இஸ்ரேல் தாக்குதலில் இஸ்லாமிய நாடுகளின் மவுனம்! ஒற்றுமை ஒரு கனவா? 1973 மட்டும் விதிவிலக்கு!
டெல் அவிவ்: இஸ்ரேலின் ஈரான் மீதான சமீபத்திய தாக்குதல்கள், முஸ்லீம் நாடுகளின் ஒற்றுமை குறித்த ஒரு கேள்வியை மீண்டும் எழுப்பியுள்ளன. மதம், வரலாறு எனப் பல வழிகளில் பிணைக்கப்பட்டிருந்தாலும், நெருக்கடியான நேரத்தில் முஸ்லீம் நாடுகள் ஒன்றுபட்டு நிற்கத் தவறிவிடுகின்றனவா?
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், முஸ்லீம் உலக நாடுகளின் ஆதரவு பெரிய அளவில் வெளிப்படவில்லை. கடந்த காலங்களில் ஈராக், லிபியா, சிரியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகள் பாதிக்கப்பட்டபோதும் இதே நிலைதான். இது, "பான்-இஸ்லாமிய ஒற்றுமை" என்பது வெறும் கற்பனையா என்ற கேள்வியை எழுப்புகிறது. ஆம், 'உம்மா' (Muslim Ummah Unity-இஸ்லாமிய சமூகத்தின் உலகளாவிய ஒற்றுமை) என்ற மத ரீதியான கருத்து வலுவாக இருந்தாலும், நடைமுறையில் ஒவ்வொரு நாடும் அதன் சொந்த நலன்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கிறது.

தேச நலன் Vs மத உணர்வு
பாகிஸ்தானின் அணுசக்தி திட்டம்கூட இஸ்ரேலுக்கு எதிரான இஸ்லாமிய ஒற்றுமையை நோக்கமாகக் கொண்டது அல்ல. மாறாக, இந்தியாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்வது அல்லது இந்தியாவை மிரட்டுவதே, அதன் முக்கிய நோக்கம். இஸ்லாமிய ஒற்றுமை குறித்து பாகிஸ்தான் பேசுவது பெரும்பாலும் வெறும் வார்த்தை ஜாலம் மட்டுமே. அவர்களின் பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கைகள் அவர்கள் நாட்டின் தேசிய நலன்களால் மட்டுமே தீர்மானிக்கப்படுகின்றன. ஈரானை தாக்கியதால், இஸ்ரேல் மீது அணு ஆயுதங்களைப் பாகிஸ்தான் பயன்படுத்தலாம் என்று செய்தி வந்தபோது, பாகிஸ்தான் உடனடியாக அதை மறுத்தது, இது தேச நலன், மத உணர்வுகளை விட மேலோங்குகிறது என்பதைக் காட்டுகிறது.
முஸ்லீம் உலகின் வலிமையும், அரசியல் பலவீனமும்
உலக மக்கள் தொகையில் கால் பகுதியினராகவும், உலகளாவிய பொருளாதாரத்தில் கணிசமான பங்கை அளிப்பவர்களாகவும் முஸ்லீம்கள் உள்ளனர். ஆனால், இந்த மக்கள் தொகை மற்றும் பொருளாதார வலிமை, ஒருங்கிணைந்த அரசியல் அல்லது ராணுவ சக்தியாக மாறவில்லை. முஸ்லீம் நாடுகளுக்கிடையேயான தேசியவாதப் போட்டி, ஷியா-சன்னி போன்ற மதப் பிரிவினைகள் மற்றும் மாறுபட்ட நலன்கள் ஆகியவை அவர்களின் கூட்டுச் செயல்பாட்டைத் தடுக்கின்றன.
அரசியல் இஸ்லாமின் முரண்பாடு
அரசியல் இஸ்லாம், தேசியவாதத்தை விட மத விசுவாசத்திற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. ஆனால், யதார்த்தத்தில் பெரும்பாலான முஸ்லீம் நாடுகளில் தேசியவாதமே பிரதானமாக உள்ளது. இந்த முரண்பாடு, இஸ்ரேல் போன்ற நாடுகளின் ஆக்கிரமிப்பு கொள்கைகளுக்கு எதிராகக் கூட முஸ்லீம் உலகம் ஒன்றாக செயல்படத் தயங்குவதற்குக் காரணம்.
