கொரோனா ஓர் ஆண்டு நிறைவு... முறையாக தடுப்பு மருந்தை விநியோகிக்க வேண்டும் - உலக சுகாதார அமைப்பு
ஜெனிவா: கொரோனா பரவ தொடங்கி இன்றுடன் ஓர் ஆண்டு நிறைவடைந்துள்ள நிலையில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் ஒரே நம்பிக்கையாக இருக்கும் தடுப்பு மருந்தை உலக நாடுகளுக்கு முறையாக விநியோகிக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
சீனாவின் ஹூபே மாகாணத்திலுள்ள வூஹான நகரில் கடந்தாண்டு இறுதியில் பொதுமக்கள் அதிகளவில் நிமோனியாவால் பாதிக்கப்பட்டனர்.
இது குறித்துக் கடந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி உலக சுகாதார அமைப்பிற்குச் சீனா தகவல் தெரிவித்தது.

கொரோனா பரவல்
அப்போதுதான் சீனாவில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவுவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்தது. சீனாவில் தொடங்கிய இந்த கொரோனா, தற்போது உலகின் அனைத்து நாடுகளுக்கும் பரவியுள்ளது

தடுப்பு மருந்தே ஒரே நம்பிக்கை
கொரோனா பரவல் தொடங்கி ஓர் ஆண்டு முடிந்துள்ள நிலையில், உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "இந்தக் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பு மருந்து மட்டுமே நமது ஒரே நம்பிக்கை.

புத்தாண்டில் உறுதி
ஆனால், கொரோனாவில் இருந்து உலகைப் பாதுகாக்க எல்லா இடங்களிலும் ஆபத்தான நிலையில் இருக்கும் மக்களுக்கு நாம் தடுப்பு மருந்துகளை வழங்க வேண்டும். பணக்கார நாடுகளுக்கு மட்டுமின்றி, வளரும் மற்றும் பின்தங்கிய நாடுகளுக்கும் தடுப்பு மருந்து கிடைப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும். புத்தாண்டு தினத்தில் நாம் இந்த உறுதியை எடுத்துக்கொள்ள வேண்டும்" என்றார்.

போலி செய்திகள்
கொரோனா மற்றும் தடுப்பு மருந்துகள் குறித்துப் பரவும் போலிச் செய்திகள் குறித்துப் பேசிய அவர், "இந்த நெருக்கடியில் நாம் கடைசி வரை ஒன்றாகப் போராட வேண்டும். ஒருவருக்கொருவர் உதவுவது, தடுப்பூசிகளைப் பகிர்வது, துல்லியமான தகவல்களை வழங்குவது என அனைத்திலும் நாம் ஒன்றாகப் பயணிக்க வேண்டும்" என்றார்

அழிக்க முடியாது
உலக சுகாதார அமைப்பின் அவசரக்கால பிரிவின் வல்லுநர் மைக் ரியான், "இந்த கொரோனா வைரஸ் அழிக்க முடியாத ஒரு தொற்றாக மாற வாய்ப்பு உள்ளது இருப்பினும், உலகெங்கும் தடுப்பு மருந்து விநியோகம் மூலம் இத்தொற்றின் பாதிப்பைக் குறைவாக வைத்துக் கொள்ளலாம்" என்றார்.

கொரோனா பாதிப்பு
கொரோனா பரவ தொடங்கி ஓர் ஆண்டு நிறைவடைந்துள்ள நிலையில், உலகெங்கும் இதுவரை 8.31 கோடி பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 18.12 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications