கிளாஸ்கோ: கோத்தபாய ராஜபக்சே தங்கியிருக்கும் ஹோட்டலை புலிகள் கொடியுடன் தமிழர்கள் முற்றுகை- போராட்டம்!
கிளாஸ்கோ: கோத்தபாய ராஜபக்சே தங்கியிருக்கும் ஹோட்டலை புலிகள் கொடியுடன் தமிழர்கள் முற்றுகை- போராட்டம்!
கிளாஸ்கோ (ஸ்காட்லாந்து): ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் ஐ.நா.வின் பருவநிலை மாற்றம் குறித்த மாநாட்டில் பங்கேற்றுள்ள இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்சேவுக்கு எதிராக ஈழத் தமிழர்கள் போராட்டம் நடத்தினர். இலங்கையில் தமிழினப் படுகொலைக்கு காரணமான போர்க்குற்றவாளி கோத்தபாய ராஜபக்சேவை பிரிட்டன் அரசு கைது செய்ய வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்பட்டது.
ஐ.நா.வின் 26-வது பருவநிலை மாற்றம் தொடர்பான மாநாடு ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வருகிறது. இம்மாநாட்டில் பிரதமர் மோடி, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்சே உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
பிரிட்டன் வந்துள்ள கோத்தபாய ராஜபக்சே 2009-ம் ஆண்டு இலங்கையில் தமிழினப் படுகொலை நிகழ்த்திய போர்க்குற்றங்களுக்காக கைது செய்ய வேண்டும் என்பது உலகத் தமிழர்களின் கோரிக்கை. இதனை வலியுறுத்தி கிளாஸ்கோ நகரில் இன்று போராட்டம் நடத்தப்பட்டது.

தமிழக தலைவர்கள் ஆதரவு
இப்போராட்டத்துக்கு தமிழகத்தின் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும் இப்போராட்டத்தில் உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் பெருந்திரளாக பங்கேற்க வேண்டும் என்றும் அவர்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

கிளாஸ்கோவில் கோத்தபாய எதிர்ப்பு
ஏற்கனவே ஸ்காட்லாந்து நாடாளுமன்றம் உள்ளிட்ட இடங்களில் கோத்தபாயவுக்கு எதிராக பிரமாண்ட லேசர் ஒளி பதாகைகளை தமிழர் அமைப்புகள் அமைத்துள்ளனர். அத்துடன் போர்க்குற்றவாளி கோத்தபாய ராஜபக்சேதான் என்பதை விவரிக்கும் வாகனம் ஒன்றும் கிளாஸ்கோ நகரை வலம் வந்து கொண்டிருக்கிறது.

பேருந்துகளில் புறப்பட்ட தமிழர்கள்
லண்டனில் இருந்து பல்வேறு தமிழர் அமைப்புகளின் நிர்வாகிகள் பேருந்துகளில் கிளாஸ்கோ நகருக்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர். முன்னதாக பெல்ஜியத்தில் பிரிட்டன் தூதரகம் முன்பாகவும் தமிழர்கள் போராட்டம் நடத்தினர். பிரான்சில் ஐரோப்பிய ஆலோசனை சபை அலுவலகம் முன்பாகவும் இதேபோல் போராட்டம் நடத்தப்பட்டது.

ஸ்காட்லாந்து பத்திரிகைகள்
இதனிடையே ஸ்காட்லாந்தில் முன்னணி பத்திரிகைகள் கோத்தபாய ராஜபக்சேவின் போர்க்குற்றங்கள் குறித்த சிறப்பு முகப்பு கட்டுரைகளை வெளியிட்டிருந்தன. மேலும் தமிழர்களை படுகொலை செய்து புதைகுழிகளை உருவாக்கி அதன் மீது மரக் கன்றுகளை கோத்தபாய அண்ட் கோ நட்டு வைப்பதை சித்தரிக்கும் படங்களையும் இந்த பத்திரிகைகள் வெளியிட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

கோத்தபாய முற்றுகை
கிளாஸ்கோ நகரில் கோத்தபாய ராஜபக்சே தங்கி இருக்கும் ஹோட்டலை முற்றுகையிட்டனர் தமிழர்கள். தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடியுடன் ஒன்று திரண்டு கோத்தபாய ராஜபக்சேவை கைது செய்ய வலியுறுத்தி அவர்கள் முழக்கங்கள் எழுப்பினர். இதையடுத்து அப்பகுதியில் பெரும் எண்ணிக்கையில் போலீசார் குவிக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications