உலகின் முதல் "சோலார் விமானம்" - அபுதாபியில் தொடங்கியது முதல் பயணம்.. நாளை அகமதாபாத் வருகை!!
அபுதாபி: சூரிய சக்தியில் மட்டுமே இயங்கும் உலகின் முதலாவது சோலார் விமானம் தனது முதலாவது சர்வதேச பயணத்தை அபுதாயில் இன்று தொடங்கியுள்ளது. முதலில் ஓமனின் மஸ்கட்டில் இந்த விமானம் தரையிறங்குகிறது. பின்னர் அங்கிருந்து இந்தியாவின் குஜராத் மாநிலம் அகமதாபாத்துக்கு நாளை இந்த விமானம் வருகை தர உள்ளது.
உலகம் முழுவதும் பெட்ரோலிய எரிபொருள் மற்றும் பல்வேறு ரசாயன நச்சு புகைகளால் சுற்றுச்சூழல் மாசுபட்டு வருகிறது என்று சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க, பல்வேறு ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

அத்தகைய ஆராய்ச்சியின் விளைவாக, சூரிய ஒளி மூலம் இயங்கும் முதல் சோலார் விமானம் தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன் தயாரிக்கப்பட்டது. இந்த விமானத்தின் 72 மீட்டர் நீள இறக்கைகளில் 17,248 சூரிய தகடுகள் பொருத்தப்பட்டு உள்ளன.
ஒரு ஏர்பஸ் ஏ380 விமான வடிவில் இருக்கும் இந்த சோலார் விமானத்தில், எடையை குறைப்பதற்காக 2.3 டன் கார்பன் தகடுகள் பொருத்தப்பட்டு உள்ளன.
இந்த சோலார் விமானத்தை எரிபொருள் மூலம் இயக்காமல் முற்றிலும் சூரிய ஒளி மூலம் இயங்கும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளது. பகல் நேரத்தில் சேமிக்கப்படும் சூரிய ஒளியை வைத்து, இரவு நேரத்திலும் அந்த விமானம் இயங்கும் வகையில் தொழில்நுட்பங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
இத்தகைய சிறப்புமிக்க சோலார் விமானம் இன்று காலை 6.30 மணியளவில் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அபுதாபி நகரில் தனது முதல் பயணத்தைத் தொடங்கியது. முதலில் ஓமனின் மஸ்கட்டில் தரை இறங்குகிறது.
பின்னர் அங்கிருந்து குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்து வருகை தருகிறது. அகமதாபாத்தில் இருந்து உத்தரப்பிரதேசத்தின் வாரணாசிக்கு பறக்கும் இந்த விமானம் கங்கை நதி மீது பறந்த படி சுற்றுச் சூழல் குறித்து பிரசாரம் செய்கிறது.
இதனைத் தொடர்ந்து மியான்மர் வழியாக சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு இந்த சோலார் விமானம் பயணத்தை மேற்கொள்கிறது.












Click it and Unblock the Notifications