படப்பை குணாவின் ரைட் ஹேண்ட் உள்பட இருவர் கைது.. சிறப்பு படை அதிரடி!
காஞ்சிபுரம்: பிரபல ரவுடி படப்பை குணாவின் வலதுகரமாக செயல்பட்டு வந்த தலைமறைவான போந்தூர் சேட்டு மற்றும் குணாவின் கூட்டாளியான மாம்பாக்கம் பிரபு கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து நான்கு சொகுசு வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை, கட்டப் பஞ்சாயத்து ஆகிய சம்பவங்களில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தியிருந்தார். இதனையடுத்து காஞ்சிபுரம் சரகத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மீது தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
காஞ்சிபுரம் சரகத்தில் செங்கல்பட்டில் 7 போ், திருவள்ளூரில் 18 போ், காஞ்சிபுரத்தில் 9 போ் என மொத்தம் 34 போ் முதன்மைக் குற்றவாளிகள் இருப்பது தெரிய வந்துள்ளது. இவா்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கபட்டு தொடர் கண்காணிப்பில் இருக்கிறார்கள்.

செங்கல்பட்டு
இவா்களைத் தவிர திருவள்ளூரில் 720, செங்கல்பட்டில் 582, காஞ்சிபுரத்தில் 592 போ் உட்பட மொத்தம் 1,894 போ் அடங்கிய பட்டியலையும் காவல்துறையினர் தயார் செய்திருக்கிறார்கள். காஞ்சிபுரம் சரகத்தில் தொடா் குற்றச் செயல்களில் ஈடுபடும் ரெளடிகளை கைது செய்யும் பணியில் காவல்துறையினர் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.

காஞ்சிபுரம்
மேலும் தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டமான காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம், ஒரகடம் ஆகிய பகுதிகளிலுள்ள தொழிற்பேட்டையில் இயங்கிய வரும் தொழிற்சாலைகளில் பிரபல் ரவுடி குணா மற்றும் அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து மிரட்டி பணம் பறித்து வந்ததாக கூறப்படுகிறது.

சிறப்பு தனிப்படை
இந்த நிலையில் அதனை ஒடுக்குவதற்கு ஏடிஎஸ்பி வெள்ளதுரை தலைமையில் சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை அவரது தலைமையிலான தனிப்படை போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள். காஞ்சிபுரம் மாவட்டம், மதுரமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி படப்பை குணா எனப்படும் குணசேகரன்.

அடிதடி
இவர் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் கட்டப் பஞ்சாயத்து , அடிதடி, சிறு குறு தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களை மிரட்டுவது , நிறைய ரியல் எஸ்டேட் உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறார். இவர் மீது கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல் என 46 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவற்றில் எட்டு கொலை வழக்குகளும் அடக்கமாகும். பலமுறை பல வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறை சென்றுள்ளார்.

என்கவுன்ட்டர்
பிரபல ரவுடி படப்பை குணாவை சுற்றி வளைக்கும் முயற்சியில் அவருடைய வலதுகரமாக இருந்து வந்த போந்தூர் சிவா கைது செய்யப்பட்டர். அதேபோல அவருக்கு சொந்தமான வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பு போலீசார் தன்னை என்கவுன்ட்டரில் கொல்லப்போவதாக தகவலறிந்த பிரபல ரவுடி படப்பை குணா உயிருக்கு பயந்து சென்னை சைதாப்பேட்டையில் உள்ள நீதிமன்றத்தில் சரணடைந்தார். அதன் பின் சரணடைந்த படப்பை குணா பூந்தமல்லி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.

தொடர் சிறை
மேலும் ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் 110 நன்னடத்தை விதியை மீறியதாக படப்பை குணாவை மூன்று நாள் விசாரணைக்கு போலீசார் ஆஜர்படுத்தி ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் அவரிடம் விசாரணை மேற்கொண்டார். இந்த விசாரணை முடிவு படப்பை குணாவிற்கு எதிராக இருக்கும் என்றும், ஓராண்டுக்கு மேல் தொடர் சிறையில் இருக்க நேரிடும் என வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வட்டாரங்கக் தகவல் தெரிவித்தது.

சிறப்பு தனிப்படை போலீஸ்
இதற்கிடையில் படப்பை குணாவின் கூட்டாளிகளை கைது செய்யும் நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் ஏடிஎஸ்பி வெள்ளதுரை தலைமையில் சிறப்பு தனிப்படை போலீசார் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியான பிரபல ரவுடி படப்பை குணாவின் வலதுகரமாக இருந்த போந்தூர் பகுதியை சேர்ந்த சேட்டு என்பவரை கைது செய்து தற்போது சிறையில் அடைத்துள்ளனர்.

மாம்பாக்கம் பகுதி
மேலும் பிரபல ரவுடி படப்பை குணாவின் கூட்டாளியும் மாம்பாக்கம் பகுதியை சேர்ந்தவருமான பிரபு என்பவர் ஸ்ரீபெரும்புதூரை சுற்றி உள்ள தொழிற்சாலைகளில் தொழிற்சாலையின் கழிவுகளை டெண்டர் எடுத்து தொழில் செய்து வருகிறார். ஒரு நாளைக்கு ஒரு டன் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், மாதத்திற்கு 100 டன்னுக்கு மேல் எடுத்துச் சென்று விற்பனை செய்வது தெரிய வந்ததை அடுத்து விதிமீறல் காரணமாக தனிப்படை போலீசார் அவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications