சீனாவை இழுத்துவிட்ட புதின்! மாபெரும் போர் அபாயம்- இடையில் சம்பந்தமே இல்லாமல் சிக்கிய இந்திய நிறுவனம்
கீவ்: ரஷ்யா உக்ரைன் இடையேயான போர் பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. சமீபத்தில் ரஷ்யாவுக்காக சண்டையிட்ட சீன வீரர்களை உக்ரைன் கைது செய்ததாக ஜெலன்ஸ்கி கடந்த சில நாட்களுக்கு முன்பு குறிப்பிட்டிருந்தார். இதற்கிடையே புதின் மீது ஜெலன்ஸ்கி சில பரபர குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறார்.
ரஷ்யா உக்ரைன் இடையேயான போர் ஆண்டுக் கணக்கில் நடந்து வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு தரப்பினரும் முயன்றும் கூட அதற்கு நல்ல பலன் கிடைக்கவில்லை. அமெரிக்க அதிபர் டிரம்ப் கூட போரை முடிவுக்கு கொண்டு வர தீவிரமாக முயன்றார். ஆனால், அதுவும் கூட எந்தவொரு பலனையும் தரவில்லை.

ரஷ்யா உக்ரைன் போர்
கடந்த சில நாட்களுக்கு முன்பு ரஷ்யாவுக்காக சீன வீரர்கள் சிலர் போரிடுவதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சில பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். ஏற்கனவே வடகொரிய வீரர்கள் ரஷ்ய ராணுவத்திற்காக போரிடும் செய்தி வெளியாகியிருந்த நிலையில், சீன வீரர்களும் ரஷ்யாவுக்காக சண்டையிடுவது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக இருந்தது.
2வது மிக பெரிய தவறு
இதற்கிடையே உக்ரைனில் நடந்து வரும் போரில் சம்பந்தமே இல்லாமல் சீனாவை ரஷ்யா இழுத்துவிட்டு இருப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றஞ்சாட்டியுள்ளார். இது புதின் செய்த இரண்டாவது மிக பெரிய தவறு என்றும் சாடியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், "இது ரஷ்யா செய்த இரண்டாவது தவறு. முதலாவது வட கொரியா. இப்போது சீனா.. புதின் சம்பந்தமே இல்லாத மற்ற நாடுகளை போருக்கு இழுக்கிறார்கள். இது தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்துகிறது" என்றார்.
அதிகரிக்கும் பதற்றம்
இது உக்ரைன் ரஷ்யா போரில் பதற்றத்தை அதிகரித்துள்ளது. இதற்கிடையே இந்த போருக்கு நடுவே இப்போது இந்திய மருந்து நிறுவனம் சிக்கியுள்ளது. அதாவது ரஷ்யாவின் ஏவுகணை ஒன்று உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் உள்ள இந்திய மருந்து நிறுவனத்தின் கிடங்கை தாக்கியுள்ளது. உக்ரைனில் உள்ள இந்திய பிஸ்னஸ்கள் மீது ரஷ்யா வேண்டுமென்றே குறிவைத்து தாக்கி வருவதாக இந்தியாவில் உள்ள உக்ரைன் தூதரகம் குற்றம் சாட்டியுள்ளது.
இது தொடர்பாக உக்ரைன் தூதரகம் தனது ட்விட்டரில், "இன்று உக்ரைனில் உள்ள இந்திய மருந்து நிறுவனமான குசுமின் கிடங்கை ரஷ்ய ஏவுகணை தாக்கியது. இந்தியாவுடன் சிறப்பு நட்பு என்று கூறிக்கொண்டாலும், ரஷ்யா வேண்டுமென்றே இந்திய பிஸ்னஸ்களை குறிவைக்கிறது.. குழந்தைகள் மற்றும் முதியோருக்கான மருந்துகளை அழிக்கிறது" என்று சாடியுள்ளது.
இந்திய மருந்து நிறுவனம்
குசும் (Kusum) என்பது இந்திய தொழிலதிபர் ராஜீவ் குப்தாவுக்குச் சொந்தமான மருந்து நிறுவனமாகும். அது உக்ரைனில் உள்ள மிகப்பெரிய மருந்து நிறுவனங்களில் ஒன்று. உக்ரைன் மக்களுக்கு தேவையான அடிப்படை மருந்துகளை விநியோகம் செய்வதில் குசும் நிறுவனம் முக்கியமானது. இந்தச் சூழலில் தான் அந்நிறுவனத்தின் குடோன் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதேநேரம் தங்கள் குடோனை தாக்கியது ஏவுகணை இல்லை.. அது ஒரு ட்ரோன் என்று மருந்து நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
அதேபோல உக்ரைனுக்கான பிரிட்டன் தூதர் மார்ட்டின் ஹாரிஸ் என்பவரும் உக்ரைனில் உள்ள முக்கியமான மருந்து குடோன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளதை உறுதி செய்துள்ளார். அவரும் ரஷ்ய ஏவுகணை இல்லை... ரஷ்ய ட்ரோன்களாலேயே தாக்குதல் நடத்தப்பட்டதாக குறிப்பிட்டிருந்தார்.












Click it and Unblock the Notifications