முதலீட்டுக்கு மேல் லாபம் கொட்டணுமா? கடன் நீங்கி பிசினஸ் சூப்பரா ஓட இந்த 1 வாஸ்து மாற்றம் போதும்
சென்னை: நாம் குடியிருக்கும் வீடுகளுக்கு மட்டுமல்ல, தொழில் செய்யும் இடங்களிலும் வாஸ்து சாஸ்திரம் மிகவும் முக்கியமானது. தொழிற் கூடங்கள் மற்றும் நிறுவனங்கள் சிறப்பான முறையில் இயங்கி, பெருத்த லாபத்தை அடைய வேண்டுமானால், அலுவலகத்தின் திசைகள் முதல் பயன்படுத்தும் பொருட்கள் வரை வாஸ்து நுட்பங்களை சரியாகப் பின்பற்ற வேண்டும். இதில் ஒருசிலவற்றை மட்டும் பார்ப்போம்.
ஒரு அலுவலகத்தின் நுழைவு வாயில் கிழக்கு அல்லது வடக்கு திசை நோக்கி அமைவது சிறப்பானதாகும்.. காரணம், வடக்கு திசை அதிக லாபத்தையும், கிழக்கு திசை தொழிலுக்கான சிறந்த யுக்திகளையும் நன்மைகளையும் தரும். கிழக்கு பார்த்த கடைகளின் கதவை வடகிழக்கில் வைக்க வேண்டும். கடையில் சாமி படத்தை ஈசான்ய மூலையில் வைக்கக் கூடாது.

தென்மேற்கு பகுதி - திசை
அலுவலகத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களின் அறை எப்போதுமே தென்மேற்கு பகுதியில் சதுரம் அல்லது செவ்வக வடிவத்தில் இருக்க வேண்டும். அவர் வடக்கு அல்லது கிழக்கு நோக்கி உட்காரலாம். இதில் வடக்கு திசை வேலைகளில் முழு கவனத்தைத் தரும். அவரது நாற்காலிக்கு பின்புறம் ஜன்னல், கண்ணாடி இல்லாமல் வெற்றுச் சுவராகவோ அல்லது மலைப் படமாகவோ இருப்பது நல்லது.
கணக்கு பார்ப்பவர்கள் குபேரருக்குரிய வடக்கு திசையையும், வரவேற்பாளர்கள் வடக்கு அல்லது கிழக்கு திசையையும் நோக்கி அமரலாம். ஊழியர்கள் தென்கிழக்கு அல்லது வடமேற்கில் கூட்டங்களை நடத்தலாம்.
அலுவலகத்தின் வரவேற்பறை
அலுவலகத்தின் வரவேற்பறையில் தினமும் காலையில் புத்தம் புதிய பூக்களை வைப்பதும், லேசான தெய்வீக நறுமணம் தரக்கூடிய அதாவது சந்தனம், ஜாஸ்மின் இருக்குமாறு பார்த்துக்கொள்வதும் கஸ்டமர்களை ஈர்க்கும். இது எதிர்மறை ஆற்றலை நீக்கி, புதிய தொழில் வாய்ப்புகளையும், வாடிக்கையாளர்களின் நம்பிக்கையையும் தேடித்தரும்.
அதேபோல தொழில் ஒப்பந்தங்கள், சொத்து பத்திரங்கள் மற்றும் மிக முக்கியமான ஃபைல்ஸ் எப்போதும் அலுவலகத்தின் தென்மேற்கு பகுதியில் உள்ள அலமாரியில் வைக்க வேண்டும். இப்படி வைப்பதன் மூலம் தேவையற்ற சட்ட சிக்கல்கள் தவிர்க்கப்பட்டு, புதிய ஆர்டர்களும், ஒப்பந்தங்களும் எந்தத் தடையும் இல்லாமல் சுமுகமாக முடிவடையும்.
பிரம்மஸ்தானம் - திறந்தவெளி
அலுவலகத்தின் மையப்பகுதியான "பிரம்மஸ்தானம்" எப்போதும் திறந்தவெளியாக, எடையற்றதாக இருக்க வேண்டும். இங்கு படிக்கட்டுகளையோ அல்லது கனமான தூண்களையோ அமைக்கக் கூடாது.. இது நிதி இழப்பை ஏற்படுத்தும். மேலும், படிக்கட்டுகளுக்கு சிவப்பு மற்றும் கருப்பு நிறங்களைத் தவிர்க்க வேண்டும்.
வட்ட வடிவ அறைகள் மற்றும் வட்ட மேஜைகளை தவிர்த்து, சதுரம் அல்லது செவ்வக வடிவத்தையே பயன்படுத்த வேண்டும். அலுவலகத்தை எப்போதும் துடைத்து சுத்தமாக வைத்திருந்தால் மகாலட்சுமி வாசம் செய்வாள். சுவர்களுக்கு அடர் நிறங்களை தவிர்த்து வெள்ளை, க்ரீம் அல்லது வெளிர் நீல வண்ணங்களை பூசலாம்.
பணப்பெட்டி - குபேர திசை
பணப்பெட்டியை தெற்கு சுவரை ஒட்டி, குபேர திசையான வடக்கு நோக்கித் திறக்குமாறு வைப்பது பணவரவை அதிகரிக்கும். ஆனால், இது கழிப்பறைக்கு அருகில் இருக்கக்கூடாது. அலுவலகத்தில் செழிப்பைத் தரும் மூங்கில் போன்ற வாஸ்து செடிகளை வளர்க்கலாம்; முட்செடிகளைத் தவிர்க்க வேண்டும்.
விரிசல் விழுந்த கண்ணாடி பொருட்களைப் பயன்படுத்தக் கூடாது. சுவர் கடிகாரம் ரிப்பேர் ஆகிவிடாமல் எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கும்படி பார்த்து கொள்ள வேண்டும்.. வடகிழக்கு பகுதியில் சிறிய நீர் ஊற்று அல்லது மீன் தொட்டி வைப்பது பணப்புழக்கத்தை அதிகரிக்கும்.
கம்ப்யூட்டர்கள், சர்வர்கள் போன்ற மின்சார சாதனங்களை அலுவலகத்தின் தென்கிழக்கு அதாவது அக்னி மூலையில் வைக்க வேண்டும். வீட்டிலிருந்து வேலை செய்பவர்கள் தென்கிழக்கு திசையில் லேப்டாப், செல்போன் வைத்துப் பயன்படுத்தினால் பணியில் உயர்வு கிடைக்கும். மேஜைகளில் மின்சார ஒயர்கள் வெளியே தெரியாதவாறு நேர்த்தியாக மறைத்து வைப்பது நேர்மறை ஆற்றலைத் தக்கவைக்க உதவும் என்பார்கள்...!!












Click it and Unblock the Notifications