ஆல்ப்ஸ் மலையை குடைந்து அமைக்கப்பட்ட உலகின் மிக நீளமான சுரங்க ரயில்பாதை திறப்பு...
சுவிட்சர்லாந்து: சுவிட்சர்லாந்து நாட்டில் 17 ஆண்டுகளாக கட்டப்பட்டு வந்த உலகின் நீளமான மற்றும் ஆழமான ரயில் சுரங்கப்பாதை நேற்று திறக்கப்பட்டது.
சுவிஸ் சாலைகளில் ஏற்படும் வாகனப்போக்குவரத்தை குறைக்க ஆல்ப்ஸ் மலையை குடைந்து 57 கி.மீ. நீளமுள்ள (35 மைல்) கோத்தார்ட் சுரங்கப்பாதை கட்டப்பட்டுள்ளது. ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கு பலன் அளிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள, 57.09 கி.மீ., நீளமுள்ள இந்த சுரங்க ரயில் பாதை, நேற்று அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
நேற்று நடந்த இதன் துவக்க விழாவில், முதல் ரயில் இயக்கப்பட்டது. சுவிட்சர்லாந்து அதிபர் ஜோஹன் சினிடர் அம்மான், ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மார்க்கெல், பிரான்ஸ் அதிபர் ஹோலண்டே, இத்தாலி பிரதமர் மோட்டியே ரென்சி உள்ளிட்டோர், முதல் ரயிலில் பயணம் செய்தனர்.
இந்த சுரங்கப்பாதையை பொறியியல் அற்புதம் என்றும் சுவிஸ்சின் துல்லியத்தன்மையோடு குறித்த நேரத்தில் மற்றும் 12 பில்லியன் டாலர் செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது என்றும் வர்ணிக்கப்படுகிறது.
இந்த ரயில் சுரங்கப்பாதை கட்டிமுடிக்கப்பட்ட நிலையில், இது ஏற்கனவே உலகின் மிக நீண்ட சுரங்க ரயில் பாதையாக தற்போது இருக்கும், ஜப்பானின் செய்கான் ரயில் சுரங்கப்பாதையை இரண்டாம் இடத்துக்கும், பிரிட்டனுக்கும் பிரான்ஸுக்கும் இடையே உள்ள 50.5 கிமீ நீளமான , இங்கிலீஷ் கால்வாய்க்கு அடியில் செல்லும் சானல் சுரங்க ரயில் பாதையை மூன்றாம் இடத்துக்கும் தள்ளிவிட்டது.
வருகிற டிசம்பர் மாதம் முதல் முழுமையான பயன்பாட்டிற்கு வரும்போது, 250க்கும் மேற்பட்ட சரக்கு ரயில்களும், 65 பயணிகள் ரயில்களும் இந்த சுரங்கப்பாதையை கடந்து செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
ரயில் சுரங்கப்பாதையில் முக்கிய அம்சங்கள்:
•ஆல்ப்ஸ் மலைத்தொடரில் சுவிட்சர்லாந்து பகுதியில் மலையை குடைந்து அமைக்கப்பட்ட இந்த சுரங்க ரயில்பாதை உலகின் நீளமான மற்றும் ஆழமான சுரங்கபாதை என்ற பெருமை பெற்றுள்ளது.
•ஆல்ப்ஸ் மலை தொடரில் சுரங்கப்பாதை அமைப்பதற்கு, 1947ல், சுவிட்சர்லாந்து பொறியாளர் கார்ல் எட்வர்டு க்ரூனர் முதன் முதலில் யோசனை தெரிவித்தார்.
•கடந்த, 1999ல் பணி துவங்கப்பட்டது; 2015ல் முடிவடைந்தது.
•இந்த மலையை குடைவதற்கு, 410 மீட்டர் நீளமுள்ள, 'போரிங்' இயந்திரம் பயன்படுத்தப்பட்டது. 2.8 கோடி டன் அளவிலான பாறைகள் உடைக்கப்பட்டன.
•இதற்கான செலவு 8.2 லட்சம் கோடி ரூபாய் இது, சுவிட்சர்லாந்தின் எர்ஸ்ட்பீல்டு மற்றும் போடியோ நகரங்களை இணைக்கிறது
•இதன் மூலம் இத்தாலியின் மிலன் நகருக்கும் சுவிட்சர்லாந்தின் வடக்கு பகுதியில் உள்ள ஜூரிச் நகருக்கும் இடையிலான பயணநேரம் 60 நிமிடம் குறைகிறது. போக்குவரத்து நெரிசலும் வெகுவாக குறைகிறது
•இந்த வழித்தடத்தில் தினமும், 200 எக்ஸ்பிரஸ் ரயில்கள், 65 பயணிகள் ரயில்கள் விடப்படும். இவற்றின் வேகம் மணிக்கு 200 கி.மீ.,