கன்னியாகுமரி சுற்றுலா தலத்தில் இதுதான் நடக்கிறது.. அறநிலையத்துறை vs பேரூராட்சி.. கலெக்டர் தகவல்
கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் காலியிடம் அரசு புறம்போக்கு கோவில் என வருவாய்த்துறை ஆவணங்களில் உள்ளது. ஆனால் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதால் அங்கு அமைந்துள்ள கடைக்கட்டிடங்களின் வருவாய் அனைத்தும் அறநிலையத்துறைக்கு செல்கிறது. எனினும் சுற்றுலா பயணிகளுக்கான அடிப்படை வசதிக்காக செலவு செய்வது பேரூராட்சி நிர்வாகம் தான் என கலெக்டர் அழகுமீனா தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அழகு மீனா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: "கன்னியாகுமரி பேரூராட்சிக்குட்பட்ட திரிவேணி சங்கமம், சுனாமி பூங்கா, முக்கோண பூங்கா, சூரிய உதயம் மற்றும் அஸ்தமன பகுதி உள்ளிட்ட சுற்றுலாத்தலங்கள் பேரூராட்சியால் சீரமைத்து பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கன்னியாகுமரி பேரூராட்சி பகுதியில் அமைந்துள்ள பகவதி அம்மன் திருக்கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோவிலின் முன்புறம் அரசர்கள் தங்கும் கொட்டாரம் அமைந்துள்ளது. பின்பகுதியில் சுமார் 018.6 ஹெக்டேர் (46 சென்ட்) பரப்புள்ள காலியிடம் அமைந்துள்ளது.

காலியிடம் அரசு புறம்போக்கு கோவில் என வருவாய்த்துறை ஆவணங்களில் உள்ளது. ஆனால் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதால் அங்கு அமைந்துள்ள கடைக்கட்டிடங்களின் வருவாய் அனைத்தும் அறநிலையத்துறைக்கு செல்கிறது.
தரை வாடகை, கடை மூலம் கிடைக்கும் வருவாயும், கழிப்பறை மூலம் கிடைக்கும் வருவாயும் அறநிலையத்துறைக்குச் செல்கிறது. ஆனால் சுற்றுலா பயணிகளுக்கான எந்த ஒரு அடிப்படை வசதியும் அறநிலையத்துறை மூலம் மேற்கொள்ளப்படவில்லை. செலவினங்கள் அனைத்தும் பேரூராட்சி மூலம் மேற்கொள்ளப்படும் போது அப்பகுதியில் இருந்து பெறப்படும் வருவாய் அனைத்தும் அறநிலையத்துறைக்கே சென்று விடுகிறது.
மேலும் திரிவேணி சங்கமம் பகுதியில் மெகா டூரிசம் 2010-2011 திட்டத்தில் ஆண், பெண் கழிப்பறை ரூ.20 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. 2019-2020 ஸ்வதேஷ் தர்சன் திட்டத்தில் உடை மாற்றும் அறை மற்றும் பொருள் பாதுகாப்பு அறையானது ரூ.84.97 லட்சத்திலும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி 2 எண்ணம் ரூ.57.46 லட்சத்திலும், சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் கடலில் குளிப்பதற்காக படிக்கட்டு வசதி ரூ.108.50 லட்சத்திலும் நடைபெற்று முடிந்துள்ளது.
மேலும் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவிற்கான ஆம்பி தியேட்டர் மற்றும் திரிவேணி சங்கம பகுதியில் பாதிப்படைந்த சுற்றுலா பயணிகள் அமரும் இருக்கைகள் புதுப்பித்தல், சுனாமி பார்க் புதுப்பித்தல், தாய்மார்கள் பாலூட்டும் அறைகள், மாற்றுத்திறனாளிகள் சாய்வுதளம், திரிவேணி சங்கமம் போகும் வழியிலுள்ள அலங்கார நீருற்று பராமரிப்பு செய்தல், காந்தி மண்டபம் எதிரே உள்ள முக்கோண பார்க் பராமரிப்பு பணி நடைபெற்று வருகிறது. சுற்றுலா தலத்தினை உலக தரத்திற்கு கொண்டு செல்ல அனைவரும் ஒத்துழைப்பு நல்கிட வேண்டும்" இவ்வாறு கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications