எச்சரித்தும் கேட்கலையே! கன்னியாகுமரி கடலில் ராட்சத அலையில் சிக்கி 5 மருத்துவ மாணவர்கள் பலி!
கன்னியாகுமரி: கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி எஸ்ஆர்எம் மருத்துவ கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் நாகர்கோவிலில் நடந்த திருமணத்திற்கு வந்தனர். கடந்த 5 ஆம் தேதியான நேற்று அவர்கள் வந்த நிலையில் திருமணம் நடந்த வீட்டில் தங்கியிருந்தனர்.

சுமார் 12 பேர் நண்பர்கள் வந்திருந்தனர். இவர்கள் கன்னியாகுமரியில் சூரிய உதயத்தை பார்த்துவிட்டு அங்கிருந்து ராஜாக்கமங்கலம் லெமூர் கடற்கரைக்கு இன்று காலை 9 மணிக்கு சென்றனர்.
அப்போது சிலர் கடலில் கால் நனைத்து விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்கள் ரொம்ப தூரம் கூட போகவில்லை. ஆனால் திடீரென கரைக்கு வந்த ராட்சத அலை 6 பேரை இழுத்துச் சென்றது. இதில் ஒரு மாணவி மட்டும் உயிர் தப்பினார். 3 மாணவிகள், இரு மாணவர்கள் என 5 பேர் நீரில் மூழ்கி பலியாகிவிட்டனர்.
உயிருடன் மீட்கப்பட்ட மாணவி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கன்னியாகுமரி தேங்காய்பட்டினம் கடற்கரைக்கு நேற்று வந்த பிரேமதாஸ் தனது 7 வயது மகள் ஆதிஷாவுடன் தண்ணீரில் கால் நனைத்தார். அப்போது ராட்சத அலை இருவரையும் அடித்துச் சென்றது.
இதையடுத்து அங்கிருந்த மக்கள் பிரேமதாஸை காப்பாற்றினர். ஆனால் 7 வயது ஆதிஷா நீரில் அடித்துச் செல்லப்பட்டார். நேற்று முழுவதும் அவரை தேடும் பணிகள் நடந்த நிலையில் இன்று காலை அவருடைய உடல் சடலமாக கிடைத்தது.
தென் தமிழகம், கேரளா உள்ளிட்ட கடல் பகுதிகளில் காற்றின் போக்கு காரணமாக கடல் அலைகள் அதிக உயரத்திற்கு எழும்பும் என்றும் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்றும் இந்திய கடல்சார் ஆய்வு மையம் அறிவுறுத்தியது. இதனால் யாரும் கடலோர பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டனர். இன்றைய தினம் வரை தமிழகத்தில் உள்ள கடற்கரைகளில் ராட்சத அலைகள் எழும்பும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications