நட்பாகும் இந்தியா – பாகிஸ்தான்? இனி சண்டை வேண்டாம்.. மோடி – ஷெபாஸ் ஷெரீப்பிற்கு 117 பேர் கடிதம்
டெல்லி: இந்தியா - பாகிஸ்தான் இடையே இனி சண்டை வேண்டாம். இருநாடுகளும் நட்பு பாராட்ட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உள்ளிட்டோருக்கு இந்தியா, பாகிஸ்தானை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் 117 பேர் கடிதம் எழுதி உள்ளது அதிக கவனம் பெற்றுள்ளது.
நம் நாட்டின் அண்டை நாடாக பாகிஸ்தான் உள்ளது. நம்மிடம் இருந்து தனி நாடாக பிரிந்த பிறகு தொடர்ந்து மோதல் நீடித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு வழங்கி வருவது தான். அதுமட்டுமின்றி நம்நாட்டுடன் காஷ்மீர் விவகாரத்தில் மோதுவது, பயங்கரவாத தாக்குதல் நடத்துவது தான் இருநாடுகள் இடையேயான உறவை துண்டித்துள்ளது.

கடந்த ஆண்டும் கூட காஷ்மீரின் பஹல்காமின் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தி 26 சுற்றுலா பயணிகளை கொன்றனர். இதையடுத்து நம் நாடு சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தியது. அதுமட்டுமின்றி 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தது. இதில் தாக்குப்பிடிக்க முடியாத பாகிஸ்தான் மண்டியிட்டது. இதனால் 3 நாள் போர் முடிவுக்கு வந்தது.
அதன்பிறகும் கூட பாகிஸ்தான் திருந்தவில்லை. இந்தியா எங்களை தாக்கினால் அணுகுண்டு வீசுவோம். சிந்து நதி நீரை தராவிட்டால் ரத்த ஆறு ஓடும். சிந்து நதி நீரை தடுப்போரின் கைகளை வெட்டுவோம் என்று மிரட்டி வருகின்றனர் பாகிஸ்தான் அரசியல்வாதிகள். இதனால் இந்தியா - பாகிஸ்தான் உறவு தற்போதும் மோசமாகவே உள்ளது. இதற்கு முழுக்க முழுக்க முக்கிய காரணம் பாகிஸ்தான் தான்.
இந்நிலையில் தான் தற்போது பிரதமர் மோடி, பாகிஸ்தான் பிரதமர் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆகியோருக்கு முக்கிய பிரமுகர்கள் 117 பேர் கடிதம் ஒன்றை எழுதி உள்னர். இந்த கடிதத்தில் இருநாடுகளை சேர்ந்த அரசியல்வாதிகள், தூதரக முன்னாள் அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள் உள்பட பலரும் கையெழுத்திட்டுள்ளனர். இந்தியா சார்பில் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பாரூக் அப்துல்லாவின், பிரிவினைவாத லீடர் மிர்வாஸ் உமர் பரூக், பிடிபி கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி, ஆர்ஜேடி எம்பி மனோஜ் ஷா, ஏஜேயுபி தலைவர்ஹிமாயுன் கபீர் உள்பட 61 பேர் கையெழுத்திட்டுள்ளனர்.
பாகிஸ்தான் சார்பில் முன்னாள் வெளியறவுத்துறை அமைச்சர் குர்ஷித் மஹ்முத கசூரி, தூதரக அதிகாரி அஷ்பர் ஜஹாங்கீர் காசி, எம்பி இஸ்பான்யார் பாந்த்ரா உள்பட 56 பேர் கையெழுத்திட்டுள்ளனர். 'அமைதி மற்றும் முன்னேற்றத்துக்கான மையம்' (Centre for Peace and Progress) என்ற அமைப்பின் பெயரில் இந்த கடிதம் வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
''இந்தியா - பாகிஸ்தான் இருநாடுகளின் மக்கள்தொகை என்பது உலகில் உள்ள மொத்த மக்கள்தொகையில் ஐந்தில் ஒரு பங்காக உள்ளது. இதில் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள். இப்படி இருக்கும்போது இருநாடுகள் மோதலுக்கு பதில் அமைதி மற்றும் வளர்ச்சி, இருதரப்பு ஒத்துழைப்பு உள்ளிட்டவற்றை நோக்கி செல்ல வேண்டும். பல பத்தாண்டுகளாக நீடிக்கும் பிரச்சனை என்பது சமூக, பொருளாதாரம் மட்டுமின்றி உயிரிழப்புகளையும் ஏற்படுத்தி உள்ளது.
இதனால் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பகையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். இருநாடுகள் இடையேயான தூதரக உறவை மீண்டும் பதுப்பிக்க வேண்டும். தூதர்கள் நியமனம் செய்ய வேண்டும். விசா சேவைகளை தொடங்க வேண்டும். இதன் மூலம் லட்சக்கான இளைஞர்களுக்கு நல்வாழ்வு கிடைக்கும். வேலைவாய்ப்புகள் உருவாகும். இருநாடுகளும் பாதுகாப்பு குறித்த கவலையை கைவிட வாய்ப்புள்ளது.
முதற்கட்டமாக தூதரக ரீதியிலான உறவை சீரமைக்க பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும்.
ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட தீர்ப்படாத பிரச்சனைகள் குறித்து கடந்த 2004 முதல் 2007 வரை விவாதிக்க பின்பற்றப்பட்ட முறையை மீண்டும் கொண்டு வந்து பிரச்சனைகளுக்கு பேச்சுவார்த்தை வழியாக தீர்வு காண வேண்டும். இருநாடுகள் ஜம்மு காஷ்மீர் பகுதியில் ராணுவ குறைப்பு, பதற்றம் குறைப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
வர்த்தகத்திற்காக அட்டாரி - வாகா எல்லையை முழுமையாக திறக்க வண்டும். ஸ்ரீநகர் - முசாஃபராபாத் பஸ் சேவையை தொடங்க வேண்டும். விமான சேவைகளை தொடங்க வேண்டும். இதற்கு இருநாடுகளின் தலைவர்களும் பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும். தெற்காசியாவில் எதிர்காலம் பிரிவினை, மோதல் இல்லாமல் அமைதி, செழிப்பு மற்றும் கூட்டு வளர்ச்சியாக இருக்க வேண்டும். இந்த கோரிக்கை என்பது எந்தவொரு அரசியல் நிலைப்பாட்டையும் ஆதரிப்பதற்கானது இல்லை. மாறாக மோதல்கள் இல்லாமல் சுமார் 200 கோடி மக்களின் எதிர்கால நலன்களை கருத்தில் கொண்டு எழுதப்பட்டுள்ளது'' என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications