போர் வெடித்தால்.. எந்த இஸ்லாமிய நாடுகள் பாகிஸ்தானை ஆதரிக்கும்.. யாரெல்லாம் இந்தியாவை ஆதரிப்பார்கள்?
டெல்லி: இந்தியா பாகிஸ்தான் இடையேயான பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் எல்லையிலும் கூட வீரர்கள் அதிகம் குவிக்கப்பட்டு வருகிறார்கள். இந்தச் சூழலில் ஒருவேளை இந்தியா பாகிஸ்தான் இடையே போர் வெடித்தால் உலகில் உள்ள இஸ்லாமிய நாடுகளின் ஆதரவு யாருக்கு இருக்கும் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூரை நடத்தியது. பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத மையங்கள் மட்டுமே அழிக்கப்பட்டன. ஆனால், அதற்குப் பதிலடி கொடுப்போம் என பாகிஸ்தான் அடாவடியாகக் கூறி வருகிறது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்தச் சூழலில் இரு நாடுகளுக்கும் இடையே போர்ப் பதற்றமும் அதிகரித்து வருகிறது. ஒருவேளை இந்தியா பாகிஸ்தான் இடையே போர் வெடித்தால் உலகின் உள்ள இஸ்லாமிய நாடுகளின் ஆதரவு யாருக்கு இருக்கும் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
புரிந்து கொள்ள வேண்டியது
முதலில் நாம் ஒரு விஷயத்தைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது கடந்த காலங்களில் இந்தியா பாகிஸ்தான் இடையே போர் ஏற்பட்ட போது எந்தவொரு நாடும் ஆதரவு நிலைப்பாட்டை எடுக்க இஸ்லாம் என்பது முக்கிய காரணமாக இருந்தது இல்லை. எப்போதும் இஸ்லாமிய நாடுகளின் ஆதரவு முழுமையாக பாகிஸ்தானுக்கு இருந்தே இல்லை.
1947-48 போர்
1947 அக்டோபர் 22ம் தேதி பாகிஸ்தான் படைகள் பஷ்டூன் பழங்குடி போராளிகள் போல காஷ்மீரில் நுழைந்தது. அப்போதுதான் முதல் இந்தியா-பாகிஸ்தான் போராகும். இருப்பினும், அப்போதும் மதத்தின் பெயரால் இஸ்லாமிய நாடுகள் அனைத்தும் பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாட்டை எடுக்கவில்லை. ஓரிரு இஸ்லாமிய நாடுகள் தார்மீக மற்றும் ராஜதந்திர ஆதரவை மட்டுமே கொடுத்தன. ராணுவ உதவி யாரும் வழங்கவில்லை.
1965 போர்
1965ல் ஏப்ரல் 24ம் தேதி, பாகிஸ்தான் ராணுவம் ரான் ஆஃப் கட்ச்சில் இந்தியப் படைகளைத் தாக்கியதால் இந்தப் போர் தொடங்கியது. இந்தச் சமயத்திலும் ஒரு சில இஸ்லாமிய நாடுகள் மட்டுமே ஆதரவு தெரிவித்தன. ஈரான் மற்றும் துருக்கி போன்ற இஸ்லாமிய நாடுகள் எதுவும் செய்யவில்லை.. அறிக்கைகள் மட்டுமே வெளியானதே தவிரத் தத்தளித்த பாகிஸ்தானுக்கு ராணுவ உதவி எதுவும் கிடைக்கவில்லை.
1971 வங்கதேச விடுதலைப் போர்
1971ல் நடந்த இந்தப் போரால் தான் வங்கதேசம் என்ற புதிய நாடே உருவானது. இந்தப் போரின் போது ஜோர்டன் தனது ஜெட் விமானங்களை அனுப்பியது. மற்றொரு முக்கிய இஸ்லாமிய நாடான சவுதி அரேபியா பாகிஸ்தானை ஆதரிக்கிறோம் என அறிக்கை மட்டும் வெளியிட்டது.
