பிரபல தனியார் மருத்துவ கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை.. உருக்கமான கடிதம் சிக்கியது
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி படித்த மருத்துவ மாணவி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மாணவி எழுதிய கடிதத்தை கைப்பற்றிய குலசேகரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கல்லூரியில் படிக்கும் போது, சிலர் விபரீதமான முடிவெடுத்து தற்கொலைக்கு முயல்வது அடிக்கடி நடக்கிறது. அப்படி தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கையும் அதிமாக உள்ளது. பெற்றோர்கள் பிள்ளைகளிடம் அதிக நேரம் செலவிடாமல் வாழ்வது பின்னாளில் அவர்களது வாழ்வில் சிக்கல்களை ஏற்படுத்துகிறது.

பல குழந்தைகள் இறப்பிற்கு பின்னணி என்ன என்று யோசித்து பார்த்தால், அதிகமான செல்லம் கொடுத்திருப்பார்கள், சிறு பிரச்சனைகளை கூட ஏற்படாத அளவிற்கு வளர்த்திருப்பார்கள். வாழ்வில் சிக்கல்களை சந்திக்காத அளவிற்கு வருவோர், பின்னாளில் எதார்த்தமான நிலை வரும் போது தவறான முடிவு எடுக்கிறார்கள். எனவே வாழ்வில் நெருக்கடியான சூழல்களை கையாள கற்றுக்கொடுப்பதும் முக்கியம்.
சரி விஷயத்திற்கு வருவோம் . தூத்துக்குடி வி.டி.சி. நகரைச் சேர்ந்தவர் சிவகுமார். இவர் வியாபாரி ஆவார். இவருடைய மகள் சுகிர்தா . 27 வயதாகும் இவர் குமரி மாவட்டம் குலசேகரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவக்கல்லூரியில் முதுநிலை மருத்துவம் 2-ம் ஆண்டு படித்து வந்திருக்கிறார்.
மருத்துவ மாணவி சுகிர்தா குலசேகரத்தில் உள்ள கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி தான் படித்து வந்தார். நேற்று கல்லூரிக்கு செல்லவில்லை. விடுதியிலேயே இருந்திருக்கிறார். இந்நிலையில் மாணவி கல்லூரிக்கு வராத நிலையில் விடுதி அறையில் திடீரென இறந்து கிடந்திருக்கிறார். இதை பார்த்த சக மாணவிகள் உடனடியாக கல்லூரி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்திருக்கிறார்கள்.
கல்லூரி நிர்வாகத்தினரும் உடனடியாக குலசேகரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து குலசேகரம் போலீசார் நேரில் வந்து மாணவி சுகிர்தாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தினர். அப்போது மேலும் மாணவியின் அறையில் போலீசார் சோதனை செய்த போது ஊசி மற்றும் மருந்து சிக்கி இருந்தது.
இதை வைத்து போலீசார் விசாரணை நடத்தியதில், தசையை தளர்வடைய செய்யும் மருந்தை ஊசி மூலம் தன்னுடைய உடலில் செலுத்தி சுகிர்தா தற்கொலை செய்திருக்கலாம் என கூறியிருக்கிறார்கள். இதனிடையே து தற்கொலை செய்து கொண்ட மாணவி சுகிர்தா எழுதி வைத்த உருக்கமான கடிதம் ஒன்றையும் போலீசார் கைப்பற்றி உள்ளார்கள். தொடர்ந்து மாணவி தற்கொலை தொடர்பாக குலசேகரம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)












Click it and Unblock the Notifications