சீனாவின் வாய்ஸில் திடீர் மாற்றம்.. இஸ்ரேல் பக்கமா திரும்புதே.. மொத்தமாக மாறுதே சர்வதேச அரசியல்
பெய்ஜிங்: இஸ்ரேல் ஹமாஸ் இடையே மோதல் தொடரும் நிலையில், முதல்முறையாகச் சீனாவின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. சீனாவின் இந்த மாற்றம் சர்வதேச அளவில் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே கடந்த அக். 7ஆம் தேதி முதல் மோதல் தொடர்ந்து வருகிறது. ஹமாஸ் அப்போது இஸ்ரேல் நாட்டில் அத்துமீறித் தாக்குதலை நடத்திய நிலையில், அப்போது முதல் மோதல் தொடர்ந்து வருகிறது.

இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது. இப்போது காசா மீது தொடர் ஏவுகணை தாக்குதலை இஸ்ரேல் நடத்தி வரும் நிலையில், விரைவில் படையெடுப்பையும் ஆரம்பிக்கும் என்றே அஞ்சப்படுகிறது. இதனால் அங்கே பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
சீனா நிலைப்பாட்டில் மாற்றம்: இதற்கிடையே இந்த விவகாரத்தில் சீனாவின் நிலைப்பாட்டில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இத்தனை நாட்கள் இஸ்ரேலுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்திருந்த சீனா, இப்போது திடீரென இஸ்ரேல் பக்கம் திரும்பியுள்ளது. இஸ்ரேலுக்கு தங்களைப் பாதுகாக்கும் உரிமை இருப்பதாகத் தெரிவித்துள்ளது. சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி விரைவில் அமெரிக்கா செல்ல உள்ள நிலையில், சீனாவின் இந்தக் கருத்து முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி இஸ்ரேல் வெளியுறவுத் துறை அமைச்சருடன் தொலைப்பேசி மூலம் பேசியுள்ளார். அப்போது அவர், "ஒவ்வொரு நாட்டிற்கும் தங்களைத் தற்காத்துக் கொள்ள உரிமை உள்ளது... ஆனால் சர்வதேச மனிதாபிமான சட்டத்திற்குள் வர வேண்டும்" என்று கூறியுள்ளார். ஹமாஸுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இஸ்ரேலுக்கு உரிமை இருக்கிறது என்பதைச் சீனா ஒப்புக் கொண்டது இதுவே முதல்முறையாகும்.
முன்பு சொன்னது என்ன: சீனாவின் அதிபர் ஜி ஜின்பிங் கடந்த வாரம் தான் அங்கே உடனடியாக போர் நிறுத்தம் தேவை எனக் கூறியிருந்தார். மேலும், எகிப்து மற்றும் பிற அரபு நாடுகளுடன் ஒருங்கிணைக்கத் தயார் என்று அறிவித்த அவர், பாலஸ்தீன பிரச்சினைக்கு விரைவில் ஒரு நியாயமான தீர்வுக்கு அழுத்தம் கொடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். கடந்த அக். 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1700 பேர் கொல்லப்பட்ட போதிலும், சீனா ஹமாஸை கண்டிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக அமெரிக்கா கேள்வி எழுப்பியிருந்தது. அப்போது இந்த கடினமான காலங்களில் இஸ்ரேலுக்கு எந்த ஆதரவும் இல்லை என்றே சீனா கூறியிருந்தது. அப்போது சீனா இஸ்ரேலுக்கு எதிரான நிலைப்பாட்டையே எடுத்திருந்தது. இது குறித்து இஸ்ரேலும் கூட வெளிப்படையாகவே அறிக்கை வெளியிட்டிருந்தது. சீனாவின் நிலைப்பாடு தங்களுக்கு ஏமாற்றத்தைத் தருவதாக ஆசிய-பசிபிக் விவகாரங்களுக்குப் பொறுப்பான துணை இயக்குநர் ஜெனரல் ரஃபி ஹர்பாஸ் கூறியிருந்தார்.
உரிமை இருக்கு: சீனாவின் நிலைப்பாடு இப்படி இருந்த நிலையில், அதில் தான் இப்போது திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேலுக்கு தங்களைப் பாதுகாக்க உரிமை இருக்கிறது என்று சொன்ன சீன அமைச்சர் வாங் யி, "அங்கே மோதல்கள் தீவிரமடைந்து வருவது கவலை தருகிறது. இந்த மோதலில் ஏராளமான பொதுமக்கள் உயிரிழந்து வருவது கவலை தருகிறது. பொதுமக்களைப் பாதிக்கும் எந்தவொரு செயல்களையும் நிச்சயம் அனுமதிக்க முடியாது" என்று அவர் கூறியுள்ளார்.
சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி வரும் அக். 26 முதல் அக். 28 வரை அமெரிக்காவுக்குச் செல்லவுள்ளார். அவர் வெளியுறவுத்துறைச் செயலர் ஆண்டனி பிளிங்கன் மற்றும் வெள்ளை மாளிகையின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் ஆகியோரை சந்திக்க உள்ளார். இந்தச் சூழலில் தான் அவரது நிலைப்பாட்டில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications