அற்புதமான தென்னேரி கிராமம்.. அமைச்சர் தங்கம் தென்னரசு போட்ட நெகிழ்ச்சி பதிவு
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அருகே தென்னேரி குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு தனது பேஸ்புக் பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவு வெளியிட்டுள்ளார்.
9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு இன்னமும் சில நாட்களே உள்ள நிலையில் அதிமுக, திமுக, பாஜக, பாமக, நாம்தமிழர் கட்சி, மநீம என அனைத்து கட்சிகளும் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றன. ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி என்பது ஒரு கட்சியின் அடிமட்ட நிர்வாகிகள் வளர்ச்சிக்கும், கட்சியின் அடிப்படை கட்டமைப்பு வளர்ச்சிக்கு மிக முக்கியம் என்பதால் அதில் அதிக அக்கறை காட்டுகின்றன.
ஆளும் கட்சியான திமுக மிக தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறது. அமைச்சர் தங்கம் தென்னரசு காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அருகே தென்னேரிக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் சுற்றுப்பயணத்திற்காக சென்று இருக்கிறார் அந்த கிராமத்தின் அழகை பார்த்து வியந்து போன அவர் அங்கு புகைப்படம் எடுத்து அந்த கிராமத்தின் பொக்கிஷங்களின் வரலாற்றை எழுதி உள்ளார். அவர் எழுதிய வார்த்தைகள் அப்படியே உங்கள் பார்வைக்கு...

பரந்த ஏரி
அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள பேஸ்புக் பதிவில் கூறியுள்ளதாவது: "காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அருகே கடல் போல் பரந்த ஏரியின் அருகேவுள்ள அழகிய சிற்றூர் தென்னேரி. தொண்டைமான் இளந்திரையன் நினைவாக திரையனேரி எனப் பெயரிடப்பட்டு பின்னர் தென்னேரி ஆக ஊரின் பெயர் மருவி இருக்கக்கூடும் எனக் கருதப்படுகின்றது.

உள்ளாட்சி தேர்தல்
நேற்று உள்ளாட்சி மன்றத் தேர்தல் பரப்புரைக்குச் சென்ற போது ஊரின் புறத்தே அமையப் பெற்றுள்ள சோழர் காலக் கற்றளியைக் காணும் நல்வாய்ப்புக் கிட்டியது.

செம்பியன் மாதேவியார்
செங்கல் மற்றும் சுதையினால் கட்டப்பட்ட விமானத்தை உடைய எளிய திருத்தளி தான். ஆனால், முத்துப் போல பேரழகு. இராஜராஜனின் காலத்தில் செம்பியன் மாதேவியாரால் அவரது மகன் உத்தமச் சோழன் நினைவாக எடுக்கப்பட்ட கோவில் என்பதைக் கல்வெட்டுகள் வாயிலாக அறியமுடிகிறது.

உத்தம சோழன்
ஸ்வஸ்திஶ்ரீ சாலை கலமறுத்தருளிய கோவிராஜ கேஸரிபன்மரான உடையார் ஶ்ரீராஜ ராஜ தேவற்கு எனத்துவங்கும் கல்வெட்டில், சோழ குல விளக்காகப் பராந்தகன் துவங்கி ராஜராஜன் காலம் வரை சோழப் பெருவேந்தர்கள் காலத்தில் வாழும் பெருமை பெற்ற அவ்வமையார், " கண்டராதித்த தேவர் பிராட்டியார் உத்தம சோழனை திருவயிற்றில் வைத்தருளிய பிராந்தகன் மாதேவியார் செம்பியன் மாதேவியாரான உடைய பிராட்டியார்" என்றே பெருமதிப்புடன் அழைக்கப் பெறுகின்றார். தேவகோட்டங்களில் அமையப்பெற்றுள்ள சிற்பங்களும், துவார பாலகர்களும் செம்பியன் கலைப்பாணிக்குச் சான்று.

தென்னேரிக் கல்வெட்டு
உத்திரமேரூர் போலவே கிராம சபைக்குத் தெரிவு செய்யப்பட வேண்டியோரின் தகுதி குறித்தும் தென்னேரிக் கல்வெட்டுத் தெரிவிப்பது உள்ளாட்சித் தேர்தல் களத்தில் கூடுதல் மகிழ்ச்சியனைத் தருகின்றது.












Click it and Unblock the Notifications