சசிகலா ரிலீசாகி வந்த பின்னரும் எனது ஆட்சி நிச்சயம் இருக்கும் - ஸ்டாலினுக்கு முதல்வர் பதிலடி
ஜனவரி 27ஆம் தேதி சசிகலா சிறையில் இருந்து வந்த பின்னரும் தமிழகத்தில் எனது தலைமையிலான ஆட்சிதான் நடைபெறும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
காஞ்சிபுரம்: தமிழகத்தில் ஜனவரி 27ஆம் தேதிக்குப் பிறகும் எனது தலைமையிலான ஆட்சிதான் நிச்சயம் நடைபெறும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். சசிகலா விடுதலையாகி வந்த பின்னர் பழனிச்சாமியின் முதல்வர் பதவி பறி போய்விடும் என்று ஸ்டாலின் கூறியதற்கு பதிலளித்துள்ளார் முதல்வர் பழனிச்சாமி.
தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்களே இருக்கிறது. சித்திரை மாதத்தில் அனல் வெயிலோடு பிரச்சாரம் ஆரம்பமாகிவிடும். தை மாதத்திலேயே தற்போது தமிழக அரசியல் களம் அனலடிக்க ஆரம்பித்து விட்டது.
திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கிராமங்கள் தோறும் மக்கள் கிராம சபை கூட்டம் நடத்தி ஆளுங்கட்சிக்கு எதிராக பல குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகிறார். ஊழல் குற்றச்சாட்டுகளை கூறுவதோடு மட்டுமல்லாமல் அதிமுகவின் ஆட்சிக்காலம் சில மாதங்களில் முடிந்து விடும் என்று பேசி வருகிறார் ஸ்டாலின்.

முதல்வரானது எப்படி
முதல்வராக எடப்படி பழனிச்சாமி சசிகலாவின் காலில் விழுந்து முதல்வரானவர் என்று குற்றம் சாட்டும் ஸ்டாலின், சில நாட்களில் அவரது பதவிக்காலம் முடியப்போகிறது என்று கூறியுள்ளார். சசிகலா சிறையில் இருந்து விடுதலையான உடன் அவரது பதவி பறிபோய் விடும் என்றும் தெரிவித்துள்ளார் ஸ்டாலின்.

மக்கள் தேர்ந்தெடுத்த முதல்வர்
ஸ்டாலினின் இந்த கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இன்று காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் பேசிய முதல்வர் பழனிச்சாமி, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தான் சசிகலாவால் தேர்ந்தெடுக்கப்பட்டவன் என்று கூறி வருகிறார். நான் மக்களால் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டவன். என்னை முதல்வராக அதிமுக எம்எல்ஏக்கள் தான் தேர்வு செய்தார்கள் என்று கூறினார்.

ஆட்சி நீடிக்கும்
எனது ஆட்சி சில நாட்களில் முடிவுக்கு வரப்போவதாக ஸ்டாலின் கூறி வருகிறார். ஜனவரி 27ஆம் தேதிக்குப் பிறகும் எனது தலைமையிலான ஆட்சி நீடிக்கும் என்றும் சசிகலா விடுதலையாகி வந்தாலும் தான்தான் முதல்வராக நீடிப்பேன் என்றும் கூறி ஸ்டாலின் பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

இலவச மின்சாரம் தருகிறோம்
மக்களுக்கு நிறைவான ஆட்சியை நாங்கள் தருகிறோம். எங்களைப் பற்றி குறை சொல்வதற்கு எதிர்கட்சியினருக்கு ஒன்றும் இல்லை என்று கூறிய முதல்வர் பழனிச்சாமி, அதிமுக ஆட்சிக்காலத்தில் மு க ஸ்டாலின் உட்பட அனைவரின் வீட்டிற்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் கொடுக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications