இருந்தது ஒரு கொரோனா நோயாளி.. அவரும் குணமாகிவிட்டார்.. கொரோனா ஃப்ரீ நாடான ஏமன்
அல் முக்கல்லா: மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஏமனில் ஒரே ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் அவரும் குணமடைந்து வீடு திரும்பிவிட்டார். இதனால் கொரோனா இல்லாத நாடாக மாறியது ஏமன்.
ஏமன் நாட்டில் பல ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. இந்த நாட்டு அரசுக்கு எதிராக ஹவுதி இன மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதில் ஏமன் அரசுக்கு சவுதி அரேபியா ஆதரவு அளிக்கிறது. அது போல் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது. ஈரான் ஆயுத உதவியும் செய்து வருகிறது.
இந்த நிலையில் இங்கு அவ்வப்போது நடைபெறும் போரால் இரு தரப்பை சேர்ந்த ஏராளமானோர் கொல்லப்படுவது வழக்கமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் போருக்கு இடையே உலக நாடுகளை கொரோனா அச்சுறுத்தி வருகிறது.
60 வயது நபர்
இதற்கு இரையாகாமல் ஏமன் தப்பி வந்தது. இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி முதலில் ஒரு நபருக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 60-க்கும் மேற்பட்ட வயதை அடைந்த அவருக்கு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ஷேஹெர் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
குணமடைந்த நபர்
அந்த நாட்டின் அரசு அதிகாரியான அவருடன் தொடர்பில் இருந்த நபர்கள், குடும்ப உறுப்பினர்கள், உடன் பணிபுரிந்தவர்கள் என அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர். இந்த நிலையில் 15 நாட்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் தற்போது குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.
குறைத்துக் கொள்ள அறிவுரை
குணமடைந்தாலும் அந்த நபரை மேலும் 14 நாட்களுக்கு வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள். அவர் மாஸ்க் அணிந்து கொண்டும் கையில் கிளவுஸ் அணிந்து கொண்டும் இருக்குமாறும் கூறியுள்ளனர். மேலும் பொது இடங்களுக்கு செல்வதை குறைத்து கொள்ளுமாறும் கூறியுள்ளனர்.
சுகாதாரத் துறை
இந்த நபருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கொரோனா சோதனை எடுக்கப்பட்டதில் அவர்களுக்கு கொரோனா இல்லை என வந்துள்ளது. எனினும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மட்டும் சோதனைக்குள்ளாக மறுக்கிறார்கள். இதனால் அவர்கள் வீட்டுக்குள்ளேயே 21 நாட்களுக்கு இருக்குமாறு கூறி சுகாதாரத் துறை கூறியுள்ளது. அவர்களுக்கு கொரோனா அறிகுறி ஏதும் வருகிறதா என சுகாதாரத் துறை கண்காணித்து வருகிறது.
Recommended Video
6,700 பேருக்கு சோதனை
அந்த நபர் கொரோனாவிலிருந்து மீண்டு விட்டார் என்பதை அறிவிப்பதற்கு முன்னர் அங்கு கடந்த மாதம் முதல் அமலில் இருந்த ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது. மசூதிகளில் பிரார்த்தனை செய்து கொள்ளவும் தொழில்களை தொடங்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது வரை 6,700 பேருக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது. கொரோனா குறித்து முன்கூட்டியே தெரிந்து கொண்டு அவருடன் தொடர்புடையவர்கள் விரைந்து தனிமைப்படுத்தினால் நோய் பரவுவது கட்டுப்படுத்தப்படும் என்கிறது அந்நாட்டு சுகாதாரத் துறை.