உள்நாட்டு மோதல்கள்
கடந்த ஐம்பது ஆண்டுகளில், முஸ்லீம் நாடுகளுக்குள் ஏற்பட்ட பெரும்பாலான மோதல்களும், உயிரிழப்புகளும் வெளிநாட்டு ஆக்கிரமிப்பால் அல்ல, மாறாக உள்நாட்டுப் போர்களாலும், பிரிவினைவாத சண்டைகளாலுமே நிகழ்ந்துள்ளன. ஏமன், சூடான், சிரியா போன்ற நாடுகளில் மில்லியன் கணக்கான மக்கள் முஸ்லீம் குழுக்களிடையே சண்டையிட்டு இறந்துள்ளனர். இது முஸ்லீம் உலகின் பிளவுகள் அவர்களுக்கே எப்படி ஆபத்தாக மாறுகிறது என்பதை காட்டுகிறது.
பலனளிக்காத இஸ்லாமிய அமைப்புகள்
இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (OIC) அல்லது அரபு லீக் போன்ற பான்-இஸ்லாமிய அமைப்புகள், நெருக்கடியான சூழ்நிலைகளில் முஸ்லீம் நாடுகளை ஒருங்கிணைப்பதில் தோல்வியடைந்துள்ளன. வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (GCC) மட்டுமே சில செல்வாக்குடன் உள்ளது. ஆனால் அதுவும் பெரும்பாலும் மேற்கத்திய நாடுகளின் நலன்களுக்கேற்ப செயல்படுகிறது.
1973 போர் ஒரு விதிவிலக்கு
1973 ஆம் ஆண்டு யோன் கிப்பூர் போர், எகிப்து, சிரியா, ஈராக், பாகிஸ்தான் ஆகிய முஸ்லீம் நாடுகள் இஸ்ரேலுக்கு எதிராகப் போரிட்ட ஒரு அரிய தருணம். ஆனால், இந்த ஒற்றுமைகூட மத நம்பிக்கையை விட, மதச்சார்பற்ற கொள்கைகள் மற்றும் புவிசார் அரசியல் நலன்களால் உந்தப்பட்டதுதான்.
6 நாள் போரில் நடந்தது என்ன?
1967 ஆம் ஆண்டு நடந்த ஆறு நாட்கள் போரில் இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் பல பகுதிகள் (கோலன் ஹைட்ஸ், சினாய்) உள்ளிட்டவற்றை கைப்பற்றியது. இந்த நிலையை அரபு நாடுகள் ஏற்கவில்லை. 1973 அக்டோபர் 6-ம் தேதி, யூதர்களின் புனித நாளான யோம் கிப்பூர் தினத்தில், எகிப்து மற்றும் சிரியா தலைமையிலான அரபு நாடுகள், இஸ்ரேல் மீது எதிர்பாராத வகையில் தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதல் பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு பகுதிகள் மீது முன்னறிவிப்பின்றி நடந்தது. இதனால் இருதரப்பும் நேரடி போர் நிலைக்கு சென்றன. எகிப்து படைகள் சூயஸ் கால்வாயை கடந்தும், சினாய் பகுதியில் இஸ்ரேல் பாதுகாப்பு கோட்டுகளை உடைத்தும் முன்னேறின. அதே நேரத்தில், சிரியா படைகள் கோலன் ஹைட்ஸ் பகுதியில் தாக்குதல் நடத்தின. ஆரம்பத்தில் அரபு நாடுகள் வெற்றிகரமாக முன்னேறின. ஆனால், மூன்று நாட்களில் இஸ்ரேல் தனது ராணுவத்தை முழுமையாக திரட்டியது. பின்னர், இஸ்ரேல் எதிர் தாக்குதலுக்கு இறங்கியது.
