கருகிய முகத்துடன் ஏரியில் மிதந்த 3 சடலங்கள்.. ப்ளஸ் 2 மாணவர்களாச்சே! கதிகலங்கிப் போன காஞ்சிபுரம்!
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே ஏரியில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மூன்று மாணவர்களின் சடலம் முகம் எரிக்கப்பட்ட நிலையில் மிதந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் கொடூர கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.
தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று மாட்டுப் பொங்கல் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் காஞ்சிபுரத்தில் தான் இந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே காட்டாங்குளம் ஊராட்சியில் விழுதவாடி என்ற கிராமம் உள்ளது. அதற்கு அருகே உள்ள ஏரிக் கரையில் மூன்று உடல்கள் மிதப்பதாக பகுதி மக்கள் உத்தரமேரூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
தகவல் கிடைத்தவுடன் காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கர் கணேஷ் மற்றும் உத்திரமேரூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தொடர்ந்து நீண்ட நேரம் போராட்டத்திற்கு பிறகு ஏரியில் மிதந்த மூன்று சடலங்கள் மீட்கப்பட்டது. கடந்த இரண்டு மூன்று தினங்களுக்கு முன்பே அந்த சடலங்கள் ஏரியில் வீசப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் அவர்களது முகங்கள் எரிக்கப்பட்ட நிலையில் இருந்ததால் அவர்களை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டது.
இந்த நிலையில் போலீசார் நடத்திய தீவிர விசாரணை அடிப்படையில் அவர்கள் பழையசீவரத்தை சேர்ந்த விஷ்வா, சத்ரியன், பரத் ஆகியோர் என்பது தெரியவந்தது. மூன்று பேருமே வாலாஜாபாத் அருகே இருக்கும் பள்ளியில் வகுப்பு படித்து வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்களது உடலை மீட்ட போலீசார் உடற் கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணையில் உயிரிழந்த பரத்திற்கும் சிறுமையூர் கிராமத்தைச் சேர்ந்த சஞ்சய் என்பவருக்கும் பிரச்சனை இருந்ததாக கூறப்படுகிறது. அந்த மோதலில் மூவரும் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications