குருவிமலை பட்டாசு விபத்து..வீடுகள், கட்டிடங்களில் விரிசல்..2 அரசு பள்ளிகளுக்கு விடுமுறை
காஞ்சிபுரம் அருகே குருவிமலையில் பட்டாசு ஆலை வெடி விபத்து நிகழ்ந்த பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம்: குருவிமலை அருகே பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர், பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். வெடி விபத்து நிகழ்ந்த பகுதியில் வீடுகள் விரிசல் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். விபத்து நிகழ்ந்த பட்டாசு ஆலையின் அருகே இருந்த அரசு பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் குருவிமலை அருகே வளத்தோட்டம் என்ற பகுதியில் கடந்த இருபது ஆண்டுகளாக நரேன் பயர் ஒர்க்ஸ் என்ற பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இந்த பட்டாசு ஆலைக்கு சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் புதன்கிழமை காலை வழக்கம்போல் பணிக்குச் சென்றுள்ளனர்.
அப்போது பட்டாசு ஆலையில் திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஆலையில் பணிபுரிந்து கொண்டிருந்த 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். சம்பவ இடத்திலேயே சிலர் உடல் கருகி உயிரிழந்தனர்.

9 பேர் உயிரிழப்பு
இதையடுத்து காயமடைந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் வாகனம் மற்றும் ஷேர் ஆட்டோக்கள் மூலம் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து நிகழ்ந்தபோதே 5 பேர் உடல்சிதறி உயிரிழந்துள்ளனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் 4 பேர் என மொத்தம் 9 பேர் மரணமடைந்தனர்.
குருவிமலையைச் சேர்ந்த கணவன் மனைவியும் உடல் சிதறி பலியாகியுள்ளனர்.

விபத்து நிகழ்ந்தது எப்படி
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, காவல் கண்காணிப்பாளர் சுதாகர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விபத்துக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டார். அமைச்சர் தா.மோ. அன்பரசனும் மருத்துவமனைக்கு சென்று விபத்தில் காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறினார். விபத்தில் உயிரிழந்தவர்கள், காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் சார்பில் நிவாரண உதவித்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

வீடுகளில் விரிசல்
ஆலையில் நடந்த வெடி விபத்தின் சத்தம் சுமார் 5 கி.மீட்டர் அளவுக்கு உணரப்பட்டிருக்கிறது. அக்கம் பக்கத்தில் இருந்த வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. பூகம்பம் வந்தது போல வெடிச்சத்தம் கேட்டதாகவும் பல வீடுகளில் விரிசல் ஏற்பட்டதாகவும் குருவிமலை சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.

பள்ளிகளுக்கு அரசு விடுமுறை
குருவிமலை சுற்றுவட்டார பகுதியில் பல பகுதிகளில் கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் அந்த பகுதியில் உள்ள 2 ஊராட்சி நடுநிலை பள்ளிகளுக்கு இன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் 9 பேர் உயிரிழந்த நிலையில் பலர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications