விஜய்க்கு அரசியல் தெரியாதா? சைலன்ட்டாக திமுக – அதிமுக கதையை முடிக்கும் முதல்வர்.. கவனிச்சீங்களா
சென்னை: முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் தான் விஜய் அரசியலுக்கு புதியவர். அவரால் திமுக, அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது. ஏனென்றால் விஜய்க்கு அரசியல் தெரியாது என்று ஒரு தரப்பினர் கூறி வரும் நிலையில் ஒரே கல்லில் திமுக, அதிமுக என இரு திராவிட கட்சிகளின் கதையை முடிக்கும் வேலையில் இறங்கி உள்ளார் விஜய். அப்படி என்ன நடந்தது? வாங்க பார்க்கலாம்.
தமிழக சட்டசபை தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பெரும்பான்மை கிடைக்காத நிலையில் தனிப்பெரும் கட்சியானது. இதையடுத்து திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய காங்கிரஸ் கட்சியின் ஆதரவை தவெக பெற்றது. அதன்பிறகு திமுக கூட்டணியில் வென்ற 2 கம்யூனிஸ்ட்கள், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், விசிக உள்ளிட்ட 4 கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவளிப்பதாக தவெகவை அரவணைத்தது.

தவெக தலைவர் விஜய் முதல்வரானார். 9 பேர் அமைச்சர்களாகினர். சட்டசபையில் நம்பிக்கை கோரியபோது தவெகவிற்கு அதிமுகவின் சிவி சண்முகம் - எஸ்பி வேலுமணி தரப்பு 25 எம்எல்ஏக்களின் ஆதரவு கிடைத்தது. இதன்மூலம் 144 எம்எல்ஏக்களின் ஆதரவில் தவெக ஆட்சி பெரும்பான்மையை நிரூபித்துள்ளது.
இந்நிலையில் தான் இன்று முதல் முறையாக விஜய் தனது அமைச்சரவையை விரிவாக்கம் செய்கிறார். இன்று காலையில் சென்னையில் உள்ள மக்கள் பவனில் (ராஜ்பவன்) ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அமைச்சர்களுக்கு பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைக்கிறார். விஜய்க்கு ஆதரவளித்தாலும் கூட 2 கம்யூனிஸ்ட்கள், விசிக மற்றும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து திமுக கூட்டணியில் தான் பயணிக்கிறோம் என்று கூறி வருகின்றன.
இப்படியான சூழலில் தான் முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் விசிக மற்றும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளுக்கு தலா ஒரு இடங்கள் வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இது திமுக தலைமைக்கு அதிர்ச்சி வைத்தியமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் விஜய்யின் தற்போதைய செயல் என்பது அதிக கவனம் பெற்றுள்ளது. விஜய் தனது அமைச்சரவையில் பிற கட்சியினரை சேர்ப்பதன் மூலமாக ஒரே கல்லில் திமுக மற்றும் அதிமுகவை காலி செய்துள்ளார்.
அதாவது விஜய் தனக்கு தேவையான பெரும்பான்மையை சட்டசபையில் நிரூபித்துவிட்டார். இனி 6 மாதங்களுக்கு சிக்கல் இல்லை. அதன்பிறகு தான் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முடியும். இப்படியான சூழலில் விஜய் தொடர்ந்து பெரும்பான்மையை தக்கவைக்க வேண்டும் என்று நினைக்கிறார். இதனால் தான் கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சர் பதவிகளை வழங்குகிறார். அமைச்சர் பதவிகளை பெற்ற பிறகு அந்த கட்சிகள் தவெக கூட்டணியை விட்டு செல்ல யோசிக்கும் என்பது விஜய்யின் நிலைப்பாடு.
இன்னொரு விஷயம் என்னவென்றால் திமுக மற்றும் அதிமுக என இரு கட்சிகளையும் அரசியல் ரீதியாக பலவீனப்படுத்த வேண்டும் என்பதில் விஜய் உறுதியாக உள்ளார். இதற்கான பணியை தான் அவர் சைலன்ட்டாக செய்து வருகிறார். தற்போது திமுக கூட்டணி கட்சியில் இருந்து காங்கிரஸ் கட்சியை பிரித்து தன்பக்கம் இழுத்துவிட்டார். அதேவேளையில் 2 கம்யூனிஸ்ட்கள், விசிக மற்றும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுகளை விஜய் பெற்றிருந்தாலும் அந்த கட்சிகளின் தலைவர்கள் திமுக கூட்டணியில் தொடர்வதாக கூறுகின்றனர். இதில் விசிக, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடமளிப்பதன்மூலமாக விஜய் திமுக கூட்டணி கட்டமைப்பையே உடைக்கிறார்.
மறுபுறம், அரசியலில் அதிமுகவின் இடத்தை முழுமையாக கைப்பற்ற விஜய் கணக்கு போட்டு காய் நகர்த்தி வருகிறார். தற்போது அதிமுக என்பது பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஒரு அணியாகவும், சிவி சண்முகம் - எஸ்பி வேலுமணி தலைமையில் இன்னொரு அணியாகவும் செயல்பட்டு வருகிறது. இந்த பிளவுக்கு விஜய்யின் தேர்தல் வெற்றி தான் முக்கிய காரணம். அவரது வெற்றி தான் அதிமுகவை அதிகாரத்தில் இருந்து இன்னும் 5 ஆண்டுகள் தள்ளிவைத்துள்ளது.
இதனை அதிமுக மூத்த எம்எல்ஏக்களால் சகிக்க முடியவில்லை. அதில் உருவானது தான் சிவி சண்முகம் - எஸ்பி வேலுமணி தரப்பின் ஆதரவு எம்எல்ஏக்கள் அணி. இந்த அணியினரின் ஆதரவு தவெகவிற்கு கிடைத்துள்ளது. இதன்மூலம் அதிமுக மீதான நம்பிக்கை மக்களுக்கு குறைய வாய்ப்புள்ளது. அதிமுகவில் நிலவும் குழப்பம் அந்த கட்சியை பலவீனப்படுத்தும். இதனால் எளிதில் அதிமுகவின் இடத்தை தவெகவால் பிடிக்க முடியும் என்பது விஜய்யின் ஐடியா என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.












Click it and Unblock the Notifications