காஞ்சிபுரத்தில் பரபரப்பு! ஒரு வார்டில் மட்டும் உள்ளாட்சி தேர்தல் ஒத்திவைப்பு.. என்ன காரணம்?
காஞ்சிபுரம்: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், மாநில தேர்தல் ஆணையம் முக்கிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது.
Recommended Video
தமிழ்நாடு முழுவதும் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என, தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, வார்டு வரையறை செய்யப்பட்டபடி, ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்தப்பட உள்ளது.
வரும் பிப்ரவரி 19இல் வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், பிப்ரவரி 22இல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. மேலும், வரும் மார்ச் 4இல் மேயர், நகர்மன்ற தலைவர்களைத் தேர்வு செய்ய மறைமுகத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓபிஎஸ் vs தங்கத்தமிழ்ச் செல்வன்.. தேனி மாவட்டத்தில் எப்படி இருக்கிறது தேர்தல் களம்? முழு ரவுண்ட்-அப்
அதிமுக வேட்பாளர்
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள காவலன் கேட் வளத்தீஸ்வரன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் வேணுகோபால் என்பவருடைய மகன் ஜானகிராமன் (36). அப்பகுதியில் முக்கிய அதிமுக பிரமுகராக இருந்து வரும் ஜானகிராமன், நடைபெற உள்ள நகர்ப்புற தேர்தலில் காஞ்சிபுரம் மாநகராட்சியின் 36 வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு அதிமுக வேட்பாளராகப் போட்டியிடுகிறார்.
தூக்கிட்டு தற்கொலை
இந்நிலையில் நேற்று காலை திடீரென ஜானகிராமன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது உறவினர்கள் காவல்துறையினருக்குத் தெரிவித்தனர். இதையடுத்து இதுகுறித்து விஷ்ணு காஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து உயிரிழந்த ஜானகிராமனின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காகக் காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் முதற்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
சாலை மறியல்
இந்தச் சூழலில் அதிமுக வேட்பாளர் ஜானகிராமன் தற்கொலை செய்துகொண்ட தகவல் அறிந்த அப்பகுதியைச் சேர்ந்த அதிமுகவினர், விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாற்றுக் கட்சியினரின் மிரட்டல் காரணமாகவே ஜானகிராமன் உயிரிழந்ததாகக் குற்றஞ்சாட்டிய அதிமுகவினர், செல்போன் மூலம் அவருக்கு யார் யாரெல்லாம் மிரட்டல் விடுத்தார்கள் என்பதைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
மிரட்டல்
குறிப்பாக அவரை எதிர்த்துப் போட்டியிடும் திமுக வேட்பாளரின் மிரட்டல் காரணமாகவே மன உளைச்சலில் ஜானகிராமன் தற்கொலை செய்து கொண்டதாகவும், இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுகவினர் வலியுறுத்தினர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் மற்றும் கட்சியினரிடம் இருந்து தேர்தல் நடத்தும் அலுவலர் அறிக்கையைக் கேட்டுள்ளனர்.
தேர்தல் ரத்து
அதிமுக வேட்பாளரின் சந்தேகத்திற்கிடமான மரணத்தைத் தொடர்ந்து, காஞ்சிபுரம் மாநகராட்சியில் 36வது வார்டில் மட்டும் தேர்தலை ஒத்திவைப்பதாக மாநகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆணையருமான நாராயணன் அறிவித்துள்ளார். தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய விதி எண் 34 (1) ( C)ன் படி தேர்தல் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான அறிவிப்பு நோட்டீஸ் தற்போது காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலக அறிவிப்புப் பலகையில் ஒட்டப்பட்டுள்ளது.