பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர்.. மயக்கவியல் துறை மருத்துவ மாணவி தற்கொலை.. நடந்தது என்ன?
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் தனியார் மருத்துவக் கல்லூரியில் மயக்கவியல் துறை முதுகலை மாணவி தற்கொலை வழக்கில் பேராசிரியர் மற்றும் சீனியர் மாணவர்கள் உள்பட 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் வி.டி.சி நகரைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகள் சுகிர்தா (27). இவர் குமரி மாவட்டம் குலசேகரம் பகுதியில் உள்ள ஸ்ரீ மூகாம்பிகா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் மயக்கவியல் துறையில் முதுகலை பட்டம் படித்து வந்தார்.

இவர் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்தார். கடந்த 6ஆம் தேதி கல்லூரி செல்லாமல் இவர் விடுதியிலேயே தங்கிவிட்டதாக தெரிகிறது. கல்லூரி முடிந்து சக மாணவிகள் விடுதிக்கு சென்றனர்.
அப்போது சுகிர்தாவுடன் தங்கியிருந்த மாணவிகள் அவருடைய அறைக்கு சென்ற போது அந்த அறை உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. நீண்ட நேரமாக தட்டியும் கதவு திறக்கப்படவில்லை. இதனால் மாணவிகள் கல்லூரி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது மாணவி சுகிர்தா இறந்து கிடந்தார்.
உடன் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சுகிர்தாவின் உடலை கைப்பற்றிய போலீஸார் அவரை ஆசாரிப்பள்ளத்தில் உள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து அந்த அறையை சோதனை செய்த போது அங்கு ஊசியும் மருந்து பாட்டிலும் இருந்தது. அந்த மருந்து குறித்து மருத்துவர்களிடம் கேட்டபோது அது தசைகளை தளர்வடையச் செய்யும் மருந்து என்றனர்.
மேலும் அறையை சோதனையிட்ட போது ஒரு கடிதம் சிக்கியது. அதில் டாக்டர் பரமசிவன் மயக்கவியல் துறை பேராசிரியர் தன்னை உடலளவிலும் மனதளவிலும் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் டாக்டர் ஹரீஷ், டாக்டர் ப்ரீத்தி ஆகியோர் மனதளவில் துன்புறுத்தியதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தனது மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாக சுகிர்தாவின் தந்தை காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். இதையடுத்து தற்கொலைக்கு தூண்டியதாக இதுவரை 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால் அவர்கள் கைது செய்யப்படவில்லை என அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் குற்றம்சாட்டப்பட்ட பரமசிவன், ஹரீஷ், ப்ரீத்தி ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட நிர்வாகத்திடம் கல்லூரி நிர்வாகம் அளித்த அறிக்கையில் பேராசிரியர் சஸ்பெண்ட் என தகவல் கிடைத்துள்ளது. மேலும் விடுதியில் வரும் புகார்களை விசாரிக்க குழு அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications