24 மணி நேரம் அவசர சிகிச்சை இல்லை.. இந்தியர் உயிரிழந்த விவகாரம்! வளர்ந்த நாட்டில் இப்படியொரு நிலைமையா
ஒட்டாவா: கனடாவில் உரிய நேரத்தில் மருத்துவச் சிகிச்சை கிடைக்காமல் இந்தியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது அங்கு மருத்துவ உட்கட்டமைப்பு எந்தளவுக்கு மோசமாக இருக்கிறது என்பதையே காட்டுகிறது. அங்கு அவசர சிகிச்சைக்கே 24 மணி நேரம் காத்திருக்க வேண்டி இருக்கிறதாம். அதேபோல சிறப்பு மருத்துவரைச் சந்திக்க 3 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டி இருக்கிறது.
கனடா நாட்டில் வசித்து வந்த 44 வயதான பிரசாந்த் ஸ்ரீகுமாருக்கு கடந்த வாரம் திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. அவர் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்றாலும் கூட உடனடியாகச் சிகிச்சை கிடைக்கவில்லை.. கனடாவின் எட்மண்டனில் உள்ள கிரே நன்ஸ் மருத்துவமனையில் சுமார் 8 மணி நேரம் காக்க வைத்துள்ளனர். கடைசியில் சிகிச்சை தொடங்கும் முன்பே அவர் உயிரிழந்தார்.

கனடா மருத்துவ உட்கட்டமைப்பு
கனடாவில் மருத்துவ உட்கட்டமைப்பு எந்தளவுக்கு மோசமாக இருக்கிறது என்பதையே இது காட்டுகிறது. மருத்துவத் துறை முழுக்க ஏகப்பட்ட குறைபாடுகள் இருப்பதையே அது காட்டுகிறது. கனடாவில் பல ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஆய்வுகள், அங்கு நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளின் அவசரச் சிகிச்சைப் பிரிவுகளில் அதிகரிக்கும் காத்திருப்பு நேரம் பல மடங்கு அதிகரித்துள்ளதை உறுதிப்படுத்துகின்றன.
கனடாவில் 5.9 மில்லியன் பேர், அதாவது சுமார் ஐந்தில் ஒருவருக்கு உரிய நேரத்தில் அடிப்படை சிகிச்சை கூட கிடைப்பதில்லையாம். அங்கு 81 சதவீத கனடா நாட்டு மக்களுக்கு அடிப்படை மருத்துவச் சேவைகள் கிடைத்தாலும் கூட 36.9% பேரால் மட்டுமே 24 மணி நேரத்திற்குள் அவசரச் சிகிச்சையைப் பெற முடிந்ததாம். சுமார் 22.8% பேர் அவசரச் சிகிச்சைக்கே 2 வாரங்களுக்கு மேல் காத்திருக்க வேண்டி இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீண்ட நேரம் காத்திருப்பு
பொதுவாக ஒருவருக்கு அவசர நோய் பாதிப்பு ஏற்படும்போது உயிரைக் காப்பாற்ற அவர்களுக்கு உடனடியாகச் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். இதனை அவர்கள் சிகிச்சைக்கான கோல்டன் ஹவர் என்பார்கள். கடுமையான காயம் அல்லது மாரடைப்பு ஏற்படும்போது 60 நிமிடங்கள் சிகிச்சை தரப்பட வேண்டும். அப்போது தான் உயிரைக் காக்க முடியும்.. இந்த நேரத்தில் மருத்துவத் தலையீடு கிடைத்தால் உயிரை எளிதாகக் காப்பாற்றலாம். ஆனால், ஸ்ரீகுமாரின் விஷயத்தில் அவரை எட்டு மணிநேரம் காத்திருக்க வைத்தனர். இதுவே கனடாவின் அவசர சிகிச்சை கட்டமைப்பில் இருக்கும் அமைப்பு ரீதியான சிக்கலைச் சுட்டிக்காட்டுகிறது.
மெடிகேர்
கனடாவைப் பொறுத்தவரை அங்கு அரசின் "மெடிகேர்" என்ற அமைப்பு இருக்கிறது. கனடா அரசே இந்த திட்டத்திற்கு நிதியளிக்கிறது. அங்கு வாழும் அனைத்து தரப்பு மக்களும் அதில் சிகிச்சை பெறலாம். கனடா குடியுரிமை பெற்றவர்கள் மட்டுமின்றி, கனடாவில் நிரந்தர குடியுரிமை பெற்ற வெளிநாட்டு மக்களுக்கும் இது கிடைக்கும். 1984 கனடா சுகாதாரச் சட்டத்தின் கீழ் அங்குள்ள மாகாண அரசுகள் இதைச் செயல்படுத்துகின்றன.
கனடா நாட்டினரின் மொத்தச் சுகாதாரத் தேவைகளில் சுமார் 70 சதவீதத்தை இதுவே பூர்த்தி செய்கிறது. மீதமுள்ள 30 சதவீதம் (பல் மருத்துவம், கண் பராமரிப்பு, உளவியல் சிகிச்சை மற்றும் பாலினச் சிகிச்சை) ஆகியவை தனியார் ஆபரேட்டர்களால் வழங்கப்படுகிறது. இருப்பினும், கடந்த ஜனவரி மாதம் நடத்தப்பட்ட சர்வேயில் அங்கு சுமார் தற்போது இருக்கும் மருத்துவர்களைக் காட்டிலும் 49% மருத்துவர்கள் கூடுதலாகத் தேவை. மருத்துவர்கள் மட்டுமின்றி, செவிலியர்களின் தேவையும் அங்கு அதிகமாகவே உள்ளது..
1,000 பேருக்கு 2.8 மருத்துவர்கள்
கனடாவில் ஒவ்வொரு 1,000 பேருக்கு 2.8 மருத்துவர்கள் மட்டுமே உள்ளனர்.. இது பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (OECD) பரிந்துரைத்த 3.7 சராசரியை விடக் குறைவாகும். இப்படி மருத்துவர் பற்றாக்குறை இருப்பதாலேயே அங்குச் சராசரி காத்திருப்பு நேரம் அதிகமாக இருக்கிறது. சிறப்பு மருத்துவர்களைச் சந்திக்க ஒரு மாதத்திற்கும் மேலாகக் காத்திருக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அவசர சிகிச்சை என்றாலும் கூட 24 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டி இருக்கிறது.












Click it and Unblock the Notifications