40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் வைபவம் துவங்கியது.. விழாக்கோலம் பூண்ட காஞ்சி
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும், அத்திவரதர் திருவிழா கோலாகலமாக துவங்கியுள்ளது. ஆயிரக்கணக்கான உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் திரண்டு வரிசையில் நின்று அத்திவரதரை தரிசித்து வருகின்றனர்.
இன்று துவங்கியுள்ள அத்திவரதர் திருவிழா வரும் ஆகஸ்ட் மாதம் 17-ம் தேதி வரை, தொடர்ந்து 48 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. இதற்காக விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் திருவிழா என்பதால் காஞ்சிபுரம் நகரம் முழுவதுமே விழா கோலம் பூண்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் அனந்தசரஸ் குளத்திலிருந்து அத்திவரதர் எழுந்தருளினார். வசந்த மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த அத்தி வரதர் சிலைக்கு, ஜல சம்ப்ரோக்ஷணம், புண்ணியாவதனம் ஹோமம் ஆகியவை நேற்று நடத்தப்பட்டது.
தொடர்ந்து அத்திவரதருக்கு தைல காப்பு அணிவிக்கப்பட்டது. பின்னர் ஆகம விதிப்படி பூஜைகள் நடத்தப்பட்டு, வசந்த மண்டபத்தில் இன்று காலை 5 மணிக்கு முதல் அத்திவரதர் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

48 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவின் முதல் 24 நாட்களின் போது அத்திவரதர் சயன கோலத்தில் காட்சியளிக்க உள்ளார். அடுத்த வரும் நாட்களில் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.
40 ஆண்டுகளுக்கு பின் குளத்தில் இருந்து வெளியே கொண்டு வரப்பட்ட அத்தி மரத்தினாலான அத்திவரதரை தரிசிக்க, சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அத்திவரதரை வரும் ஆகஸ்ட் 17-ம் தேதி வரை, அதிகாலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை தரிசிக்க, பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் தாலுகாவை சேர்ந்த பொதுமக்களுக்கு மட்டும், காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை தரிசிக்க சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை டைபெறும் வைபவம் என்பதால், பல்வேறு வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து பக்தர்கள் லட்ச்கணக்கில் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனையடுத்து பக்தர்களின் வசதிக்காக காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலை சுற்றிலும், தற்காலிக கழிவறைகள் மற்றும் குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் அத்திவரதரை காண வரும் பக்தர்களுக்கு சிறப்பு பேருந்துகள், மினி பஸ், வீல் சேர், பேட்டரி கார் உள்ளிட்ட சிறப்பு போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதனிடையே காஞ்சிபுரம் அத்திவரதர் திருவிழாவை முன்னிட்டு, போக்குவரத்து ஊழியர்களுக்கு அடுத்து வரும் 48 நாட்களுக்கு விடுப்பு இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மண்டலத்தை சேர்ந்த அரசுப்பேருந்து டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களுக்கு விடுப்பு கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
விழா நடைபெறும் 48 நாட்களும் பக்தர்கள் அத்திவரதரை சந்திக்க ஏதுவாக போக்குவரத்து துறை இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது












Click it and Unblock the Notifications