ஊருக்கு யார் தலைவர்... மல்லுக்கட்டும் மாமியார்-மருமகள்... பஞ்சாயத்து தேர்தல் சுவாரஸ்யம்..!
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு மாமியாரும் மருமகளும் நேரடியாக ஒருவரை ஒருவர் எதிர்த்து போட்டியிடுகிறார்கள்.
இதனால் யாருக்கு வாக்களிப்பது எனப் புரியாமல் உள்ளூரில் உள்ள அவர்களின் உறவினர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.
ஒன்று நீ, இல்லையென்றால் நான், நம்மை தவிர்த்து ஊருக்குள் புதிய சக்தியாக யாரும் உருவெடுத்துவிடக்கூடாது என்பதில் அவர்கள் தீர்க்கமாக உள்ளது போல் தெரிகிறது.

காஞ்சிபுரம் மாவட்டம்
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்திற்குட்பட்ட ஊத்துக்காடு கிராமத்தில், பொதுப்பிரிவினருக்கு தலைவர் பதவி ஒதுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஒரே குடும்பத்தை சேர்ந்த மாமியாரும் மருமகளும் இந்த பதவிக்கு போட்டியிட விருப்பம் தெரிவித்து வேட்பு மனு தாக்கல் செய்திருக்கிறார்கள். மருமகள் சாவித்ரி மணிகண்டனும், மாமியார் ஜெயலட்சுமி லோகநாதனும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதால் யாருக்கு வாக்களிப்பது என்ற விவாதம் ஊத்துக்காடு கிராமத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது.

தலைவர் யார்?
தலைவர் பதவிக்கு இவர்கள் இருவரை தவிர மற்றவர்கள் நிற்கவில்லை. இதனால் இந்த இருவரில் தான் ஒருவரை தலைவராக தேர்வு செய்ய வேண்டும். தேர்தலில் மாமியார் கை ஓங்குகிறதா இல்லை மருமகள் கை ஓங்குகிறதா என பார்க்க கிராமமக்கள் ஆவலுடன் முடிவுக்காக காத்திருக்கின்றனர். இதனிடையே தேர்தலில் எதிரும் புதிருமாக போட்டியிட்டாலும் அவர்கள் ஒரே வீட்டில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.

பிரச்சாரம்
ஊத்துக்காடு ஊராட்சி மன்றத் தலைவராக நம் இருவரில் ஒருவர் தான் வர வேண்டும் என்பதிலும் புதிதாக போட்டிக்கு யாரும் வந்துவிடக் கூடாது என்பதில் மாமியாரும் மருமகளும் கவனமாக இருக்கிறார்கள் போல் தெரிகிறது. இதனிடையே போடுங்கம்மா ஓட்டு என தனித்தனியாக தங்களுக்கு வாக்குக்கேட்டு தெருக்களில் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டனர் அந்த இருவரும்.

சவாலானது
சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களை காட்டிலும் உள்ளாட்சித் தேர்தல் தான் தேர்தல் ஆணையத்துக்கு மிகுந்த சவாலானது. நேற்று வரை மாமன் மச்சானாக பழகிய பலர் தேர்தல் குஸ்தியில் குதித்து ஒருவருக்கு ஒருவர் பேச்சுவார்த்தையின்றி காலத்தை கழித்ததை எல்லாம் பலரும் கண்டிருக்க முடியும். இது மட்டுமல்லாமல் தேர்தல் முன் பகை காரணமாக பல அசம்பாவிதங்களும் நடைபெறும். இதனால் தான் எப்போதுமே உள்ளாட்சித் தேர்தலை கண்கொத்தி பாம்பாக காவல்துறை கண்காணிக்கும்.












Click it and Unblock the Notifications