துபாய்: போதையில் காதலரைக் குத்திக் கொன்ற ரஷ்யப் பெண் கைது
துபாய்: காதலரின் நடத்தையில் சந்தேகம் கொண்ட ரஷ்யப் பெண் குடி போதையில் அவரைக் கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் துபாயில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
துபாயின் அல் குவசைஸ் பகுதியில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பின் ஒன்பதாவது தளத்தில் வசித்து வந்த அராபியர் ஒருவரும், அதே பகுதியில் வசிக்கும் 32 வயது ரஷ்யப் பெண் ஒருவரும் கடந்த ஓராண்டுக்கும் மேலாக காதலித்து வந்துள்ளனர்.
திருமணம் செய்து கொள்ளாத போதும், அவர்கள் இருவரும் கணவன், மனைவியாகவே வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் சமீபகாலமாக காதலரின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டிருப்பதாக அப்பெண் உணர்ந்துள்ளார். தனது காதலருக்கு வேறு சில பெண்களுடனும் தொடர்பு இருக்கலாம் என அவர் சந்தேகித்துள்ளார்.
கடந்த சனிக்கிழமையன்று குடி போதையில் இருந்த அந்தப் பெண், காதலரின் வீட்டுக்குச் சென்று இது தொடர்பாக அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றவே, கோபத்தில் அருகிலிருந்த கத்தியை எடுத்து காதலரை சரமாரியாகக் குத்தியுள்ளார் காதலி.
இதில், கழுத்து, மார்பு ஆகிய பகுதிகளில் கத்திக்குத்து காயமடைந்த காதலர் ரத்த வெள்ளத்தில் மயங்கி அதே இடத்திலேயே உயிரிழந்தார்.
பின்னர், இது தொடர்பாக தனது தோழிக்கு போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார் ரஷ்யப் பெண். அத்தோழி மூலமாக நடந்த கொலை போலீசுக்கு தெரிய வர, விரைந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் பலியானவரின் பிரேதத்தையும், கொலை ஆயுதமான கத்தியையும் பறிமுதல் செய்தனர்.
அதனைத் தொடர்ந்து ரஷ்யப் பெண்ணைக் கைது செய்த போலீசார், அவர் மீது மீது கொலை வழக்குப் பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications