2 ஆண்டுகள் ஆச்சு.. கொரோனா தோற்றம் குறித்த ஆய்வு என்னாச்சு? WHO தலைவரின் முக்கிய மீட்டிங்.. பின்னணி
பெய்ஜிங்: கொரோனா பரவல் தொடங்கி 2 ஆண்டுகள் முடிந்துவிட்ட நிலையில், கொரோனா தோற்றம் ஆய்வுகள் குறித்து டெட்ரோஸ் அதானோம் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகின் அனைத்து நாடுகளுக்கும் பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ள ஒரே பிரச்சினை கொரோனா தான். இதனால் கடந்த இரு ஆண்டுகளாக மக்கள் பட்டபாடு கொஞ்ச நஞ்சம் இல்லை.
இப்போது அனைத்து நாடுகளும் வேக்சின் பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. இதன் காரணமாக உலகில், இயல்பு வாழ்க்கை மெல்லத் திரும்பி வருகிறது.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரசுக்கு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் கூட, கொரோனா வைரஸ் தோற்றம் என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது. ஹுபே மாகாணத்தில் அமைந்துள்ள வூஹான் நகரின் விலங்கு சந்தையில் இருந்து வைரஸ் பரவியிருக்கலாம் என முதலில் கூறப்பட்டது. அதேநேரம் இன்னொரு தரப்பினர் வூஹான் வைராலஜி ஆய்வு மையத்தில் இருந்து கொரோனா வைரஸ் பரவியிருக்கலாம் என்ற கூறினர்.

வூஹான் ஆய்வகம்
குறிப்பாகக் கடந்த ஆண்டு ஜூன்- ஜூலை மாதங்களில் கொரோனா தோற்றம் குறித்து அமெரிக்கப் புலனாய்வுத் துறை முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் கடந்த 2019 அக்டோபர்- நவம்பர் காலத்திலேயே, வூஹான் மையத்தில் பணிபுரிந்த சிலருக்கு கொரோனா ஒத்த பாதிப்பு ஏற்பட்டிருந்ததாகக் கூறப்பட்டிருந்தது. இது குறித்து விசாரணை நடத்த அமெரிக்க அதிபர் பைடனும் உத்தரவிட்டிருந்தார். அமெரிக்கா மட்டுமின்றி பிரிட்டன், கனடா உள்ளிட்ட நாடுகளின் உளவு அமைப்புகளும் இதே கருத்தை முன் வைத்திருந்தன.

முக்கிய சந்திப்பு
இதற்கிடையே கொரோனா தோற்றம் குறித்து மீண்டும் சீனாவுக்குச் சென்று ஆய்வு செய்ய உலக சுகாதார அமைப்பு திட்டமிட்டிருந்தது. இருப்பினும், அதற்குச் சீனா அனுமதி அளிக்கவில்லை. இந்தச் சூழலில் கொரோனா தோற்றம் குறித்து சீன பிரதமர் லீ கெகியாங்குடன் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார். கொரோனா தோற்றம் குறித்த விவகாரத்தில் சீனா முழு ஒத்துழைப்பை அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

கொரோனா தோற்றம்
இது தொடர்பாக டெட்ரோஸ் அதானோம் தனது ட்விட்டர் பக்கத்தில், "சீன பிரதமர் லி கெகியாங்கைச் சந்திப்பதில் மகிழ்ச்சி. கொரோனா வைரஸ் குறித்தும் உலக மக்கள் தொகையில் குறைந்தது 70% பேருக்கு இந்தாண்டு தடுப்பூசி போடும் வேக்சின் சமநிலை குறித்தும் நாங்கள் விவாதித்தோம். கொரோனா தோற்றம் குறித்து அறிவியல்பூர்வமாக ஆய்வு செய்ய வேண்டிய அவசியத்தையும் நாங்கள் விவாதித்தோம்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

சீனா கூறுவது
உலக சுகாதார அமைப்பு கொரோனா தோற்றம் குறித்த ஆய்வுகளில் தொடர்ந்து தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. இதற்காகத் தனியாக அறிவியல் ஆலோசனைக் குழுவை அமைத்த உலக சுகாதார அமைப்பு முதலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் தரவுகளை வழங்கச் சீனாவுக்கு அழைப்பு விடுத்தது. இருப்பினும், நோயாளியின் தனியுரிமை விதிகளை மேற்கோள் காட்டி சீனா இதற்கு மறுத்துவிட்டது.

முக்கியம்
இது வூஹான் ஆய்வகத்தில் இருந்து கொரோனா பரவியிருக்கலாம் என்ற தகவலுக்கு வேலும் வலுசேர்ப்பதாக இருந்தது. இருப்பினும், இது தொடர்பாக உலக நாடுகளின் குற்றச்சாட்டுகளைச் சீனா தொடர்ந்து மறுத்தே வருகிறது. இந்தச் சூழலில் சீன பிரதமரை உலக சுகாதார அமைப்பின் தலைவரை நேரடியாக டெட்ரோஸ் அதானோம் சந்தித்துள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. விரைவில் இது தொடர்பாக முக்கிய தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications