வாயை கூட திறக்காத சீனா.. ஈரான் விவகாரத்தில் ட்விஸ்ட் கொடுக்கும் ஜின்பிங்.. என்ன மேட்டர் தெரியுமா?
பெய்ஜிங்: ஈரானுக்கும் சீனாவுக்கும் இடையே கடந்த பல ஆண்டுகளாகவே நல்லுறவு இருந்து வருகிறது. இருப்பினும், இப்போது ஏற்பட்டுள்ள குழப்பமான சூழலில், சீனா அமைதியாகவே இருந்து வருகிறது. பெயரளவில் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தாலும் கூட அதைத் தாண்டி சீனா எதுவும் செய்யவில்லை. இது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ள சூழலில், அதற்கான பதிலை நாம் பார்க்கலாம்!
சீனா- ஈரான் இடையே நீண்ட காலமாகவே ஆழமான உறவு இருக்கிறது. ஆனால், இந்த விவகாரத்தில் சீனா இதுவரை மவுனமாகவே இருந்து வருகிறது. பெயரளவுக்கு ஒரு கண்டனமும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு மட்டுமே விடுக்கப்பட்ட நிலையில், அதைத் தாண்டி சீனா பெரிதாக எதையும் செய்யவில்லை. இந்த விவகாரத்தில் சீனாவின் நிலைப்பாடு சுவாரஸ்யமானதாக இருக்கிறது.

சீனாவின் சிக்கல்
இந்த மோதலால் சீனப் பொருளாதாரத்திற்கு உயிர்நாடியான எண்ணெய் சப்ளை அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளது. ஈரானின் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் சுமார் 80% சீனாவுக்கே செல்கிறது. சர்வதேச நாடுகளின் பொருளாதாரத் தடைகளால் ஈரான் உடன் உலக நாடுகள் வர்த்தகம் செய்யத் தயங்கும் நிலையில், சீனா மட்டுமே ஈரானிடம் இருந்து அதிகப்படியான கச்சா எண்ணெய்யை வாங்கிவந்தது.
2025ல் இது தினசரி சுமார் 1.38 மில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெய்யை ஈரானிடம் இருந்து சீனா வாங்கி வந்தது. இது சீனாவின் மொத்த கச்சா எண்ணெய் இறக்குமதியில் 13 முதல் 14 சதவீதம் ஆகும்.
சீனாவின் நிலை
அதாவது ஈரானிடம் இருந்து சீனா கணிசமான அளவு கச்சா எண்ணெய்யை வாங்கியுள்ளது. அதேநேரம் ஈரானை மட்டுமே சீனா முழுக்க முழுக்க நம்பி இருக்கிறது எனச் சொல்ல முடியாது. சீனாவின் இரு பெரிய சப்ளையர்களாக ரஷ்யா மற்றும் சவுதி அரேபியா தொடர்ந்து இருக்கின்றன. கடந்த சில காலமாகவே ஈரானின் நிலைமை மோசமடையும் என்பது உலக நாடுகளுக்குத் தெரியும். இதன் காரணமாகவே சீனா சத்தமே இல்லாமல் ஈரானின் இறக்குமதிகளைக் குறைத்துக் கொண்டு ரஷ்ய எண்ணெய்யை அதிகம் வாங்கத் தொடங்கியது. அதிலும் தள்ளுபடி விலையில் ரஷ்ய எண்ணெய் கிடைத்தால் சீனாவுக்கு டபுள் ஹேப்பி என்றே சொல்லலாம்.
யாருக்கு யார் தேவை?
அதாவது சீனாவுக்கு ஈரான் கச்சா எண்ணெய் அத்தியாவசியமாகத் தேவை எனச் சொல்ல முடியாது. ஆனால், ஈரானுக்குச் சீனா உடனான வர்த்தகம் ரொம்பவே அத்தியாவசியம். ஏனென்றால் முன்பே குறிப்பிட்டது போல ஈரான் உடன் வர்த்தகம் செய்ய உலக நாடுகள் தயக்கம் காட்டுகின்றன. இந்த நேரத்தில் ஈரான் பதிலடி தருகிறேன் என்ற பெயரில் மத்திய கிழக்கில் பல்வேறு நாடுகளில் உள்ள அமெரிக்கப் படைகளைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தி வருகிறது. இது மிகப் பெரிய பிழை என்கிறார் அவெல்லன்ட் இன்டலிஜன்ஸின் இணை நிறுவனர் பாலகிருஷ்ணன்!
இது ஈரான்- சீனா உறவை ஆபத்தில் தள்ளுவதாக அவர் கூறுகிறார். ஈரான் சீனா இடையே பல்வேறு துறைகளில் ஒருங்கிணைந்து செயல்பட 25 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் இருக்கிறது. இந்த நேரத்தில் மத்திய கிழக்கில் மிகப் பெரிய குழப்பம் ஏற்படுவதைச் சீனா விரும்பாது. அதாவது ஈரான் விவகாரத்தில் சீனா நடுநிலையாக இருக்கும் சூழலில், அங்கு நடத்தும் தாக்குதல்களால் ஈரானை விட்டு சீனா விலகிச் செல்லும் சூழல் உருவாகலாம்.
விஷயமே இதுதான்
மேலும், ஈரான் தாக்குதல்களால் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டால் அது சீனாவைக் கோபப்படுத்தும். ஏனென்றால் சீனாவின் எண்ணெய் இறக்குமதியில் சுமார் 44 சதவீதம் மத்திய கிழக்கிலிருந்து வருகிறது. அவை அனைத்தும் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே வருகிறது. இந்த பாதை பாதிக்கப்பட்டால் சீனாவுக்கு மிகப் பெரிய விளைவுகளை ஏற்படுத்தும். சர்வதேச சந்தையிலும் கச்சா எண்ணெய் விலை விலை பீப்பாய்க்கு 100 முதல் 130 டாலர்கள் வரை உயரக்கூடும்!
இதன் காரணமாகவே சீனா இந்த விவகாரத்தில் அவசரப்படவில்லை. சீனா போரைக் கண்டித்து அறிக்கை விட்டாலும், நேரடியாகத் தலையிடவில்லை. மேலும், காட்டமான வார்த்தைகளால் கூட அமெரிக்காவை விமர்சிக்கவில்லை. ஹார்முஸ் ஜலசந்தி பற்றி சீனா அதிகம் கவலைப்படுவதே இதற்குப் பிராதான காரணமாகும்!












Click it and Unblock the Notifications