ம்ஹும்..இது வேலைக்காகாது! அறிவாலயத்தை காலி செய்யும் ஓபிஎஸ்! அப்பாவை நெறுக்கும் மகன்! பரபர பாலிடிக்ஸ்
சென்னை: தமிழக அரசியலில் கட்சி தாவல்கள், ராஜினாமாக்கள், புதிய கூட்டணி என தொடர்ந்து பரபரப்பாகவே இருந்து வரும் நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் விரைவில் தனது சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணையலாம் என்ற தகவல் தேனி வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுகவில் சேர்ந்து 3 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், மாவட்ட செயலாளர் பதவி, கட்சி பதவி எதுவும் கொடுக்காததாலும், மகன் ரவீந்திரநாத் தரும் நெருக்கடியாலும் அவர் தவெகவுக்கு தாவ இருக்கிறார் என்கின்றனர் பெரியகுளம்வாசிகள்.
2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு தமிழக அரசியலில் கணிசமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்தாலும், தனிப்பெரும்பான்மை இல்லாததால் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை அமைத்தது.
அதன் பின்னர் பல்வேறு அரசியல் மாற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. குறிப்பாக அதிமுகவில் இருந்து பல முன்னாள் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் விலகி வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஓ பன்னீர்செல்வம்
சிலர் தங்களது எம்.எல்.ஏ. பதவிகளையே ராஜினாமா செய்துள்ள நிலையில், மேலும் சிலரும் அதே முடிவை எடுக்கலாம் என்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த சூழலில்தான் தற்போது ஓ. பன்னீர்செல்வம் தொடர்பான பரபரப்பைக் கிளப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசியல் வட்டாரங்களில் பரவி வரும் தகவலின்படி, திமுகவில் இணைந்த பிறகு தனக்கு முக்கியமான கட்சிப் பொறுப்பு வழங்கப்படும் என்று ஓ.பி.எஸ். எதிர்பார்த்ததாக கூறப்படுகிறது. ஆனால் இதுவரை மாவட்டச் செயலாளர் பதவியோ அல்லது வேறு முக்கிய பொறுப்போ வழங்கப்படாததால் அவர் அதிருப்தியில் இருப்பதாக பேசப்படுகிறது.
ஓ.பி. ரவீந்திரநாத்
அதுமட்டுமல்லாமல், அவரது ஆதரவாளர்களிடையிலும் தனது அரசியல் எதிர்காலம் குறித்து தொடர்ந்து ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. அதனால் திமுகவில் இருந்து விலகும் முடிவை எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் தேனி அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனுடன், ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி. ரவீந்திரநாத் குமாரும் இந்த விவகாரத்தில் முக்கிய பங்கு வகிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தவெக
ரவீந்திரநாத் சில தவெக நிர்வாகிகளுடன் தொடர்பில் இருந்து வருவதாகவும், அவரும் கட்சி மாறுவது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும், தனது அரசியல் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஓ.பி.எஸ். விரைவில் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணையலாம் என்ற தகவலும் பரவி வருகிறது. ஏற்கனவே அதிமுகவைச் சேர்ந்த பல முன்னாள் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி விலகியுள்ளதால் பல தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறும் சூழல் உருவாகியுள்ளது.
தென் மாவட்ட அரசியல்
இன்னும் சில உறுப்பினர்களும் ராஜினாமா செய்யலாம் என்ற தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. அந்த பட்டியலில் தற்போது ஓ.பி.எஸ். பெயரும் இடம்பெற்றிருப்பது தேனி மாவட்ட அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஒருவேளை ஓ.பி.எஸ். தவெகவில் இணைந்தால், அது தென் மாவட்ட அரசியலில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று அவரது ஆதரவாளர்கள் கருதுகின்றனர்.
தமிழக வெற்றிக் கழகம்
அதேநேரத்தில், ஓ.பன்னீர்செல்வம் இதுவரை இந்த தகவல்கள் குறித்து எந்த விளக்கமும் அளிக்கவில்லை. தவெக தரப்பிலும் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை. எனவே தற்போது வெளியாகி வரும் தகவல்கள் அனைத்தும் தேனி வட்டாரங்களில் பரவி வரும் தகவல்களாகவே பார்க்கப்படுகின்றன. ஓ.பி.எஸ். உண்மையிலேயே எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணையப் போகிறாரா அல்லது இந்த தகவல்கள் வெறும் அரசியல் யூகங்களா என்பது குறித்து இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும் என்கின்றனர் தேனி வாசிகள்.














Click it and Unblock the Notifications