வியப்பாக இருக்கிறது.. இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரின் செயல்பாடு.. பாஜகவில் இருந்து ஒரு பாராட்டு
காஞ்சிபுரம்: இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபுவின் செயல்பாடுகள் வியப்பாக இருக்கிறது. அன்றாடம் ஒவ்வொரு ஆலயத்துக்கு போகிறார்,ஆய்வு செய்கிறார். பலகோடி ரூபாய் நிலங்களை மீட்டுள்ளார் என செய்தி வருகிறது என்று பாஜக மூத்த தலைவர் இல கணேசன் தெரிவித்துள்ளார்.
இந்துக் கலாச்சாரம் மற்றும் இந்தியவியல் ஆய்வு மையம் சார்பில் வித்வான் வே மகாதேவன் எழுதிய ஸ்ரீ காஞ்சி சங்கர மடம் வரலாறு குறித்த ஆய்வு நூல்கள் வெளியீட்டு விழா காஞ்சிபுரம் ஓரிக்கை மகா பெரியவர் மணி மண்டபத்தில் காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்றது.
ஸ்ரீ காஞ்சி சங்கர மடம் குறித்த வரலாற்று ஆய்வு நூல்களை காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வெளியிட பாஜக மூத்த தலைவர் இல கணேசன் பெற்றுக்கொண்டார். வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பின்பு செய்தியாளர்களை சந்தித்த இல கணேசன் கூறியதாவது:

மரியாதை இல்லை
நூறு ஆண்டுகள் ஆன கட்சியின் தலைவராக இருந்தவரும், மீண்டும் தலைமை ஏற்க மறுப்பவருமான ராகுல்காந்தியின் அறிக்கைகளும் பேச்சுக்களும் ஒருநாள் கூட மரியாதைக்கு உரியதாகவும் தரம் உள்ளதாகவும் இல்லை என்பது வருத்தத்துக்குரியதாக உள்ளது.

ஆக்கிரமிப்பு நிலம்
இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரின் செயல்பாடுகள் வியப்பாக இருக்கிறது. அன்றாடம் ஒவ்வொரு ஆலயத்துக்கு போகிறார்,ஆய்வு செய்கிறார். பலகோடி ரூபாய் நிலங்களை மீட்டுள்ளார் என செய்தி வருகிறது. அப்போது ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை மீட்பது என்பது ஒரு பட்டனை தட்டினால் ஏற்படக் கூடிய விஷயமாக இருக்க மானால் இதற்கு முன்பு இருந்த அரசாங்கம் ஏன் இதைச் செய்யவில்லை என்ற கேள்வி வருகிறது.

பாராட்ட விரும்பவில்லை
அதனால் நடப்பது குறித்து மகிழ்ச்சி தான். ஆனாலும் மனதார பாராட்ட விரும்பவில்லை. ஏதோ ஒரு சந்தேகம் உள்ளுக்குள் ஓடிக் கொண்டிருக்கிறது பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

கோவில் நிலங்கள்
அரசாங்கம் விரும்பினாலும், நினைத்தாலும், கூட சமீபத்திய நீதிமன்ற தீர்ப்பு ஆலயத்திற்குள் இஷ்டப்படி அரசாங்கம் எதுவும் செய்ய முடியாது என்று தீர்ப்பு வந்திருப்பது ஒரு ஆறுதல்.

நீதிமன்றம் உறுதி
ஆலயத்தை சுற்றி ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தையெல்லாம் அகற்றி ஆகிவிட்டது என்றால் ஒருவேளை மொத்தமாக யாருக்காவது தரவேண்டுமென்று வைத்து இருப்பாரோ என்ற சந்தேகம் ஒரு சில பக்தர்களுக்கு வருகிறது,. ஆனால் அப்படி எல்லாம் இல்லை என்று நானே சொல்லி வருகிறேன். ஏன் நீதிமன்றமே அப்படி செய்ய முடியாது என்று சொல்லியிருக்கிறது அதனால் நம்புவோம்" இவ்வாறு இல.கணேசன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்












Click it and Unblock the Notifications