"யாரு சாமி இவரு".. ஊரே வெள்ளத்துல மிதக்குது.. இப்ப போய் இத்தனை கடமை உணர்ச்சியா?.. குமரியில் கலகல!
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கனமழை கொட்டி வரும் நிலையில் வீட்டிற்கு ஒருவர் பெயின்ட் அடிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
Recommended Video
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. பெரும்பாலான இடங்களில் இதுவரை தண்ணீர் சூழாமல் இருந்ததாகவும் தற்போது வெள்ளப்பெருக்கெடுத்து ஓடுவதாகவும் மக்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளார்கள்.
சண்முகபுரம், முஞ்சிறை, செண்பகராமன் புதூர், சென்னித்தோட்டம், குழித்துறை, லாயவிளக்கு உள்ளிட்ட பகுதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மக்களை பேரிடர் மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டு நிவாரண முகாம்களுக்கு அழைத்து சென்றுவிட்டனர்.

திற்பரப்பு அருவி
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, வள்ளியாறு, பழைய ஆறு சிற்றார் அணைகளில் இருந்து வெளியேறும் உபரிநீரால் கோதையாறு, பரளியாறு, தாமிரபரணி ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. திற்பரப்பு அருவியிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. சுமார் 150 கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

ரப்பர் தோட்டங்கள்
வாழைத் தோட்டங்கள், ரப்பர் தோட்டங்களில் தண்ணீர் தேங்கி சேதமடைந்துள்ளன. இதனால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. வீடுகளில் உள்ள முக்கிய ஆவணங்கள், முக்கியமானவைகளை எடுத்துக் கொண்டு மக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டு வருகிறார்கள். இது ஒரு புறம் இருக்க கன்னியாகுமரி மழையை பயன்படுத்தி மீம்ஸ்களும் வெளியாகி வருகிறது.

துணி துவைத்தல்
அதில் சிலர் வீடுகளுக்குள் இருக்கும் தண்ணீரில் நீச்சல் போட்டி நடத்துகிறார்கள், பெண்கள் மழைநீரில் துணி துவைக்கிறார்கள். வீட்டில் தேங்கியுள்ள தண்ணீரில் மீன்களை போட்டு மீன் பிடித்து விளையாடுகிறார்கள். இந்த காட்சிகள் எல்லாம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இந்த நிலையில் தற்போது ஒரு வீடியோ அனைவரின் கவனத்தையும் ஈர்த்து சிரிப்பை வரவழைக்கிறது.

வெள்ளப்பெருக்கு
உப்பனாற்றில் பெருவெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. கனமழையும் பெய்து வருகிறது. ஆனால் ஒருவர் வீட்டிற்கு பெயிண்ட் அடித்து வருகிறார். பொதுவாக சுண்ணாம்பு, பெயிண்ட், வீட்டை சீரமைத்தல், வீடு கட்டுதல் உள்ளிட்டவை மழைக் காலங்களில் செய்யப்படமாட்டாது. அப்படியே செய்தாலும் வீணாகிவிடும். ஆனால் இவரோ நம்ம யார் வம்புக்கும் போறது இல்ல யார் தும்புக்கும் போறது இல்ல, நம்ம உண்டு நம்ம வேலை உண்டுனு இருக்கிறார். யாருமே இல்லாத கடையில் யாருக்குடா டீ ஆத்துற, உன் கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையானு ஒரு படத்தில் நடிகர் விவேக் நகைச்சுவையாக கேட்பார். அது போல் இருக்கிறது இந்த பெயிண்டரின் கடமை உணர்ச்சி!












Click it and Unblock the Notifications