அத்திவரதரைக் காண அலை மோதும் பக்தர்கள்.. அதிர வைக்கும் சொதப்பல் ஏற்பாடுகள்.. லைவ் ரிப்போர்ட்!
Recommended Video
காஞ்சிபுரம்: இன்று இந்தியா எங்கும் ஒலிக்கும் குரல் அத்திவரதர்.. அத்திவரதர்தான். ஆம் காஞ்சியில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே காட்சியளிக்கும் அற்புத நிகழ்வை பார்க்க அன்றாடம் லட்சக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். ஆனால் இங்கு மாவட்ட நிர்வாகம் செய்துள்ள செயல் பக்தர்களை மனஉளைச்சலுக்கு ஆளாகும் செயலாக உள்ளது.
குளத்தில் இருந்து எடுக்கப்பட்ட அத்திவரதர் சில ஆகம பூஜைகளுக்கு பிறகு கடந்த 1-ஆம் தேதி முதல் பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார். கடந்த 19 நாட்களில் 20 லட்சத்துக்கு மேற்பட்டோர் தரிசனம் செய்தனர். அவ்வாறு வரும் பக்தர்கள் மனநிம்மதியுடன் சுவாமி தரிசனம் செய்கிறார்களா என்றால் இல்லை என்பதே பதிலாக உள்ளது.
இங்கு வரும் சாதாரண பக்தர்கள் கிழக்கு கோபுரம் வழியாக உள்ளே வருகின்றனர். கிழக்கு கோபுர வாயிலை அடைய பக்தர்கள் ஆட்டு மந்தை போல் சாலையில் கூட்டமாக நிற்க வைக்கப்படுகின்றனர். பின்னர் போலீஸார் ஒவ்வொரு இடத்திலும் கயிறு கட்டி வைத்து பேட்ச் பேட்சாக பக்தர்களை அனுப்புகின்றனர்.
கிழக்கு கோபுர வாசல்
அப்போது ஏராளமான தள்ளுமுள்ளு ஏற்படுகிறது. இந்த சிரமங்களை கடந்த பிறகு பக்தர்கள் இரு வரிசையாக செல்லும் வரிசைக்கு அதாவது கோயில் சுற்றுச்சுவர் அருகே அனுப்பப்படுகின்றனர். இந்த சுற்றுச்சுவரை கடந்து கிழக்கு கோபுர வாசலை அடையவே பக்தர்கள் கிட்டதட்ட 2 முதல் 3 கி.மீ. தூரம் வரை செல்ல வேண்டியுள்ளது.
கேள்விக்குறிதான்
இந்த வரிசையில் நிற்கும் போது கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்படுகின்றன. மாவட்ட நிர்வாகம் சார்பில் நல்லத் தண்ணீர் வழங்கப்படுகிறது. ஆனால் இந்த பிரசாதங்கள் அனைவருக்கும் கிடைக்கிறதா என்பது கேள்விக்குறிதான்.
10 வரிசைகள்
சரி கோயில் கிழக்கு கோபுரத்தை அடைந்துவிட்டதாகிவிட்டது. இனியாவது அத்திவரதரை தரிசிப்போம் என பக்தர்கள் சந்தோஷத்துடன் உள்ளே சென்றால், அங்கு இரும்புகளாலும் கட்டைகளாலும் சுமார் 10 வரிசைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
போலீஸார்
இந்த 10 வரிசைகளில் ஒவ்வொரு வரிசையிலும் 3 அல்லது 4 வரிசையில் பொதுமக்கள் நிற்கும் அளவுக்கு இடைவெளி இருக்கிறது. இதிலும் முந்திக் கொண்டு முந்திக் கொண்டு செல்வதால் வரிசையின் திருப்பங்களில் தள்ளுமுள்ளு ஏற்படுகிறது. இங்கு கூட்டத்தை கட்டுப்படுத்த போலீஸார் இருப்பதே இல்லை.
அத்திவரதர் தரிசனம்
அப்படியே போய் சொன்னாலும் காதில் போட்டு கொள்வதில்லை என்பதே பக்தர்களின் குமுறலாக உள்ளது. இந்த திருப்பங்களில் ஏற்படும் கூட்டநெரிசல்களிலும் மக்கள் சிக்கி அசம்பாவிதங்கள் ஏற்பட வழியுள்ளது. 15 வரிசைகளையும் அடைந்தாலும் அத்திவரதர் தரிசனம் உடனே உண்டா என்றால் அதுவும் இல்லை.
வசந்த மண்டபம்
10-15 வரிசைகளையும் கடந்து இன்னொரு வரிசை உள்ளது. அந்த வரிசையில் சென்றுவிட்டு கோயிலின் இரு பக்கபாட்டு சுவர்களை சுற்ற வேண்டும் (கோயில் 25 ஏக்கர் பரப்பளவாம், அப்போ சுற்றுச்சுவர் எவ்வளவு நீளம் என்பதை பார்த்துக் கொள்ளுங்கள்.) அதை சுற்றிய பிறகு ஒரு ரேம்ப் போல் செல்கிறது. அங்கு சென்றால் வசந்த மண்டபத்தை அடைய வேண்டும்.
கிழக்கு வாசல்
இதன் பின்னர்தான் அத்திவரதரை தரிசனம் செய்யலாம். இதற்கு குறைந்த பட்சம் 5 முதல் 10 மணி நேரம் ஆகின்றன. நேற்றைய நிலவரப்படி அதிகாலை 4 மணிக்கு வரிசையில் நின்றவர்கள் சுமார் பிற்பகல் 3 மணிக்கு சுவாமி தரிசனம் செய்துள்ளனர். கிழக்கு வாசல் கோபுரத்தில் இருந்து பக்தர்களுக்கு எந்த உணவும் கிடைக்காது.
மனஅழுத்தம்
இங்கிருந்து சுவாமியை பார்க்கவே சுமார் 4 மணி நேரம் ஆகிறது. இந்த வரிசையாவது நகர்ந்து கொண்டே இருக்கிறதா என்றால் இல்லை. ஒரு ஜான் அளவுக்கே நகர்கிறது, பின்னர் தேங்குகிறது. இதனால் வயதானவர்கள், குழந்தைகள், நீரிழிவு நோய், ரத்த கொதிப்பு உள்ளவர்கள் உணவின்றி இத்தனை வரிசைகளில் செல்வதால் மனஅழுத்தம் ஏற்படுவதுடன் மயங்கி விழும் நிலை ஏற்படுகிறது.
நிம்மதியான தூக்கம்
பக்தர்களை இத்தனை வரிசைகளில் சுற்றவிடாமல் நேராக சுவாமி தரிசனம் செய்ய வழிவகுத்தாலே இத்தனை கூட்டம் கோயிலில் இருக்காது என்று பக்தர்கள் கூறுகின்றனர். திருப்பதியிலும் அன்றாடம் லட்சக்கணக்கானோர் வருகை தருகின்றனர். ஆனாலும் இத்தகைய சிரமம் அடைவதில்லை. கூண்டில் அடைக்கப்படும் பக்தர்களுக்கு வேளா வேளைக்கு உணவு, நிம்மதியான தூக்கம், காற்று வசதி ஆகியன கிடைக்கிறது.
உயரும்
ஒரு 48 நாளைக்கு பொதுமக்கள் தரிசனம் செய்வதில் இத்தனை குறைபாடுகள் இருந்தால் வயதானவர்கள் எப்படி தரிசனம் செய்வர் என்பதே கேள்வி. இந்த கூட்டநெரிசலில் சிக்கி ஏற்கெனவே 5 பேர் பலியாகிவிட்டனர். நேரடியாக சுவாமியை தரிசனம் செய்ய விடாமல் சுற்றவைத்தால் இன்னும் உள்ள 28 நாட்களில் பலிகள் உயரும் என்பது பொதுமக்களின் கவலையாக உள்ளது.
சந்தேகம் வேண்டாம்
கிழக்கு கோபுரத்தில் உள்ள சுற்று வரிசைகளை நீக்கிவிட்டு சுவாமி தரிசனம் செய்ய வைக்க வேண்டும் என்பதே பக்தர்களின் குமுறலாக உள்ளது. திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஏழு கடல், ஏழு மலை உள்ளிட்டவற்றை கடந்தே தரிசனம் செய்கிறோம் என்பது ஐதீகம். ஏழுமலையானை கூட மக்கள் எளிதில் தரிசனம் செய்து விடலாம் போல அத்திவரதரை தரிசிக்க இத்தனை குளறுபடிகள் உள்ளன. இதை மாவட்ட நிர்வாகம் சரி செய்யாவிட்டால் உயிர் பலிகள் இன்னும் உயரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.