தாய் கண் முன்னே நடந்த சோகம்.. “காரணம் அவங்கதான்?”.. 2 பேர் கைது.. நீச்சல் குளத்திற்கு சீல்!
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே நீச்சல் குளத்தில் 6 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவத்தில், தனியார் நீச்சல் குளத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் 2 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையை அடுத்த நீலமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் நந்தகுமார். இவரது மனைவி தாரிகா (35), இவர்களுடைய மகன்கள் சஸ்வின் வைபவ் (வயது 6), சித்விக் வைபவ் (2). ஒன்றாம் வகுப்பு படித்து வந்த சஸ்வின் வைபவ்வை கோடை விடுமுறையை ஒட்டி நீலமங்கலத்தில் உள்ள தனியார் நீச்சல் குளத்தில் பயிற்சிக்கு சேர்த்துள்ளனர்.

நேற்று முன்தினம் தாரிகா தனது மகன்களை நீச்சல் குளத்திற்கு நீச்சல் பயிற்சியில் ஈடுபட அழைத்து சென்றார். பின்னர் அங்கிருந்து தனது இளைய மகனுக்கு உணவு கொடுப்பதற்காக தாரிகா சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது சஸ்வின் வைபவ்வை காணவில்லை. பல இடங்களிலும் தன்னுடைய மகனை தேடி உள்ளார்.
அப்போது நீச்சல் குளத்தில் தன்னுடைய மகன் மூழ்கி கிடப்பதை பார்த்த தாரிகா அலறித் துடித்துள்ளார். சிறுவனை மீட்டு காட்டாங்கொளத்தூர் அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் சிறுவன் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
நீச்சல் குளத்தில் மூழ்கிய சிறுவனை பயிற்சியாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கண்காணிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து மணிமங்கலம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் நீச்சல் குளத்தில் மூழ்கி 6 வயது சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில் முறையான பாதுகாப்புகள் இன்றி இயங்கியதாக நீச்சல் குளத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. குன்றத்தூர் தாசில்தார் மற்றும் கிராம அலுவலர் தலைமையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு நீச்சல் குளத்திற்கு சீல் வைக்கப்பட்டது.
மேலும், நீச்சல் குளத்தில் சிறுவன் உயிரிழந்தது தொடர்பாக நீச்சல் குளத்தின் உரிமையாளர் நாகராஜன், அவரது மகன் பிரபு ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications