வரிசையாக சுருண்டு விழுந்த பலநூறு சிறுமிகள்! பள்ளி செல்வதை தடுக்க பாய்சன் கொடுத்த கொடூரர்கள்! பதற்றம்
பெண்கள் கல்வி கற்பதைத் தடுக்க பாய்சன் அளிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெஹ்ரான்: பெண்கள் உரிமைகளை மீட்க இப்போது தான் மெல்ல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே பெண்கள் கல்வி கற்பதைத் தடுக்க நினைத்த சிலர், பல நூறு மாணவிகளுக்கு பாய்சன் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பல தலைமுறைகளாகவே பெண்களைச் சுதந்திரமாக இருக்க விடாமல் ஆண்கள் தங்கள் கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்தனர். பல ஆண்டு போராட்டத்திற்குப் பிறகு இப்போது தான் நிலைமை மெல்ல மாற தொடங்கியிருக்கிறது.
உலகின் பல நாடுகளில் இப்போது தான் பெண்களின் உரிமை மீட்கப்பட்டு வருகிறது. அவர்கள் கல்வி கற்கவும், வேலைக்குச் செல்லவும் வாய்ப்புகள் உருவாக்கப்படுகிறது. இது பெண்கள் முன்னேற்றத்திற்குப் பெரிதும் உதவுகிறது.

பெண் கல்வி
குறிப்பாகப் பல நாடுகளில் இன்னுமே ஆண்களுக்கு இணையாகப் பெண்களுக்குக் கல்வி கற்கும் உரிமை வழங்கப்படுவதில்லை. ஆப்கன் உள்ளிட்ட சில நாடுகளில் ஆளும் அரசே பெண்கள் கல்வி கற்பதைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பெண்களின் வேலை வீட்டில் மட்டும் தான் என நினைக்கும் சில பழமைவாதிகள் பெண்கள் கல்வி நிலையங்களுக்குச் செல்லக் கூடாது என்பதில் தீவிரமாக உள்ளனர். அதைத் தடுக்கவும் அவர்கள் பல்வேறு நடவடிக்கைகளை நேரடியாகவும் மறைமுகமாகவும் எடுத்து வருகின்றனர்.

விஷம்
அப்படியொரு மோசமான சம்பவம் தான் ஈரானில் நடந்துள்ளது. அங்கு சில மர்ம நபர்கள் பெண்கள் கல்வி கற்பதைத் தடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இதற்காக எல்லை மீறிய சில மோசமான காரியங்களை அவர்கள் செய்துள்ளனர். பெண்கள் கல்வி கற்பதை நிறுத்த புனித நகரமான கோமில் பள்ளிக்குச் செல்லும் சிறுமிகளுக்குச் சிலர் விஷம் கொடுக்கும் அளவுக்குச் சென்றுள்ளதாக ஈரான் அமைச்சர் ஒருவர் அங்கு வெளிப்படையாகவே குற்றஞ்சாட்டினார். இது அங்கு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்துவதாக உள்ளது.

மோசமான பாதிப்பு
கடந்த நவம்பர் மாதம் முதலே ஈரான் தலைநகர் தெஹ்ரான் தெற்கில் இருக்கும் கோம் நகரில் பல நூறு பள்ளி மாணவிகளுக்குச் சுவாச பகுதியில் பாய்சன் பாதிப்பு ஏற்படும் வழக்குகள் பதிவாகியுள்ளது. சில மாணவிகளுக்குப் பாதிப்பு ரொம்பவே மோசமாகிப் போக அவர்களுக்கு மருத்துவச் சிகிச்சையும் கூட தேவைப்பட்டுள்ளது. அடையாளம் தெரியாத சிலர் திட்டமிட்டு இப்படி விஷத்தைப் பரப்புவதைத் துணை சுகாதார அமைச்சர் யூனஸ் பனாஹி இப்போது உறுதிப்படுத்தினார். இது குறித்து அந்நாட்டு அதிகாரிகள் விரிவான விசாரணையில் இறங்கியுள்ளனர்.

மோசமான திட்டம்
இது குறித்து அமைச்சர் யூனஸ் பனாஹி மேலும் கூறுகையில், "கோம் பள்ளிகளில் பலருக்கும் இப்படி பாய்சன் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் நாங்கள் விசாரணை செய்ததில், குறிப்பிட்ட சிலர் அனைத்துப் பள்ளிகளும், குறிப்பாகப் பெண்கள் பள்ளிகளும் மூடப்பட வேண்டும் என்று திட்டமிடுகிறார்கள்" என்று அவர் தெரிவித்தார். பள்ளிகளை மூட பெண்களுக்கு விஷம் கொடுப்பவர்கள் யார் என்பது குறித்த தகவல்களை அவர் வெளிப்படையாகப் பகிரவில்லை. அதேபோல இந்த விவகாரத்தில் இதுவரை யாரும் கைதும் செய்யப்படவில்லை.

என்ன நடந்தது
ஒரே நேரத்தில் இப்படிப் பல நூறு மாணவிகளின் உடல்நிலை பாதிக்கப்பட்டது அங்கு பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. இதனால் கடந்த வாரம் போராட்டத்தில் குதித்த பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர்கள், இந்த விவகாரத்தில் அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினர். அதைத்தொடர்ந்து மறுநாளே இந்த விவகாரத்தில் விசாரணையைத் தொடங்கவுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது. மேலும், இந்த சம்பவம் குறித்து நீதி விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது. இந்தச் சூழலில் தான் அமைச்சர் இந்தவொரு விளக்கத்தைக் கொடுத்துள்ளார்.

தொடரும் போராட்டம்
ஈரானில் கடந்த சில மாதங்களாகவே தீவிர போராட்டங்கள் நடந்து வருகிறது. கடந்த செப்.16ஆம் தேதி ஈரானை சேர்ந்த குர்த் மஹ்சா அமினி என்ற 22 வயது பெண் கடுமையான ஆடைக் கட்டுப்பாட்டை மீறியதாகக் கூறி காவலர்கள் அவரை கொடூரமாகத் தாக்கினர். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சில நாட்களில் உயிரிழந்தார். இதைக் கண்டித்து அங்குத் தொடங்கப்பட்ட போராட்டம் பல மாதங்கள் நீடித்தது. இந்தச் சூழலில் இப்போது பெண் குழந்தைகளுக்கு பாய்சன் அளிக்கப்பட்டதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications