என்ன குமுதா பேச்செல்லாம் ஒரு மாதிரி இருக்கு! டோனை மாற்றிய விஜய்! ஷாக்கில் திருமா! வாய் திறக்காத வைகோ
சென்னை: தவெக கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் தோழமைக் கட்சிகளுக்கு முதல்வர் விஜய் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் கூட்டணியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோரின் சமீபத்திய பேச்சுகள் குறித்து முதல்வர் அதிருப்தி தெரிவித்ததாகவும், ஆதவ் அர்ஜுனா கண்டித்த பின்னரே இருவரின் பேச்சிலும் மாற்றம் ஏற்பட்டதாகவும் தவெக வட்டாரங்களில் பேசப்படுகிறது.
பெரும்பான்மை பலம் இல்லாத தவெக அரசுக்கு காங்கிரஸ், விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன. கம்யூனிஸ்ட் கட்சிகள் வெளியிலிருந்து ஆதரவு வழங்கி வரும் நிலையில், காங்கிரஸ், விசிக மற்றும் ஐயூஎம்எல் ஆகியவை அமைச்சரவையிலும் இடம்பெற்றுள்ளன.
சமீபகாலமாக விசிக தலைவர் திருமாவளவனின் சில கருத்துகள் முதல்வர் விஜய்க்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. குறிப்பாக, சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் சொன்ன "அப்பாவை காணோம்" கமெண்டை திருமாவளவன் வெளிப்படையாக விமர்சித்தது தவெக தரப்பு விரும்பவில்லை.

திருமாவளவன்
அதோடு, விசிக சமூகநீதித் துறைக்கு பதிலாக முக்கியத்துவம் வாய்ந்த அமைச்சகத்தை ஒதுக்க வேண்டும், இல்லையெனில் அரசுக்கு அளிக்கும் ஆதரவை மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கும் என திருமாவளவன் பேசியதாகவும், திருச்சி கிழக்கு தொகுதி, உள்ளாட்சித் தேர்தல் ஒதுக்கீடு மற்றும் வாரியப் பதவிகள் தொடர்பாகவும் அவர் மறைமுக கோரிக்கைகளை முன்வைத்ததாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து முதல்வர் விஜய் தனது முக்கிய ஆலோசகர்களான ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி மற்றும் தனிச்செயலாளர் ஜெகதீஸ் ஆகியோருடன் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
விஜய்
அந்த ஆலோசனையில், "இரண்டு எம்.எல்.ஏ.க்களை வைத்துக்கொண்டு ஒரு அமைச்சர் பதவியுடன் தொடர்ந்து அழுத்தம் கொடுப்பது ஏற்க முடியாதது. அடிக்கடி ஆதரவை வாபஸ் பெறுவோம் என்ற பேச்சு தேவையற்றது. தேவையானால் இடைத்தேர்தலை சந்திக்கலாம்" என்ற கருத்து முன்வைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆதவ் அர்ஜுனா
இதையடுத்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை அழைத்த முதல்வர் விஜய், "அரசுக்கு ஆதரவை வாபஸ் பெற விரும்பினால் அதையும் அவர்கள் முடிவு செய்யலாம் என்பதை தெரிவியுங்கள். இதை சாதாரணமாகவோ அல்லது எச்சரிக்கையாகவோ சொல்லலாம். நான் கூறியதாகவே தெரிவியுங்கள்" என்று கூறியதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. அதன்படி, ஆதவ் அர்ஜுனா திருமாவளவனை தொடர்புகொண்டு தகவலை தெரிவித்ததாகவும், அதற்கு திருமாவளவன், "முதல்வர் என்னை தவறாக புரிந்துகொண்டிருக்கிறார்" என்று விளக்கம் அளித்ததாகவும் கூறப்படுகிறது.
வெங்கடநாராயணா
இதன் பின்னர் விஜய்யுடன் மோதலை தவிர்க்கும் வகையில் திருமாவளவன் தனது அணுகுமுறையை மாற்றியதாக கூறப்படுகிறது. டெல்லி பிரதிநிதியாக விஜய்யின் நண்பர் வெங்கடநாராயணா நியமிக்கப்பட்டபோது பல எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், திருமாவளவன் மட்டும் அந்த நியமனத்தை ஆதரித்தார். மேலும், "தவெக அரசிடம் எந்த டிமாண்டும் வைக்கவில்லை. திருச்சி கிழக்கில் போட்டியிட விருப்பமும் இல்லை. துறை மாற்றமும் கேட்கவில்லை" என்று அவர் பின்னர் விளக்கம் அளித்ததும் குறிப்பிடத்தக்கது.
தோழமைக் கட்சிகள்
இதற்கிடையே மாமல்லபுரத்தில் நடைபெற்ற தோழமைக் கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்திற்காக அமைச்சர்கள் ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா கூட்டணி கட்சித் தலைவர்களை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர். ஆதவ் திருமாவை சந்தித்தபோது, "எங்கள் மீது எந்த கோபமும் இல்லையே?" என்று அவர் கேட்டதாகவும், அதற்கு அமைச்சர்கள், "அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. கூட்டத்தில் அவசியம் பங்கேற்க வேண்டும்" என்று மட்டும் கூறிவிட்டு சென்றதாகவும் கூறப்படுகிறது.
வைகோ
இதற்கிடையில், "மதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தால் இடைத்தேர்தலில் வெற்றி பெறச் செய்வேன் என்று முதல்வர் கூறினார்" என்ற வைகோவின் கருத்தும் அரசியல் சர்ச்சையை கிளப்பியது. ஆட்சி அமைப்பதிலும், ஆட்சியை தக்க வைத்துக்கொள்வதிலும் குதிரைப் பேர அரசியல் நடைபெறுகிறது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் சூழலில், வைகோவின் கருத்து தேவையற்ற சர்ச்சையை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
முதல்வர் அதிருப்தி
இதுகுறித்து உளவுத்துறையும் முதல்வரிடம் தனது கவலையை தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து, அமைச்சர்கள் ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா வைகோவை சந்தித்து கூட்ட அழைப்பை வழங்கியபோது, அவரது கருத்து குறித்து முதல்வரின் அதிருப்தியையும் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதன் பின்னரே, "மதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறியது நான்தான். முதல்வர் அப்படிச் சொல்லவில்லை" என்று வைகோ விளக்கம் அளித்தார்.
திருமாவளவன் மற்றும் வைகோ ஆகியோரின் தொடர்ச்சியான விளக்கங்களுக்கு காரணம் முதல்வர் விஜய் தரப்பிலிருந்து சென்றதாகக் கூறப்படும் எச்சரிக்கையே காரணம் என தவெக வட்டாரங்களில் பேசப்படுகிறது.














Click it and Unblock the Notifications