நீங்க தர்ற பணத்துல தான் சம்பளமே கொடுக்குறோம்.. ‘லஞ்சம்’ கேட்டு அரசு அதிகாரி பேசிய ஆடியோவால் ‘பகீர்’!
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாநகராட்சியில் பட்டா பெயர் மாற்றம் செய்ய நில அளவை பிரிவு ஊழியர்கள் அப்பட்டமாக லஞ்சம் கேட்கும் ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தன்னிடம் லஞ்சம் கேட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என பாதிக்கப்பட்டவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகத்தின் உள்ளே செயல்படும் நில அளவை பிரவில் போதிய அலுவலர்கள் இல்லாததால் ஆள் வைத்து வேலை பார்ப்பதாகவும், அவர்களுக்கு சம்பளம் வழங்கவே தாங்கள் லஞ்சம் கேட்பதாகவும் அலுவலர்கள் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இளம் பெண் வயிற்றுக்குள் பஞ்சு! இப்படியும் செய்வாங்களா? அலட்சிய மருத்துவரால் கலகலத்த காஞ்சிபுரம்!
காஞ்சிபுரம் மாநகராட்சி
காஞ்சிபுரம் மாநகராட்சி 51 வார்டுகளை உள்ளடக்கி செயல்பட்டு வருகிறது. மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வாங்கப்படும் சொத்துகளுக்கு பெயர் மாற்றம் மற்றும் நில அளவை செய்ய காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகத்திலுள்ள நில அளவை பிரிவில் விண்ணப்பித்து அதை நில அளவையர் சரி பார்த்து அதன் பின்னரே பெயர் மாற்றம் செய்யப்படும்.
நிலம் வாங்கிய சகோதரர்கள்
இந்நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட ராயன்குட்டை மேட்டுத்தெரு பகுதியைச் சேர்ந்த தினேஷ் மற்றும் டில்லிபாபு சகோதரர்கள், தமால்வார் தெரு பகுதியில் வேல்முருகன் என்பவரிடம் சிறிய வீட்டு மனை ஒன்றை வாங்கி அதனை முறையாக காஞ்சிபுரம் சார்பதிவாளர் அலுவலகம் -1 ல் பத்திரப்பதிவும் செய்துள்ளனர்.
பட்டா பெயர் மாற்றம்
இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள நில அளவை பிரிவில் புதியதாக தாங்கள் வாங்கிய இடத்திற்கு பட்டா பெயர் மாற்றம் செய்ய தினேஷ் விண்ணப்பித்துள்ளார். இதனைத்தொடர்ந்து நில அளவை பிரிவு அலுவலர் சம்பந்தப்பட்ட இடத்தை அளந்து அதனை தவறுதலாக பதிவு செய்துள்ளார். இதை சரி செய்து தருமாறு தினேஷ் கேட்டபோது அவரிடம் ரூபாய் ஐந்தாயிரம் பணத்தை லஞ்சமாக கேட்டுள்ளனர்.
லஞ்சம் கேட்ட அதிகாரிகள்
அதனைத் தொடர்ந்து இதுகுறித்து மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள நில அளவை பிரிவிற்கு சென்று தினேஷ் முறையிட்டபோது நில அளவை பிரிவில் போதிய அலுவலர்கள் இல்லாததால், தனிப்பட்ட முறையில் உதவியாளர்களை வைத்து இப்பணிகள் மேற்கொள்ளப்படுவதாகவும், அவர்களுக்கு உங்களைப் போன்றவர்கள் அளிக்கும் லஞ்சப் பணத்தில் தான் சம்பளம் வழங்குவதாகவும் தெரிவித்துள்ளனர்.
போனில் பேசிய பெண் அதிகாரி
இதனைத் தொடர்ந்து அலுவலர்கள் தினேஷை போனில் தொடர்பு கொண்டு பேசிய போது, திருத்தங்களுடன் பட்டா பெயர் மாற்றம் செய்யப்பட்டு நிறைவு பெற்றதாகவும், ரூபாய் 5,000 கொடுத்துவிட்டு பெற்றுக் கொள்ளுமாறும் ஒரு பெண் அதிகாரி கூறியதைத் தொடர்ந்து தற்போது தன்னிடம் பணம் இல்லை எனவும் ஓரிரு வாரம் கழித்து மாநகராட்சி அலுவலகம் வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
பரவும் ஆடியோ
இந்த ஆடியோவை பதிவு செய்த தினேஷ், இது தொடர்பாக உரிய நடவடிக்கையை மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். தற்போது காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள நில அளவை பிரிவு ஊழியர்கள் அப்பட்டமாக லஞ்சம் கேட்கும் விடியோ மற்றும் ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி தீயாகப் பரவி பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.