அய்யப்ப பக்தர்கள் மீது தாக்குதல்... தமிழக - கேரளா எல்லையில் பரபரப்பு
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளைவில் இருமுடி கட்டுடன் சபரிமலை செல்ல இருந்த அய்யப்ப பக்தர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
களியக்காவிளை அருகே உள்ள மேக்கோடு பனங்காலை பகுதியை சேர்ந்தவர் சனுபிரசாத். அவரது தலைமையில் 11 பேர் சபரிமலை செல்ல இருமுடி கட்டி சரணகோஷம் எழுப்பியவாறு நடந்து சென்று கொண்டிருந்தனர்.
அப்போது களியக்காவிளை ஆர்.சி தெரு வழியாக வந்த போது, திடீரென ஆட்டோ ஓட்டுனர்களான அசோகன், முஸ்தபா, டைட்டஸ் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து இருமுடி கட்டுடன் வந்த அய்யப்ப பக்தர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.
கத்திகுத்து சம்பவம்
இதில் பிரசாத் , ஜெரின் ஆகியோருக்கு கத்தி குத்து பட்டு படுகாயம் அடைந்தனர். மேலும் சிலர் காயமடைந்தனர். இதனையடுத்து, அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
சாலை மறியல்
இதனிடையே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கேட்டு இருமுடி கட்டுடன் மற்ற பக்தர்கள் திருவனந்தபுரம் - நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
போராட்டம் வாபஸ்
தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சம்பவத்தில் தொடர்புடைய அசோகன் என்பவரை விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இதனையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.
கேரளா எல்லையில் சம்பவம்
சபரிமலை அய்யப்பன் கோவிலில் பெண்களை அனுமதித்ததற்கு கண்டனம் தெரிவித்து நேற்று கேரளாவில் பந்த் நடந்த நிலையில், தமிழக - கேரள எல்லையான களியக்காவிளைவில் நடந்த இந்த கத்திக்குத்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.