1999 கார்கில் மோதல்
1999ம் ஆண்டு நடந்த கார்கில் போர் சுமார் 3 மாதங்கள் நடந்தது. இந்தப் போரில் பாகிஸ்தானுக்கு பலமான அடியை இந்தியா கொடுத்தது. போர் முடிவுக்கு வந்த போதும் இந்தியா அனுமதித்தால் மட்டுமே பாகிஸ்தானால் தனது படைகளைத் திரும்பப் பெற முடிந்தது. 1990களில் சர்வதேச அளவில் இந்தியா ஒரு முக்கியமான நாடாக உருவெடுக்கத் தொடங்கியிருந்தது. இதனால் கடந்த காலங்களைப் போல எந்தவொரு இஸ்லாமிய நாடும் பாகிஸ்தானுக்கு ஆதரவு தரவில்லை. ஆயுதங்களை விடுங்கள்.. பேச்சுக்குக் கூட பாகிஸ்தானுடன் நிற்கிறோம் எனச் சொல்லவில்லை.
இதில் பெரும்பாலான இஸ்லாமிய நாடுகள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் இரு நாடுகளும் பொறுமையாக இருக்க வேண்டும் என்பதை மட்டுமே வலியுறுத்தின.. எந்தவொரு நாடும் பாகிஸ்தானுக்கு உதவ முன்வரவில்லை இப்போதும் இந்தியா பாகிஸ்தான் இடையே போர் வெடித்தால் இதே சூழலே நிலவும் என்று தெரிகிறது.
சவுதி அரேபியா
சவுதிக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நீண்ட கால உறவு இருக்கிறது. இதன் காரணமாகவே பாகிஸ்தானுக்கு சவுதி பல பில்லியன் டாலர் கடன் வழங்கியுள்ளது. இருப்பினும், இந்தியா- சவுதி சமீப ஆண்டுகளில் நெருங்கி வருகின்றன. தனது எண்ணெய் கிணறுகள் காலியாவதற்குள் வேறு பொருளாதாரத்தை வளர்த்தெடுக்க சவுதி திட்டமிட்டு வருகிறது. அதற்கு இந்தியா தேவைப்படுகிறது. இதனால் இந்தியாவில் சுமார் 100 பில்லியன் டாலர்களை முதலீடு செய்யவும் சவுதி திட்டமிட்டுள்ளது. இதனால் போர் வெடித்தால் சவுதி நிச்சயம் பாகிஸ்தானுக்கு ராணுவ உதவி தராது. பேச்சுவார்த்தையை மட்டுமே வலியுறுத்தும்.
ஐக்கிய அமீரகம்
எண்ணெய் வளமிக்க ஐக்கிய அமீரகமும் தனது பொருளாதாரத்தை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளது. இதனால் அமீரகம் ஏற்கனவே பல பில்லியன் டாலர் இந்தியாவில் முதலீடு செய்யும் திட்டங்களை அறிவித்துள்ளது. இதனால் சவுதியும் போர்ப் பதற்றத்தைத் தணிக்கவே முயலும். பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாட்டை எடுக்காது.
ஈரான்
இந்தியா பாகிஸ்தான் இடையே பேச்சுவார்த்தை நடத்த ஏற்கனவே தனது வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி என்பவரை ஈரான் அனுப்பிவிட்டது. இதன் மூலமாகவே அவர்கள் நிலைப்பாடு நமக்குத் தெளிவாக தெரிகிறது. ஈரானின் சபாஹாரில் இந்தியா தான் ஒரு துறைமுகத்தைக் கட்டி வருகிறது. மேலும், பல திட்டங்களில் முதலீடு செய்துள்ளன. ஈரான் மீது பல்வேறு சர்வதேச பொருளாதாரத் தடைகள் உள்ள நிலையில், இந்தியாவின் இந்த முதலீடுகள் முக்கியமானதாக இருக்கிறது. ஈரானால் அதை இழக்க முடியாது. இதனால் அதிகபட்சம் பாகிஸ்தானுக்கு டிப்ளமேடிக் ஆதரவை மட்டுமே ஈரான் வழங்கும்.
துருக்கி
இதில் விதிவிலக்காக இருக்கும் ஒரு நாடு துருக்கி மட்டுமே. பாகிஸ்தானுடன் துருக்கி ஏற்கனவே பல்வேறு ராணுவ ஒப்பந்தங்களைக் கையெழுத்திட்டுள்ளது. ராணுவ விமானங்கள், டிரோன்களை பாகிஸ்தானுக்கு வழங்கி வருகிறது. மேலும், ஏரோஸ்பேஸ் ஒப்பந்தம் ஒன்றும் இரு தரப்பிற்கும் இடையே இருக்கிறது. இதனால் போர் வெடித்தால் துருக்கி மட்டுமே பாகிஸ்தானுக்குத் தொடர்ந்து ஆயுத சப்ளை வழங்கும்.












Click it and Unblock the Notifications