அமெரிக்கா, ரஷ்யா
அமெரிக்கா மற்றும் சோவியத் ஒன்றியம் தங்களது ஆதரவாளர்களுக்கு ஆயுதங்கள் மற்றும் ஆதரவு வழங்கின. இது உலகளாவிய பதற்றத்தை ஏற்படுத்தியது. பின்னர் போர் காலம் நீடித்தது. இரண்டு வாரங்கள் நீடித்த இந்த போரில் சுமார் 20,000 பேர் பலியாகினர். பாலஸ்தீனத்துக்கு அதிக உயிரிழப்பு ஏற்பட்டது. போர் முடிவில், இஸ்ரேல் ஏற்கனவே கைப்பற்றிய பகுதிகளை விட கூடுதலான இடங்களை தன்வசப்படுத்தியது. OPEC நாடுகள் (பெட்ரோல் ஏற்றுமதி நாடுகள்) இஸ்ரேலை ஆதரித்த நாடுகளுக்கு பெட்ரோல் ஏற்றுமதியை நிறுத்தின. இதனால் உலகளவில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் தலையீட்டில் 22 மற்றும் 25 அக்டோபர் தேதிகளில் இரு முறைகள் போருக்கு நிறைவு காணப்பட்டது.
'உம்மா' ஒரு பழைய கனவு?
தேசிய எல்லைகளைத் தாண்டி ஒரே முஸ்லீம் சமூகம் என்ற 'உம்மா'வின் கருத்து, 7 ஆம் நூற்றாண்டு லட்சியங்களில் வேரூன்றியது. ஆனால், 21 ஆம் நூற்றாண்டு புவிசார் அரசியல் யதார்த்தங்களுக்கு இது பொருந்தவில்லை. முஸ்லீம் நாடுகள் தங்கள் தேச நலன்களுக்கும், இறையாண்மைக்கும், பாதுகாப்பிற்கும் முக்கியத்துவம் கொடுப்பதால், மத அடையாளம் பின்னடைவைச் சந்திக்கிறது.
முஸ்லீம் பிளவுகளைப் பயன்படுத்துதல்
ஈரான் மற்றும் காசாவில் இஸ்ரேலின் தொடர்ச்சியான ராணுவ நடவடிக்கைகள், முஸ்லீம் நாடுகளின் பிளவுபட்டுள்ள தன்மையை, அரசியல் பலவீனத்தை, மற்றும் ஒன்றிணைந்து செயல்பட இயலாமையை வெளிப்படுத்துகிறது. முஸ்லீம் உலகின் இந்த பிளவு, இஸ்ரேல் அதன் ஆதிக்கத்தைத் தொடர உதவுகிறது.
யதார்த்த அரசியல் Vs மத அடையாளம்
மத அடையாளம் மற்றும் இறையியல் உணர்வு, பெரும்பாலும் யதார்த்த அரசியலின் கட்டளைகளுக்கு அடிபணிந்து விடுகின்றன. முஸ்லீம் நாடுகள் தங்கள் சொந்த நலன்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால், மற்ற முஸ்லீம் நாடுகளுக்கு எதிராகவோ அல்லது ஒற்றுமைக்கான அழைப்புகளைப் புறக்கணித்தோ உலகளாவிய சக்திகளுடன் அணிசேர தயங்குவதில்லை. முஸ்லீம் சமூகங்களுக்குள் உள்ள இந்த உள் முரண்பாடுகள், தேசியவாதப் போட்டி மற்றும் அரசியல் பிளவுகளை நிவர்த்தி செய்யாமல், எந்தவொரு ஒருங்கிணைந்த முஸ்லீம் நடவடிக்கையும் ஒரு பகற்கனவாகவே இருக்கும். மதத்தையும் தேசத்தையும் ஒன்றிணைக்கும் ஒரு புதிய சிந்தனை அணுகுமுறை தேவை. இல்லையெனில், பிளவுபட்டுள்ள நிலைமையும், பாதிப்புக்குள்ளாகும் தன்மையும் தொடரும்.












Click it and Unblock the Notifications