அமெரிக்க துணை அதிபர் பங்கேற்ற கூட்டத்தை தாக்க திட்டமிட்ட 2 பெண்கள் கைது
நியூயார்க்: அமெரிக்காவில் சுட்டுக்கொல்லப்பட்ட நியூயார்க் போலீஸ்காரர் ரஃபேல் ரமோஸின் இறுதிச் சடங்கின்போது குண்டு வைத்து தீவிரவாதிகளாக திட்டமிட்ட இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
அமெரிக்காவில் கருப்பினத்தைச் சேர்ந்த எரிக் கார்னர் கடந்த ஆண்டு போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் கருப்பினத்தவர் என்பதால் வேண்டும் என்றே கொல்லப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு பழிவாங்கும் வகையில் நியூயார்க் போலீஸ்காரர்களான ரஃபேல் ரமோஸ் மற்றும் வென்ஜியன் லூ ஆகியோர் பணியில் இருந்தபோது ஒரு கும்பலால் கடந்த டிசம்பர் 20ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதில் ரஃபேல் ரமோஸின் இறுதிச் சடங்கு டிசம்பர் 27ம் தேதி நடைபெற்றது. அந்த சடங்கில் துணை அதிபர் பிடென் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அந்த கூட்டத்தை தாக்க திட்டமிட்ட நோயல் வெலன்ட்சாஸ்(28), ஆசியா சித்திக்கி(31) ஆகிய இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நியூயார்க் நகரில் உள்ள க்வீன்ஸ் பகுதியில் ஒரே அறையில் தங்கியிருந்தவர்கள் நோயல் மற்றும் ஆசியா. 5 வயது குழந்தைக்கு தாயான நோயலும், திருமணமாகாத ஆசியாவும் தாங்கள் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறி வந்துள்ளனர்.
அவர்கள் இணையதளத்தில் 1993ம் ஆண்டு உலக வர்த்தக மையம் தகர்க்கப்பட்டது, 1995ம் ஆண்டு ஓக்லஹாமாவில் நடந்த குண்டுவெடிப்பு, 2013ம் ஆண்டில் பாஸ்டனில் மாரதான் போட்டிகளின்போது நடந்த குண்டுவெடிப்பு பற்றி ஆய்வு செய்துள்ளனர்.
பாஸ்டன் சம்பவத்தை அடுத்து நோயல் குக்கர் குண்டுகள் பக்கம் ஈர்க்கப்பட்டுள்ளார். அவர் மாறுவேடத்தில் இருந்த விசாரணையாளரிடம், கடையில் மளிகை பொருட்கள் வாங்குவதை விட போலீஸ்காரரை கொலை செய்வது எளிது என்று தெரிவித்துள்ளார். நோயல் தனது செல்போனில் அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடனின் புகைப்படத்தை வைத்துள்ளார். மேலும் 9/11 தாக்குதலை புகழ்ந்தும் பேசியுள்ளார்.
நோயலும், ஆசியாவும் நாட்டு வெடிகுண்டுகள் செய்வது பற்றி ஆய்வு செய்துள்ளனர். அவர்கள் அமெரிக்காவில் தாக்குதல் நடத்தவும் திட்டமிட்டுள்ள நிலையில் தான் போலீசாரிடம் சிக்கினர்.