வன்னியருக்கு துரோகம் செய்ய மாட்டேன்..பாமக பிரச்சினைக்கு திமுக தான் வில்லன்! உடைத்துப் பேசிய அன்புமணி
காஞ்சிபுரம்: என்னுடைய கட்சிக்கும், என்னுடைய வன்னியர் சமுதாயத்துக்கும் துரோகம் செய்ய மாட்டேன் எனவும், ஒருவேளை நான் துரோகம் செய்தால் அது தான் என்னுடைய வாழ்நாளில் கடைசி நாளாக இருக்கும் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். வன்னியர் சமுதாய மக்கள் திமுகவுக்கு ஓட்டு போட மாட்டார்கள் என பயம் வந்துவிட்டது, அந்த பயம் வந்ததால்தான் நம்முடைய கட்சியை பலவீனப்படுத்த திமுக சூழ்ச்சி மேற்கொண்டு வருகிறது எனவும் குற்றச்சாட்டையும் முன் வைத்துள்ளார்
காஞ்சிபுரம் தனியார் திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில், காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட செயலாளர் மகேஷ் குமார் தலைமை தாங்கினார்.
பாமகவின் முன்னாள் மாநிலத் துணைத் தலைவர் சக்தி கமலாம்பாள் கலந்து கொண்டார். இந்த பொதுக்குழு கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சிறப்புரையாற்றினார்.

பாமக பொதுக்குழு மேடையில் பேசிய அன்புமணி ராமதாஸ்," திமுக ஆட்சி ஒரு கொடுங்கோல் ஆட்சி, அந்த ஆட்சி முழுமையாக அகற்றப்பட வேண்டும். திமுக அரசின் நாட்கள் எண்ணப்பட்டு வருகிறது என தெரிவித்தார். முதலமைச்சருக்கு என்ன நடக்கிறது என தெரியவில்லை. அதையெல்லாம் மூடி மறைப்பதற்காக,திமுகவில் நடைபெறும் குற்றங்களை திசை திருப்புவதற்காக, நம்மைப் போன்ற கட்சிகளில் குழப்பம் செய்து, நம்மைப் போன்ற கட்சிகளை பலவீனப்படுத்துவதற்காக, முயற்சி செய்து வருகிறது.
அந்த முயற்சி நிச்சயமாக பலன் அளிக்காது. நான் அமைதியாக இருப்பது பலவீனம் அல்ல அதுதான் என்னுடைய பலம். வன்னியர் சமுதாயத்திற்கு துரோகம் செய்தது திமுக. ஒரு வன்னியர் கூட வாக்களிக்கக் கூடாது என மகாபலிபுரம் வன்னியர் சங்க மாநாட்டில் பேசினேன். இந்த சமுதாயத்திற்கு திமுக செய்த மிகப்பெரிய துரோகம். நான்காண்டு காலம் ரொம்ப வைத்து கழுத்து அறுத்தது திமுக. இந்த சமுதாயத்தையும், இந்த கட்சியையும், அய்யாவையும் நம்ப வைத்து திமுக கழுத்து அறுத்து விட்டது.
இட ஒதுக்கீடு தடுக்கிறேன் இந்த சமுதாயத்திற்கு இட ஒதுக்கீடு தருகிறேன் என நம்ப வைத்து கழுத்து அறுத்து விட்டது. வன்னியர் சமுதாயத்தின் மக்களுக்கு ஓட்டு போட மாட்டார்கள் என பயம் வந்துவிட்டது. அந்த பயம் வந்ததால்தான் நம்முடைய கட்சி பலவீனப்படுத்த சூழ்ச்சி மேற்கொண்டு வருகிறார்கள்
நடக்கின்ற பிரச்சனைக்கு யார் வில்லன் என்றால் திமுக தான் வில்லன். இந்த பிரச்சனைக்கு நானும் அய்யாவோ காரணம் கிடையாது என அன்புமணி தெரிவித்தார். ஒரு சிலர் நம் கட்சியிலேயே அந்த சூழ்ச்சிக்கு துணை போகிறார்கள். யார் யார் என்பது விரைவில் தெரியவரும். திமுகவின் சூழ்ச்சி வெற்றி பெறாது அதை உடைத்து எறிவோம். என்னுடைய கட்சிக்கும் என்னுடைய சமுதாயத்தில், நான் துரோகம் செய்தால் அது தான் என்னுடைய வாழ்நாளில், கடைசி நாளாக இருக்கும்.
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை ஒரு பெண் சாலையில், நடந்து செல்ல முடியுமா பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஆட்சி நடைபெற்று வருகிறது. புதிய பசுமை விமான நிலையம் பரந்தூரில் தான் அமைக்க வேண்டும் என பிடிவாதமாக உள்ளது" என தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications