வங்கதேசத்தில் இந்து பெண்ணுக்கு கொடூரம்.. வெடித்தது மாணவர்கள் போராட்டம்! யூனுஸ்க்கு பெரும் தலைவலி
டாக்கா: வங்கதேசத்தின் இடைக்கால அரசின் தலைவராக முகம்மது யூனுஸ் பதவியேற்றதில் இருந்தே இந்துக்கள் குறிவைத்து தாக்கப்படுவதாகவும் மத வழிபாட்டு தலங்கள் தாக்கப்படுவதாகவும் அடிக்கடி புகார்கள் எழுந்துவரும் நிலையில், இந்து மத பெண் ஒருவர், உள்ளூர் அரசியல் பிரமுகரால் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அங்கு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை கண்டித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வங்கதேசத்தில் கடந்த ஆண்டு வரலாறு காணாத வன்முறை ஏற்பட்டது. இதையடுத்து ஷேக் ஹசீனா தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சமடைந்தார். இதையடுத்து அங்கு இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது. அதன் தலைமை ஆலோசகராக முகமது யூனுஸ் செயல்பட்டு வருகிறார்.

இந்து மத பெண் பலாத்காரம்
முகம்மது யூனுஸ் இடைக்கால அரசின் தலைவராக பொறுப்பேற்றதில் இருந்து அங்கு இந்தியாவுக்கு எதிரான செயல்பாடுகள் அதிகரித்து இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்துக்கள் குறிவைத்து தாக்கப்படுவதாகவும் மத வழிபாட்டு தலங்கள் தாக்கப்படுவதாகவும் அடிக்கடி புகார்கள் எழுகின்றன. இந்த நிலையில்தான், வங்கதேசத்தில் இந்து பெண் உள்ளூர் அரசியல் பிரமுகர் ஒருவரால் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அங்கு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாணவர்கள் போராட்டம்
இந்த சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வங்கதேச தலைநகரில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். டாக்காவில் வீதிகளில் இறங்கி பெரிய அளவில் மாணவர்கள் பேரணியாக சென்றனர். போராட்டக்காரர்கள் கோஷங்கள் எழுப்பிய படி செல்லும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகின்றன.
குற்றம் செய்தவர்களுக்கு எதிராக உடனடி நேரடி நடவடிக்கை தேவை என்று கோரிக்கை வைத்துள்ளனர். இந்த விவகாரத்தில் தற்போது வரை 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். முக்கிய குற்றவாளியாக வங்கதேச தேசிய கட்சியின் நிர்வாகி பசூர் அலி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முகம்மது யூனுஸ்க்கு தலைவலி
கடந்த 26 ஆம் தேதி ராமச்சந்திரபூர் பச்கிட்டா கிராமத்தில், இந்து மதத்தை சேர்ந்த 21 வயது பெண்ணை வங்கதேச தேசியவாதக் கட்சியின் உள்ளூர் தலைவர் ஃபசோர் அலி (38) பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கைது செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் துபாயில் பணியாற்றி வருகிறார்.
அந்த பெண், தனது தந்தை வீட்டிற்கு சென்ற போது, அவரது வீட்டிற்கு சென்ற பசோர் அலி, பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டுள்ளார். பெண்ணின் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் அங்கு ஓடிவரவும் பசோர் அலி தப்பி ஓட முயன்று இருக்கிறார். அவரை மடக்கி பிடித்த அப்பகுதி மக்கள் தர்ம அடி கொடுத்தனர்.
எனினும் அங்கிருந்து தப்பி ஓடிய பசோர் அலியை நேற்று காலை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே, பல்வேறு பிரச்சினைகளில் கையை பிசைந்து கொண்டு இருக்கும் முகம்மது யூனுஸ்க்கு தற்போது மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications