போலீஸ் என்கவுண்டர்.. 2 ரவுடிகள் சுட்டுக்கொலை.. அதிகாலையில் அதிர்ந்த காஞ்சிபுரம்
காஞ்சிபுரம்: கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இரண்டு ரவுடிகள் காஞ்சிபுரம் காவல்துறையினர் நடத்திய என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
சென்னை, தாம்பரம், ஸ்ரீபெரும்புதூர், ஆவடி போன்ற பகுதிகளில் உள்ள ரவுடிகள் மீது காவல்துறையினர் கடந்த சில நாட்களாக கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தொடர் குற்றங்களில் ஈடுபடுவோர் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்படுகின்றனர்.

அதிபயங்கர ரவுடிகள் மீது என்கவுன்டர் நடவடிக்கையும் காவல்துறையால் எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் ரவுடிகள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் காஞ்சிபுரத்தில் இன்று அதிகாலையில் இரண்டு ரவுடிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.
காஞ்சிபுரம் பல்லவர் மேடு பகுதியை சேர்ந்தவர் பிரபா(35) என்கிற சரவணன். இவர் மீது கொலை, கொள்ளை, கஞ்சா விற்பனை, திருட்டு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் 40-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. பல்லவர் மேடு பகுதியில் குட்டி ரவுடியாக வலம் வந்த பிரபா, அவ்வப்போது சிறைக்கு செல்வதும் ஜாமினில் வெளி வருவதுமாக இருந்து வந்தார்.
இந்நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வழக்கு ஒன்றில் பிரபாவை கைது செய்ய போலீசார் முயற்சி செய்தபோது தப்பி ஓடியதில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் அவருக்கு காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, பிளேட் வைக்கப்பட்டுள்ளது.
ஜாமினில் வெளியே வந்த பிரபா காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றில், ஆஜராவதற்காக பல்லவர் மேடு பகுதியில் இருந்து நடந்து சென்றார். அப்போது வெள்ளை நிற காரில் வந்த மர்ம கும்பல் ஒன்று அவரை இடிப்பது போன்று வந்துள்ளது. சுதாரித்துக் கொண்ட பிரபா அங்கிருந்து ஓட முயற்சி செய்தார்.
காலில் அறுவை சிகிச்சை செய்ததால் வேகமாக ஓட முடியாத பிரபா அந்த கும்பலிடம் சிக்கிக் கொண்டார். ஹெல்மெட் அணிந்து வந்த மூன்று பேர் கொண்ட மர்ம கும்பல் பட்டப் பகலில் சாலையில் வைத்து பிரபாவை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றது.
முகம் சிதைக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் நிகழ்விடத்திலேயே பிரபா துடிதுடித்து உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிவகாஞ்சி போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். விசாரணையில் முன்பகை காரணமாக இந்த கொலை சம்பவம் நடந்தேறியிருப்பது தெரியவந்தது.
உயிரிழந்த பிரபாவின், சகோதரர் நாராயணமூர்த்தியை, ரகு என்பவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் வெட்டிக் கொலை செய்தார். ரகுவை பழிக்கு பழி வாங்க திட்டம் தீட்டி காத்திருந்த பிரபா, அவரது இரு சகோதரர்களை கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. இந்த இரண்டு கொலை சம்பவங்களுக்கும் பழிக்குப் பழியாக, பிரபா கொலை செய்யப்பட்டிருக்கலாம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடிகள் புதிய ரயில் நிலையம் அருகே பதுங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். புதிய ரயில் நிலையம் அருகே இந்திரா நகர் சர்வீஸ் சாலையில் பதுங்கி இருந்த ரவுடிகளை காவல்துறையினர் சுற்றி வளைத்தனர்.
அப்போது காவல்துறையினரை தாக்கி விட்டு ரவுடிகள் தப்பி ஓட முயற்சி செய்தனர். இதனையடுத்து காவல்துறையினர் ரவுடிகள் மீது தூப்பாக்கி சூடு நடத்தினர். காயமடைந்த ரவுடிகளை மருத்துமனைக்கு கொண்டு சென்ற போது அவர்கள் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ரவுடிகள் தாக்கியதில் படுகாயமடைந்த காவலர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
என்கவுன்டர் செய்யப்பட்ட ரவுடிகளின் பெயர் ரகு என்கிற ரகுவரன், கருப்பு பாட்ஷா என்கிற ஹசைன் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரவுடிகள் இருவரும் காவல்துறையினரை அரிவாளால் தாக்கியதால் தற்காப்புக்காகத் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் உயிரிழந்துள்ளனர். சிறப்புக் காவல் உதவியாளர் ராமலிங்கம், காவலர் சசிகுமார் ஆகிய இருவரையும் ரவுடிகள் அரிவாளால் தாக்கியுள்ள நிலையில் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications