காஞ்சிபுரத்தில் பட்ட பகலில் பயங்கரம்.. பெண் காவலருக்கு அரிவாள் வெட்டு.. கணவருக்கு போலீஸ் வலை வீச்சு
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காவல் நிலையத்தில் முதல் நிலை பெண் காவலராக பணியாற்றி வரும் டில்லி ராணியை பட்ட பகலில் அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோடிய நபரை போலீசார் தேடி வருகிறார்கள். குடும்ப பிரச்சினையில் கணவரே அரிவாளால் வெட்டியிருக்கலாமோ என விசாரணை நடைபெற்று வருகிறது.
காஞ்சிபுரத்தில் உள்ள விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்தில் பெண் காவலராக பணி புரிந்து வருபவர் டில்லி ராணி. இவர் பணி முடிந்த பிறகு காவல் நிலையத்தில் இருந்து தனது வீட்டிற்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். காஞ்சிபுரத்தில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பெரிய காஞ்சிபுரத்தில் உள்ள வீட்டிற்கு சென்ற கொண்டிருந்த போது மர்ம நபர் அவரை வழிமறித்து அரிவாளால் வெட்டியுள்ளார்.

இதில் டில்லி ராணியின் வலது கை பகுதியில் இரண்டு இடங்களில் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. அரிவாளால் வெட்டி விட்டு மர்ம நபர் கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி ஓடியதாக சொல்லப்படுகிறது. அரிவாளால் வெட்டப்பட்டதில் படுகாயம் அடைந்த காவலர் டில்லி ராணியை அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
மருத்துவமனையில் பெண் காவலருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சீருடையில் இருந்த பெண் காவலரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடியது யார் என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய போலீசார் விசாரணயை தீவிரப்படுத்தினர்.
இதனிடையே பெண் காவலர் டில்லி ராணியை அவரது கணவரே அரிவாளால் வெட்டியதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. பருத்திகுளம் பகுதியை சேர்ந்த மேகநாதன் என்பவருக்கும் டில்லி ராணிக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த 6 மாத காலமாக இருவரும் பிரிந்து வாழ்கிறார்களாம்.

இந்த நிலையில், தான் இன்று மதியம் மேகநாதன் வழிமறித்து டில்லி ராணியிடம் தகராறு செய்துள்ளார். அப்போது திடீரென்று தான் மறைத்து வைத்து இருந்த அரிவாளால் டில்லி ராணியை கை மற்றும் கால்களில் வெட்டியிருக்கிறார். இதில் படுகாயம் அடைந்த டில்லி ராணி அங்கேகேயே சரிந்து விழுந்துள்ளார். இதையடுத்து மேகநாதன் அங்கிருந்து தப்பி ஓடியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே மேகநாதனை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப பிரச்சினையில் மனைவியை நீங்கள் தான் வெட்டினீர்களா என்பது குறித்து போலீசார் மேகநாதனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications