செய்த பெரும் உதவி.. வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு இந்தியா அடைக்கலம் தந்த கதை
டாக்கா: வங்கதேச நாடாளுமன்றத் தேர்தலில் ஷேக் ஹசீனா வென்று பிரதமர் பதவியைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார். இதே ஷேக் ஹசீனாவுக்கு ஒரு காலத்தில் இந்தியா அடைக்கலம் கொடுத்த கதை உங்களுக்குத் தெரியுமா.. இது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
வங்கதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தலில் ஷேக் ஹசீனா தொடர்ந்து நான்காவது முறையாக வங்கதேச பிரதமராகப் பதவியேற்றார். அவரது அவாமி லீக் கட்சி பதிவான மொத்த வாக்குகளில் மூன்றில் இரண்டு பங்கை வென்றது. இதன் மூலம் நாடாளுமன்றத்தில் 300இல் 250+ இடங்களை அவாமி லீக் கைப்பற்றியுள்ளது.

ஷேக் ஹசீனா: இதன் மூலம் நான்காவது முறையாக ஷேக் ஹசீனா தனது பிரதமர் பதவியைத் தக்க வைத்துள்ளார். வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவுடன் நீண்ட ஒரு நல்லுறவைக் கொண்டுள்ளார். சமீபத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசும் போது கூட இந்தியா ஒரு நம்பகமான நண்பன் என்றும் எங்களுக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள் என்றும் கூறியிருந்தார்.
இந்தியா வங்கதேசம் இடையே நீண்ட காலமாகவே நல்லுறவு இருந்து வருகிறது. 1971ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான வங்கதேச விடுதலைப் போரில் இந்தியா வங்கதேசத்திற்கு மிக பெரியளவில் உதவியது. அந்தக் காலகட்டத்தில் தற்போதைய வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா உயிருக்கு அச்சுறுதல் இருந்தது. இதையடுத்து அப்போது அவருக்கு இந்தியா புகலிடம் கொடுத்தது. சுமார் 6 ஆண்டுகள் வரை அவர் இந்தியாவில் இருந்தார்.
நன்றி சொன்ன ஷேக் ஹசீனா: இதைக் குறிப்பிட்டே வங்கதேச விடுதலைக்கு மட்டுமின்றி, தனது வாழ்க்கையின் மிகவும் கடினமான காலத்தில் தன்னைப் பாதுகாப்பாக வைத்திருந்ததற்காகவும் இந்தியாவுக்கு நன்றி தெரிவிப்பதாகக் கூறினார். அந்த 6 ஆண்டுகள் ஷேக் ஹசீனா டெல்லியில் உள்ள பண்டாரா சாலையில் தனது குழந்தைகளுடன் வேறு ஒரு பெயரில் வசித்து வந்தார். அவருக்கு என்ன நடந்தது.. ஏன் அவர் இந்தியாவுக்கு வந்தார் என்ற கேள்வி வரலாம்.. இது குறித்து நாம் பார்க்கலாம்.
1975ஆம் ஆண்டு அவரது குடும்பம் வங்கதேச ராணுவத்தாலேயே படுகொலை செய்யப்பட்டது. 1971இல் வங்கதேசம் சுதந்திரம் அடைந்தது. இருப்பினும், நான்கு ஆண்டுகள் கழித்து 1975இல் வங்கதேச ராணுவம் ஆட்சி கவிழ்ப்பை நடத்த முயன்றனர். அப்போது ஷேக் ஹசீனாவின் தந்தையும் மூத்த அரசியல்வாதியுமான ஷேக் முஜிபுர் ரஹ்மான் படுகொலை செய்யப்பட்டார். அவரது மாமா மற்றும் 10 வயது இளைய சகோதரர் உட்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த 18 உறுப்பினர்கள் 1975 ஆகஸ்ட் 15இல் கொல்லப்பட்டனர்.
இந்திரா காந்தி: இதையடுத்து வங்கதேசத்தில் பெரிய போராட்டங்கள் நடைபெற்றது. இந்த படுகொலை சம்பவம் நடந்த போது ஷேக் ஹசீனா ஐரோப்பாவில் இருந்தார். இதன் காரணமாகவே அவர் இந்த படுகொலையில் இருந்து தப்பினார். வங்கதேச விடுதலைக்குப் பெரியளவில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி உதவியிருந்தார். இதையடுத்து ஷேக் ஹசீனாவுக்கும் இந்தியா உதவும் என்று இந்திரா காந்தி அறிவித்தார்.
அதன்படி இந்தியா வந்த ஷேக் ஹசீனா பலத்த போலீஸ் பாதுகாப்புடன் டெல்லியில் தங்க வைக்கப்பட்டார். இது குறித்து சமீபத்தில் ஷேக் ஹசீனா கூறுகையில், "இந்திரா காந்தி தான் எங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்தார். எனது கணவருக்கு ஒரு வேலை கொடுத்தார். நாங்கள் தங்க பண்டாரா சாலையில் வீட்டையும் கொடுத்தார். அப்போது எனது இரு குழந்தைகளும் கைக்குழந்தைகள். இதனால் முதல் 2-3 ஆண்டுகள் ரொம்பவே கடினமாக இருந்தது" என்றார்.
போலி பெயர்: அதன் பின்னரே ஷேக் ஹசீனா டெல்லிக்கு வந்தார். டெல்லியில் இருந்தாலும் கூட அவரது உயிருக்குத் தொடர்ந்து அச்சுறுதல் இருந்தது. இதனால் உண்மையான பெயர்களை மறைத்து போலி பெயர்களுடனேயே அவர் வாழும் சூழல் இருந்தது. 1981ஆம் ஆண்டு வரை சுமார் ஆறு ஆண்டுகள் வரை அவர் இப்படி வசித்தார். அதன் பின்னரே தனது குடும்பத்தினரை கொலை செய்தவர்களுக்குத் தண்டனை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அவர் பல உலக நாடுகளுக்குச் சென்று உலக தலைவர்களையும் சந்தித்தார்.
அப்போது வங்கதேசத்திலும் ராணுவ ஆட்சி கவிழ்ந்தது. இதையடுத்து தனது சொந்த நாட்டிற்குச் சென்ற அவர், அவாமி லீக் கட்சிக்குத் தலைமை தாங்கினார். 1996இல் முதலில் அவர் தேர்தலில் வென்று பிரதமர் ஆனார். 2001இல் பிரதமர் பதவியை இழந்த போதிலும், ஏழே ஆண்டுகளில் மீண்டும் அவர் தேர்தலில் வென்று 2008இல் பிரதமர் ஆனார். அதன் பிறகு அவரை வீழ்த்தவே முடியவில்லை.












Click it and Unblock the Notifications