"சீமான் பேச்சுக்கு இளைஞர்கள் அடிமையாக கூடாது.. அவரால் தலைவராகவே முடியாது.." திமுக அமைச்சர் அட்டாக்
காஞ்சிபுரம்: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய திமுக அமைச்சர் தா. மோ. அன்பரசன் நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை விமர்சித்துப் பேசினார்.
மறைந்த முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதியின் நூற்றாண்டு இப்போது கொண்டாடப்படுகிறது. கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
கருணாநிதியின் 100ஆவது பிறந்த நாளை ஓராண்டு முழுக்க கொண்டாட திமுகவினர் திட்டமிட்டுள்ளனர். அதன்படி மாநிலம் முழுக்க கருணாநிதியின் சாதனைகளைப் போற்றும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது.

கருணாநிதி நூற்றாண்டு விழா: அதன்படி காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பேரூர் திமுக கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. பேரூராட்சி தலைவர் யுவராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக் கூட்டத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டார். அங்கே பள்ளி மாணவர்கள், பெண்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் தா மோ அன்பரசன் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின்னர் பேசிய தா மோ அன்பரசன், "பெரியார், அண்ணா உள்ளிட்ட மாபெரும் தலைவர்களை எல்லாம் கொச்சைப்படுத்தும் வகையில் சீமான் ஆவேசமாகப் பேசி வருகிறார். இதை ஏற்க முடியாது. வன்மையாக கண்டிக்கத்தக்கது. வெறுமன பொதுக்கூட்டங்களில் ஒருவர் ஆவேசமாகப் பேசுவதால் மட்டுமே மக்களிடம் செல்வாக்கு பெற்று தலைவராக மாறிவிட முடியாது.
கடும் தாக்கு: இந்த ஆவேச நாடக பேச்சுகளையும் மூளச்சலவை செய்யும் வகையிலான வீடியோக்களையும் தான் இப்போது இளைஞர்கள் அதிகம் தங்கள் மொபைலை வைத்துப் பார்த்து வருகிறார்கள். இது ரொம்பவே ஆபத்தான போக்கு. இதற்கு இளைஞர்கள் எப்போதும் அடிமையாகக் கூடாது. அது மோசமான பாதிப்பை ஏற்படுத்தும். கருணாநிதியின் பேச்சைக் கேளுங்கள். அவரது வரலாற்றைப் படியுங்கள்.
அப்போது தான் அவர் தமிழர்களும் இளைஞர்களுக்கும் என்ன செய்தார் என்பது தெரிய வரும். கருணாநிதி இளைஞர்களுக்கு அந்தளவுக்கு பல்வேறு நலத்திட்டங்களைச் செய்துள்ளார். அதைப் படித்தாலே உங்களுக்குப் புரியும்" என்று அவர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவரும், தலைமை கழக பேச்சாளருமான திண்டுக்கல் ஐ.லியோனி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர்.
நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ச்சியாகவே திமுகவை விமர்சித்து வருகிறார். குறிப்பாக முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு மெரினாவில் கடலில் நினைவுச் சின்னம் அமைக்கச் சீமான் மிகக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது ஆவேசமாக அவர் கூறிய கருத்துகள் இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.












Click it and Unblock the Notifications