Mosquirix - உலகின் முதல் மலேரியா வேக்சினுக்கு WHO ஒப்புதல்.. இனி பல லட்சம் குழந்தைகளை காப்பாற்றலாம்
ஜெனீவா: ஆண்டுக்கு 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழக்கக் காரணமாக இருக்கும் மலேரியா நோய்க்கான முதல் தடுப்பூசியான மாஸ்க்ரிக்ஸ் வேக்சினுக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.
கடந்த 1.5 ஆண்டுகளாகவே அனைத்து நாடுகளுக்கும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதே பெரும் போராட்டமாக இருந்து வருகிறது. கொரோனா வேக்சின் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அடுத்தாண்டு கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேநேரம் கொரோனா இல்லாமல் மற்ற நோய்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் இந்த காலகட்டத்தில் பாதிக்கப்பட்டன. இதனால், மற்ற நோய்களால் ஏற்படும் உயிரிழப்பு, குறிப்பாகக் குழந்தைகள் மத்தியில் அதிகரிக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்திருந்தது.

மலேரியா நோய்
சர்வதேச அளவில் பல ஆண்டுகளாகவே மோசமான பிரச்சினையாக உள்ளது என்றால் அது மலேரியா தொற்று தான். மலேரியாவால் ஆண்டுக்கு சுமார் 4 லட்சத்திற்கும் அதிகமானோர் பலியாகின்றனர். அதில் பெரும்பாலானோர் பின்தங்கிய ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்தவர்களாகும். மலேரியாவுக்கு வேக்சினை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் பல்வேறு நிறுவனங்களும் ஈடுபட்டுள்ளன. அப்படி பிரிட்டன் நாட்டை சேர்ந்த ஜிஎஸ்கே என்ற மருந்து நிறுவனம் கடந்த 1987ஆம் ஆண்டில் முதன்முதலாக இந்த மலேரியா வேக்சினை உருவாக்கியிருந்தது.

Mosquirix வேக்சின்
கொரோனா வைரசுக்கு மட்டுமே இருந்த அவசர நிலையைக் கருதி வெறும் சில மாதங்கள் மட்டும் மருத்துவ சோதனைகள் நடத்தப்பட்டு அவசர அவசரமாக வேக்சின்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டன. ஆனால், பொதுவாக ஒரு வேக்சினுக்கு அனுமதி தரப் பல ஆண்டுகள் ஆகும். ஒவ்வொரு கட்ட சோதனையும் கூட சில ஆண்டுகள் வரை நடைபெறும். அப்படி இந்த Mosquirix வேக்சின் சோதனை முதலில் 1987இல் தொடங்கியது. முதல் ஆண்டில் இந்த வேக்சின் 50% வரை தீவிர மலேரியா பாதிப்பைத் தடுப்பது தெரிய வந்தது. கடந்த 2014ஆம் ஆண்டு நடத்தப்பட்ட 3ஆம் கட்ட சோதனையில் இந்த வேக்சின் சுமார் 36% வரை தடுப்பாற்றலை தருவது உறுதியானது.

ஆப்பிரிக்க நாடுகள்
கடந்த 2016ஆம் ஆண்டு கானா, கென்யா மற்றும் மலாவி ஆகிய நாடுகளில் இந்த வேக்சின் குறித்த சோதனை திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. அங்குள்ள குழந்தைகளுக்கு இந்த மலேரியா வேக்சின் வழங்கப்பட்டது. இந்த வேக்சினை குழந்தை பிறந்து 5 முதல் 17 மாதங்கள் வரை 3 டோஸ்களாக வழங்கப்பட வேண்டும். அதேபோல கடைசி டோஸை 18 மாதங்களுக்குப் பிறகு வழங்க வேண்டும். இந்த சோதனை திட்டத்தில் 4 நாடுகளிலும் மலேரியா பாதிப்பு கணிசமாகக் குறைந்துள்ளது. இதையடுத்து இந்த Mosquirix வேக்சினுக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது,

மலேரியா உயிரிழப்புகள்
ஆப்பிரிக்காவிலும் மலேரியா பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளிலும் குழந்தைகளுக்கு இரண்டு வயது வரை நான்கு டோஸ்கள் இந்த வேக்சினை கொடுக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்துள்ளது. ஒவ்வொரு இரண்டு நிமிடங்களுக்கும், ஒரு குழந்தை மலேரியாவால் உயிரிழப்பதாகவும் உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது. சர்வதேச அளவில் ஏற்படும் மலேரியா உயிரிழப்புகளில் 50% மேல், வெறும் ஆறு ஆப்பிரிக்க நாடுகளில் ஏற்படுகிறது. குறிப்பாக உலகின் ஏற்படும் மலேரியா உயிரிழப்புகளில் கிட்டத்தட்ட 25% நைஜீரியாவில் மட்டுமே ஏற்படுவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த வேக்சின் இதுபோல மலேரியா பாதிப்பால் ஏற்படும் உயிரிழப்புகளைக் குறைக்கும் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications