100 ஆண்டுகளில் இல்லாத பாதிப்பு.. துருக்கியில் இதுவரை ஏற்பட்ட மேஜர் நிலநடுக்கங்கள்
துருக்கியில் கடந்த 1939-ஆம் ஆண்டு ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் சுமார் 30 ஆயிரம் பேர் பலியாகியிருந்தனர்.
வாஷிங்டன்: உலகில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் பகுதிகளில் ஒன்றான துருக்கியில் கடந்த 1939- ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கியின் வடகிழக்கு நகரில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் சுமார் 30 ஆயிரம் பேர் பலியாகினர்.
மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான துருக்கியில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது.
துருக்கியின் தொழில் நகரமாக அறியப்படும் காசியோன்டேப் நகரத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் மையம் காசியான்டேப் நகரிலிருந்து 33 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது.

துருக்கியில் நிலநடுக்கம்
சிரிய எல்லையை ஒட்டி அமைந்து இருக்கும் நகரத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் இரு நாட்டிலும் பாதிப்புகள் கடுமையாக ஏற்பட்டது. முதல் நிலநடுக்கம் ஏற்பட்டு 15 நிமிடங்கள் இடைவெளியில் மீண்டும் ஒரு சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.7 ஆக பதிவாகியது. இந்த நிலநடுக்கத்தின் அதிர்வலைகள் லெபனான், சிரியா, ஜோர்டான், ஈராக் ஆகிய நாடுகளிலும் உணரப்பட்டது.

அடுத்தடுத்து 3 நிலநடுக்கங்கள்
துருக்கியின் காஹரமான்மார்ஸ் என்ற நகரத்தில்தான் இந்த நிலநடுக்கம் மோசமாக ஏற்பட்டு இருக்கிறது. அடுத்தடுத்து 3 நிலநடுக்கங்கள் அங்கே அதிகாலையில் ஏற்பட்டு உள்ளது. இதனால் மக்கள் வெளியேறுவதற்கு முன் அவர்கள் மீது கட்டிடங்கள் விழுந்துள்ளன. அதிகாலை 5 மணி அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மக்கள் உறங்கிக்கொண்டு இருந்த நேரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்ட காரணத்தால் பலர் மீது வீடுகளின் பாகங்கள் விழுந்துள்ளது.

1300 பேர் பலி
இந்த நிலநடுக்கத்தால் இதுவரை 1,300 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். துருக்கியில் மட்டும் 912 பேரும் சிரியாவில் 320 பேரும் என மொத்த பலி எண்ணிக்கை 1,300 ஐ தாண்டியிருக்கிறது. நிலநடுக்கத்தால் சீட்டுக்கட்டுகள் போல கட்டிடங்கள் சரிந்து விழுந்தன. இதனால், இடிபாடுகளுக்குள் பலர் சிக்கினர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால், பலி எண்ணிக்கை இன்னும் கூட அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

இதுவரை ஏற்பட்ட நிலநடுக்கங்கள்
நிலநடுக்கத்தின் பின் அதிர்வுகள் மேலும் சில நாட்கள் ஏன் ஒருவாரத்திற்கு கூட நீடிக்கலாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சைப்ரஸ், எகிப்து, லெபனான் உள்ளிட்ட நாடுகளிலும் நிலநடுக்கத்தின் அதிர்வுகள் உணரப்பட்டது. உலகில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் பகுதிகளில் ஒன்று துருக்கி. அந்த நாட்டில் கடந்த 1939- ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கியின் வடகிழக்கு நகரில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. சுமார் 30 ஆயிரம் பேர் இந்த நிலநடுக்கத்தால் பலியானதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

17 ஆயிரம் பேர் பலி
கடந்த 1999- ஆம் ஆண்டு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.4 என்ற அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் துருக்கி உறைந்து போனது. சுமார் 17 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். துருக்கி நாட்டின் வரலாற்றில் ஏற்பட்ட மிக மோசமான நிலநடுக்க பாதிப்பாக இதுதான் இருந்து வருகிறது. கடந்த 2020 ஆம் ஆண்டில் 6.8 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 40 பேர் பலியாகினர். அதேபோல், கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் கூட துருக்கியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவானது. சக்தி வாய்ந்த இந்த நிலநடுக்கத்தால் 114 பேர் உயிரிழந்தனர்.












Click it and Unblock the Notifications