காஞ்சிபுரம்: போராட்டத்தை கைவிடவில்லை எனில்.. தீபாவளி பரிசு கிடையாது! சாம்சங் நிறுவனம் மிரட்டல்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் இயங்கி வரும் சாம்சங் நிறுவனத்தில் தொழிற்சங்கம் அமைக்க வேண்டும் என தொழிலாளர்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில், போராட்டத்தை கைவிடவில்லை எனில், தொழிலாளர்களுக்கு தீபாவளி பரிசு கிடையாது என நிறுவனம் எச்சரித்துள்ளது.
சுங்குவார்சத்திரத்தில் அமைந்துள்ள சாம்சங் என்கிற கொரியன் நிறுவனம் டிவி, பிரிட்ஜ் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்களை உற்பத்தி செய்து வருகிறது. கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேல் இப்பகுதியில் இந்த நிறுவனம் இயங்கி வருகிறது. குறைந்த சம்பளம், சட்டத்துக்கு புறம்பான பணி நிலைமைகள், அனுமதிக்கப்பட்ட விடுமுறைகளையே பயன்படுத்த முடியாத சூழல் என பல்வேறு குற்றச்சாட்டுக்கள் இந்நிறுவனத்தின் மீது எழுந்திருக்கிறது.

இந்த நிலையில் அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் சிஐடியு சங்கத்தில் சேர்ந்து சங்கம் பதிவு செய்வதற்காக அனைத்து ஆவணங்களும் வழங்கியுள்ளனர். ஆனால், தொழிலாளர் நலத்துறை இதுவரை சங்கத்தை பதிவு செய்யவில்லை. இதை எதிர்த்து சாம்சங் தொழிலாளர்கள் 10 நாட்களுக்கும் மேலாக போராடி வருகின்றனர். அவர்கள் மீது காவல்துறை அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டுள்ளதாக சிஐடியு குற்றம்சாட்டியுள்ளது.
போராடும் சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாகவும், காவல்துறையின் நடவடிக்கைகளை கண்டித்தும் சிஐடியு மட்டுமின்றி, ஏஐடியுசி, ஏ.ஐ.யு.டி.யு.சி., ஹெச்.எம்.எஸ். எல்.டி.யு.சி உட்பட பல்வேறு மத்திய தொழிற்சங்கங்களும் இணைந்து கடந்த 18ம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இந்த போராட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி வழங்கவில்லை.
அதே நேரம், போராட்ட இடத்தில் குவிந்திருந்த சிஐடியு மாநில தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான அ. சவுந்தரராசன், பொதுச்செயலாளர் ஜி. சுகுமாரன், எஸ். கண்ணன், ஏஐடியுசி மாநில பொதுச் செயலாளர் ராதாகிருஷ்ணன், சிவகுமார் உள்ளிட்ட தலைவர்களை கைது செய்து அழைத்து சென்றிருக்கின்றனர்.
இதற்கு சிபிஎம் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், “முதலீடுகளை ஈர்க்க வேண்டுமென்கிற தமிழக அரசின் விருப்பத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புரிந்து கொள்கிறது. மூலதன வருகை என்பதே மாநிலத்தின் நலன், தொழிலாளர் நலன் என்பதிலிருந்துதான். அவற்றை மறுத்துவிட்டு மூதலீடுகள் வருவது என்பது நோக்கத்தை நிறைவு செய்யாது. இந்த பகுதியில் சிஐடியு தலைமை தாங்கியுள்ள 50-க்கும் மேற்பட்ட சங்கங்கள் பன்னாட்டு நிறுவனங்களில் இயங்கி வருகின்றன. அங்கெல்லாம் எந்த பிரச்சினையும் ஏற்பட்டது கிடையாது. முதலீடுகள் வருவதற்கு சங்கம் வைப்பது தடையாகவும் இல்லை.
எனவே, தொழிலாளர்களின் கோரிக்கைக்கு இணங்க சட்டப்படியான தொழிற்சங்கத்தை பதிவு செய்வதற்கு தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டுமென்றும், சட்டப்படியான தொழிற்சங்க நடவடிக்கைகளை முடக்கும் முறையில் காவல்துறை நடந்து கொள்வதை அனுமதிக்கக் கூடாது என்றும், இந்த பிரச்சினையில் சுமூகத் தீர்வு காண அரசு தலையிட வேண்டுமென்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது” என்று அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபடுவோரின் அடையாள அட்டையை சுங்குவார்சத்திரத்தில் இயங்கி வரும் சாம்சங் நிறுவனம் ரத்து செய்திருக்கிறது. அதேபோல, போரட்டத்தை கைவிடவில்லை என்றால் தீபாவளி பரிசு கிடையாது என்றும் மிரட்டல் விடுத்திருக்கிறது.
இந்நிறுவனத்தில் வேலை பார்த்த ஊழியரின் குழந்தை சில நாட்களுக்கு முன்னர் உடல்நலக்குறைவு காரணமாக பாதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அதற்கு கூட அந்த ஊழியருக்கு விடுப்பு வழங்கப்படவில்லை. இறுதியில் அக்குழந்தை உயிரிழந்துவிட்டது. குழந்தையின் மரணம் குறித்து ஊழியரின் மனைவி சாம்சங் HR-இடம் ஆதங்கப்பட்டிருக்கிறார். இது தொடர்பான ஆடியோ வேகமாக பரவிவருகிறது.












Click it and Unblock the Notifications